இந்தியருக்கு கார் ஓட்டிய ஒமான் மன்னர்.

அதன் பின்னர் நான் கண்ட இன்னொரு நல்ல அம்சம், ”மீட் த பீப்பிள்” என்ற திட்டம். ஆண்டுக்கு 1 மாதம் வரை ஓமான் முழுக்கச் சுற்றுப் பயணம் செய்து, கிராமங்களில் தங்கி மக்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாகக் கேட்டுச் செய்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு பெரும் அமைச்சர்கள் படையே உடன் செல்லும். என்னென்ன தேவை, எத்தனை நாளில் வேலை முடிக்கப்படும், என்ன செலவு, யார் பொறுப்பு என்பதெல்லாம் அங்கேயே முடிவாகும். அதன் ஆடிட்டிங் ரிப்போர்ட் அரசருக்குக் கிராம வாரியாக, அவர் இட்ட உத்தரவுகள் வாரியாக மாதாமாதம் செல்லும். ஆரம்பத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு சுற்றுப் பயணம் செய்யும்போதுகூட வேலையை முடிக்காமல் வைத்திருந்த மந்திரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

ரூவி (Ruwi) முதல் சீப் (Seeb) வரையிலான சாலையின் (துபாய் ஹைவே) டிவைடர்கள் ஆங்காங்கே உடைந்திருக்கும், பொத்தலாய் இருக்கும். இந்தப் பொத்தல்கள் இரும்பு கிரிலை உடைத்துக்கொண்டு கார்கள் ஒரு தரப்பிலிருந்து மறுபக்கத்துக்கு பாய்ந்ததால் வந்தது.
ஒரு முறை, பார்லிமெண்ட் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் இது என்ன சாலையைப் பிரிக்கும் தடுப்பு கிரிலில் இத்தனை ஓட்டைகள் என அரசர் கேட்டார். வண்டிகள் வேகமாக செல்லும்போது, கட்டுப்பாடு இழந்து சென்ற வண்டிகள் இடித்ததால் வந்தவை எனச் சொல்லப்ப்ட்டது. இதன் மூலம் இறந்தவர்கள், இந்த டிரைவர்களால் அல்லர். தவறே செய்யாத மற்றவர்கள் (அடுத்த தரப்பில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் பயணித்தோர்).
இறந்ததையெல்லாம் பார்த்த பின்னர்கூட உங்களுக்கு இதைச் சரி செய்யத் தோன்றாதா எனக் கேட்டு, இன்றிலிருந்து 40 நாட்களுக்குள் 1 மீட்டர் உயரத்தில் கான்க்ரீட்டில் டிவைடர்கள் வைத்தாக வேண்டும் எனச் சொல்லி, செய்தும் காண்பித்தார்கள். 40 கிலோமீட்டருக்கான டிவைடர்கள் 40 நாட்களில் போடப்பட்டது. சாலையைக் கடக்க நடை மேடைகளும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் அமைக்கப்பட்டது. எல்லாம் நேரடி மேற்பார்வையில் நடந்தது. அதை அமைத்த பின்னர், சாலையை அபாயகரமாகக் கடப்போர், விசா கேன்சல் செய்து ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
மஸ்கட் நகரத்தை மிக அருமையாகத் திட்டமிட்டு உருவாக்கினார். நமது குஷ்வந்த் சிங், "இறக்கும் முன்னர் மஸ்கட்டைச் சென்று பார்" என ஒரு கட்டுரை எழுதினார். (See Muscat before you die). அந்த அளவு அழகான நகரமாகவும், மிக அருமையான விதிமுறைகள் கொண்ட, வாழ்வதற்கு மிக விரும்பும் நகரமாகவும் ஆக்கினார்.

மஸ்கட்
தொலைதூரக் கிராமம் தோறும் பள்ளிகள், மருத்துவமனை, காவல் நிலையம் எல்லாம் அமைத்து எல்லா ஓமானிகளுக்கும் எல்லாம் கிடைக்கும்படி செய்து கொடுத்தவர்.
”பெதூன்கள்” எனப்படும் நாடற்றவர்கள், ஏராளமானோர் தங்கி இருந்தனர், அவர்களுக்கும் எல்லா உதவிகளும் செய்து கொடுத்து மக்கள் அரசனாய் வாழ்ந்து வருகிறார். இந்த மலைவாழ் மக்களுக்கு உதவவென்றே ஒரு தனிப் போலிஸ் குழு செயல்பட்டது. அவர்கள் மலையில் இருந்து தீப்பந்தங்களை காண்பித்தால், ஹெலிகாப்டர் சென்று அவர்களை அழைத்து வந்து, வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து அனுப்பி வைக்கும்.
இஸ்லாத்தின் கோட்பாடான “உன் மதம் உனக்கு, என மதம் எனக்கு” (தீனுக்கும் வலியத்தீன்) என்ற சமய நல்லிணக்கத்தைத் தக்கியாவுக்காகச் சொல்லாமல், உண்மையிலேயே செய்து காட்டியவர். சிவன் கோவில் ஒன்றும், கிருஷ்ணன் கோவில் ஒன்றும் கட்டிக்கொள்ள அனுமதியளித்தவர். சில தேவாலயங்களும் உண்டு. ஒரு தற்காலிக விநாயகர் ஆலயம் ஒன்றும் காலா (Ghala) என்ற இடத்தில் உண்டு,
ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக வந்து, ஓமான் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த கிம்ஜி ராம்தாஸ் என்பவருக்கு ஓமானின் குடியுரிமையையும் கொடுத்தவர். கிம்ஜி ராம்தாஸ் குடும்பத்தினரின் குடும்பத் தலைவர் ஷேக் ஆஃப் இண்டியன் கம்யூனிட்டி என அழைக்கப்படுகின்றனர்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ சங்கர் தயாள் சர்மா அவர்களின் மாணவராக இந்தச் சுல்தான், சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். இந்தியாவில் புனேயில் வந்து படித்திருக்கிறார். அவரை ஓமானுக்கு வரவழைத்து மரியாதையைக் காண்பிப்பதற்காக, சங்கர்தயாள் சர்மா அவர்களை அமரவைத்து, காரைச் சுல்தானே அரண்மனை வரை ஓட்டிச் சென்றிருக்கிறார். தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியனுக்கு அவர் காண்பித்த மரியாதை அது.
இந்தியர்கள் மற்றும் ஓமானிகளின் வாணிபம், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. ஓமானின் மிகப் பெரிய வியாபாரக் குழுமமான பஹ்வான் குருப், அதன் அடைமொழிப் பெயரான ”பஹ்வான்” ஒரு இந்தியர் செய்த உதவிக்கான நன்றிக் கடனாக வைத்தது. மொத்தக் குடும்பங்களுக்கும் பஹ்வான் என்பதுதான் சர் நேம். சுஹைல் பஹ்வான், சாத் பாஹ்வான் என்ற இரு சகோதரர்களின் குடும்பங்களுக்கும் இதுதான் சர்நேம்.
இவ்வளவு தூரம் மக்கள் நலன் விரும்பும் அரசனாகவும், இந்தியர்கள் மற்றும் இந்தியா மீதான கரிசனமும் கொண்ட, மத நல்லிணக்கத்தை விரும்பும் சுல்தான் காஃபூஸ் பின் செய்த் பூரன உடல் நலத்துடன் மீண்டு வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும்.
Comments