மரணச் செய்தியா வந்து விட்டது? இழுத்துக் கொண்டே கிடந்தது போய் விட்டதா? தீர்வு என்ன?


ஏன் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… என்று சொல்லுங்கள். இந்த வசனம் போடப்பட்டவுடன் யாரோ இறந்து விட்டார்கள்.  மரணச் செய்தி வந்து விட்டது என்றுதான் பெரும்பாலானவர்கள் முடிவு செய்து விடுகிறோம். 2:155. வசனத்தில் உயிர் இழப்பு பற்றி மட்டும் சொல்லப்படவில்லை. பல வகை இழப்புகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_18.html
அதில் கூறப்படடுள்ள பயம்,  பசி,  உடைமைகள், செல்வங்கள், காய்கனிகள் போன்ற விளைபொருட்கள் என எந்த இழப்பு ஏற்பட்டாலும் இடி விழுந்த மாதிரிதான் இருக்கும். இந்த இழப்புகளை மறு முயற்சியில் ஈடு செய்து விடலாம். பயம் நீங்க வழி செய்து சரி செய்து விடலாம். உயிர் இழப்பை மட்டுமே் ஈடு செய்யவே முடியாது.

அந்த உயிர் இழப்பு ஏற்பட்டாலும் சில நாட்கள் தான் துக்கத்தில் இருப்போம். இளம் வயது மரணம் என்றால் இடி விழுந்த மாதிரிதான் இருக்கும். அதே நேரத்தில், வயது முதிர்ந்த, இன்றோ, நாளையோ, இப்பொழுதோ, பிறகோ  என்று எதிர் பார்க்கப்பட்டு இழுத்துக் கொண்டே கிடந்த ஒரு உயிர் போய் விட்டது என்றால். அங்கே இடி விழுந்த மாதிரியான நிலை இருக்காது. துக்கம் சிறிதாகவும் நிம்மதிதான் பெரிதாகவும் இருக்கும். இழுத்துக் கொண்டே கிடந்தவர் போய் விட்டால் அப்படித்தான் இருக்கும்

சிலர் இப்பொழுதாவது போனதே சனியன் என்று கூட சொல்லி விடுவார்கள். ஒருவர் செத்து விட்டால் அதையே நினைத்துக் கொண்டு இருப்பது இல்லை. சில சமுதாயத்தில் வயது முதிர்ந்த இழுத்துக் கொண்டே கிடந்தவர் போய் விட்டார் என்றால் ரொம்ப மகிழ்ச்சியாக விழாவாக கொண்டாடுகிறார்கள். இதுதான் உலகம்.    

பல இழப்புகள் மூலம் நிச்சயமாக சோதிப்போம் என்று சொன்ன அல்லாஹ் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  என்றும் கூறி உள்ளான். நற்செய்தியும் இழப்பை விட மேலான சிறந்த ஈடும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சோதனைகள் ஏற்படும் போது,
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் - சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்களாக இருக்கின்றோம்.
اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா

அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக! எனக்கு இதை விடச் சிறந்ததை - மேலானதை ஈடாக- பகரமாகத் தருவாயாக!
இவ்வாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தால் இழந்ததைவிடச் சிறந்த, மேலான ஒன்றை அல்லாஹ் பகரமாக ஈடாக ஆக்கி விடுகின்றான். என அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டு அனுபவ ரீதியாகக் கண்ட வரலாற்று சம்பவம் இதோ.
உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கணவர் அபூஸலமா (ரலி) அவர்கள் இறந்த போது, துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிய அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா என்ற துஆவை கற்றுக் கொடுத்தார்கள்.
முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்கள் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார் என உம்மு ஸலமா (ரலி) எண்ணினார்கள். இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்த துஆ ஆயிற்றே என்று அந்தப் பிரார்த்தனையைக் செய்து வந்தார்கள்.. அல்லாஹ் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே பகரமாக வழங்கினான். நூல் : முஸ்லிம் 1525
இது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த துஆ- பிரார்த்தனையாகும். இந்தப் துஆவை பிரார்த்தனையை நம்பிக்கையுடன் செய்தவருக்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. அதற்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. ஆகவே யாரும் அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். 


Comments