ஐனுல் கிப்லா ஹஜரத்களும் அறியாமையில் ஆழ்த்தப்படும் அவாம்களும்


அல்லாஹ்வை முன்னிறுத்தி சொல்கிறேன். அல்லாஹ் உடைய பள்ளியில் வைத்து சொல்கிறேன். நிறைந்த இடத்தில் வைத்து சொல்கிறேன். இந்த மாதிரி பீடிகைகளுடன் ஹஜரத்களால் சொல்லப்படும் கப்ஸாக்கள் ஏராளமாகவும் தாராளாகவும் பள்ளிவாசல்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. மக்களும் உணர்ச்சி பொங்க அல்லாஹு அக்பர் என்று கூறி அந்த கப்ஸாக்களுக்கு உரமூட்டிக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஹஜரத்கள் எந்த பள்ளிகளுக்குப் பேசப் போனாலும். அந்தந்த பள்ளிகளின் சிறப்புகளைப் பற்றி அளந்து விடுவார்கள். இது சாதாரண பள்ளி அல்ல. தப்பு செய்தவர்கள் யாரையும் விட்டு வைக்காத பள்ளி. இது காரணம் காட்டும் பள்ளி.

காரணம் காட்டும் பள்ளி என்பது தான் மறுவி  காட்டுப் பள்ளி என்று ஆகி விட்டது. இந்தப் பள்ளி காட்டிலா இருக்கிறது? ஊருக்குள் தான் இருக்கிறது. இது காட்டுப் பள்ளி அல்ல. காரணம் காட்டிய பள்ளி. காரணம் காட்டும் பள்ளி இப்படியாக பல சிறப்பு கப்ஸாக்களை அந்த பள்ளியின் பெயரால் அளந்து விடுவார்கள்.

அதில் மிக முக்கியமான சிறப்பாக இவர்கள் பேசும் ஒவ்வொரு பள்ளியிலும்  அந்தப் பள்ளியை ஐனுல் கிப்லா என்பார்கள். ஐனுல் கிப்லா என்றால் யாருக்கு என்ன தெரியும்? தெரிந்த மாதிரி தலையை மேலும் கீழுமாக ஆட்டிக் கொள்வார்கள்.

எல்லா பள்ளிகளும் கிப்லாவை நோக்கித்தான் மிஹ்ராபை அமைத்து இருப்பார்கள். இந்தப் பள்ளிவாசலை கட்டக் கூடிய அந்த நேரத்திலே. கிப்லா உடைய திசையை நோக்கி இந்த பள்ளியின் மிஹ்ராப் கட்டப்படவில்லை என்ற குண்டை போடுவார்கள்

உடனே எல்லாரும் அதிர்ச்சி அடைந்து ஹஜரத் அடுத்த என்ன சொல்லப் போகிறார் என்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனிப்பார்கள்.

கட்டிடம் கட்டிய கண்ணனுக்கும் கனகனுக்கும் கஃபாவை சுட்டிக் காட்டினார்கள். இதுதான் கஅஃபா என்று அவர்கள் கண்ணில் காட்டி மிஹ்ராப் கட்டினார்கள். கஅஃபாவை கண்ணால் நேரடியாக பார்த்து கிப்லா அமைக்கப்பட்டதால். இந்தப் பள்ளியை ஐனுல் கிப்லா என்று சொல்வார்கள்.

இதற்கு என்ன ஆதாரம் என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக. இதை வலிமார்கள் நாதாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்றும் அடித்து விடுவார்கள். இனி சாட்சிகள் தேவையா? போடு அல்லாஹு அக்பரை என்று அல்லாஹு அக்பர் போட்டு விடுவார்கள்

 இந்த 2019ல் உங்களிடம் சொன்ன வலிமார்கள் நாதாக்கள் யாரு ஹஜரத்? அந்த வலிமார்களை நாதாக்களை நாங்களும் கண்ணால் பார்க்க வேண்டும் என்று எந்த தலையாட்டிகளும் கேட்க மாட்டார்கள்.

இந்த மாதிரி ஹஜரத்கள் பேசும் எல்லா பள்ளிகளுக்கும் ஐனுல் கிப்லா பள்ளி என்ற சர்ட்பிகேட்டை கொடுத்து விடுவார்கள். உலகம் உருண்டை வடிவமாயிற்றே.  பூமியின் உருண்டையான அமைப்பு படி பார்க்க வாய்ப்பே இல்லையே!

பூமி தட்டை என்று வைத்துக் கொண்டாலும். கஃபாவின் உயரம் 53 அடிதானே. உலகத்திலேயே மிக உயரமான 165 மாடிகளுடைய  கட்டிட உயரம் 2722 அடி. அரபு நாட்டில் உள்ள அதைக் கூட பைனாகுலர் போன்ற துார  நோக்கு கருவிகளைக் கொண்டு. LIC யை விட உயரமான கட்டிடத்தின் மேல் நின்று பார்த்தாலும் தெரியாதே

இப்படியெல்லாம் விஞ்ஞான அடிப்படையில் அறிவுப்பூர்வமாக யாரும் கேட்கக் கூடாது. கேட்டால் ஐனுல் கிப்லா பள்ளியின் வடக்கு வாசல் காரணம் காட்டி கண்ணை கொத்தி விடும். அதற்கு பரிகாரமாக பள்ளியின் வடக்கு வாசலுக்கு மாலை வாங்கி போட வேண்டி வரும்.

கஃஅபாவை முன்னோக்கி தொழ வேண்டும் என்பது மஸ்ஜிதுல் ஹராமில் மட்டும் தான். அங்கு மட்டுமே கஃஅபாவை முன்னோக்கி தொழுதல் என்பது சாத்தியம்.

கஃஅபா என்பது கிழக்கில் 49அடி நீளமும், வடக்கில் 31 அடி நீளமும், மேற்கில் 45 அடி நீளமும், தெற்கில் 31 அடி நீளமும் தான் உள்ளது. அப்படி இருக்க அதை நோக்கி உலகில் உள்ள அனைவரும் தொழ முடியுமா என்று அறிவியல் ரீதியாக கேள்வி கேட்கவில்லை. அல்லாஹ் கஅஃபாவை நோக்கி  தொழும்படி கட்டளையிட்டுள்ளானா? என்பதுதான் கேள்வி. அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?

நபியே! நீங்கள் விரும்புகிற கிப்லாவை (திசையை) நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் (மஸ்ஜிதுல் ஹராமின்) திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 2:144  

நபியே! நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! (2:149,2:150 )

வெறுமனே மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்லாமல் ஷத்ரல் மஸ்ஜிதுல் ஹராம்  என்றே சொல்லி உள்ளான்


شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ


இப்படித்தான் அல்லாஹ்வே சொல்லி உள்ளான். கஅஃபா என்பது ஆதம்(அலை) அவர்களும் அவரது பிள்ளைகளும் தொழும் அளவிலான மிகச் சிறிய பள்ளிதான். மஸ்ஜிதுல் ஹராம் என்பது கஅஃபாவையும் உள்ளடக்கியது. மஸ்ஜிதுல் ஹராம் என்பது. கஅஃபாவையும் அதன் வளாகத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

நபி(ஸல்) காலத்திலேயே லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொழும் பெரிய பள்ளியாக ஆகி விட்டது. இன்று தினமும் 30 லட்சம் உலக மக்கள் ஒன்று கூடி தொழ வசதியான உலகிலேயே மிகப் பெரிய பள்ளியாக அது உள்ளது.

அவ்வளவு பெரிய பள்ளியாக இருந்தும் அந்த மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி தொழுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லை. மஸ்ஜிதுல் ஹராம் இருக்கும் பக்கம் (திசை) நோக்கி தொழுங்கள் என்றே கட்டளை இட்டுள்ளான். அப்படி இருக்க எதற்கு இந்த ஐனுல் கிப்லா கதைகள்?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.