நீங்களும் ஆலிம் ஆகலாம். அரபி பாட நிகழ்ச்சியை பார்க்கலாமா? பாடம் படிக்கலாமா?


நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற தலைப்பில் பாடம் நடத்தும் பீ.ஜே.யும் அவரது முன்னாள்களும் அரபி மதரஸாக்கள் தேவையா? என்று கேட்டார்கள். அரபி மதரஸாக்கள் தேவையே இல்லை என்று அவர்களே பதிலும் சொன்னார்கள். இஸ்லாத்தை தெரிவதற்கு ஆய்வு செய்வதற்கு அரபி தேவை இல்லை என்றார்கள்.

குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகள் தமிழில் வந்து விட்டன. ஆகவே மார்க்கத்தை அறிவதற்கு ஆய்வு செய்வதற்கு அரபி தேவையே இல்லை என்று அடித்துச் சொல்லித் திரிந்தார்கள்.
நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற தலைப்பில் இன்று இவர் என்ன சொல்கிறார்? மார்க்கத்தை ஆய்வு செய்து அறிவதற்கு அரபி மொழி வேண்டும் அவசியம் என்கிறார்.

மூல மொழியிலிருந்து அறிந்து கொள்கிற அளவுக்கு தெளிவு இருக்காது. ஒரு மொழி பெயர்ப்பாளர் தவறாக மொழி பெயர்ப்பு செய்து விட்டால். அதை வைத்துதான் சிந்தனை வேலை செய்யும்.

அரபி மொழி தெரியாது என்றால் அவன் இவன் சொன்ன விஷயங்களை அப்படியே நம்பிக் கொண்டு போகின்ற மாதிரி இருக்கும் என்கிறார்

அதுதானே தக்லீத் - கண்மூடிப் பின்பற்றுதல் அதைத்தானே கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அந்தப் பிரச்சாரத்தை எவ்வளவு வலுவாக வீரியமாக முன் வைத்தார்களோ அவ்வளவு வலுவாக அரபியை படிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்  வைத்து இருக்க வேண்டும் அல்லவா?

அரபி மதரஸாக்களில் எதைக் கற்றுக் கொடுக்கிறார்கள்அரபி கல்லுாரிகளில் ஏழு ஆண்டுகள் படித்துக் கொடுப்பது அரபி இலக்கணத்தைத் தான்

இப்பொழுது மேடை போட்டு ஆன் லைனிலும் நேரிலும் மக்களை கூட்டி வைத்து தெரியுதா? புரியுதா? விளங்குதா? கேக்குதா? என்று கேட்டும். ஆரம்பித்த பிறகு குறுக்கே நடக்கக் கூடாது. இப்படியெல்லாம் பீடிகை போட்டும் ஆரம்பிக்கிறார் இந்த அறிஞர்.

தமிழ் இலக்கணத்தையும் சேர்த்து பாடம் நடத்துகிறாரே இந்த அறிஞர். குறை சொன்ன அரபி மதரஸாக்களில் என்ன பாடம் நடத்தினார்கள்? இந்த இலக்கண பாடம்தான் நடத்தினார்கள். இந்த இலக்கணத்தைத்தான் ஏழு ஆண்டுகள் சொல்லிக் கொடுத்தார்கள்.

அந்த அரபி மதரஸாக்களில் படித்து பட்டம் வாங்கி வருகின்றவர்கள். குர்ஆன், ஹதீஸ்கள் முழுவதையும் கரைத்துக் குடித்த மார்க்கத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களாக ஆகி வருவதில்லை. அப்படி அவர்கள் சொன்னதும் இல்லை.

அரபி மொழி தெரிந்தவராகத்தான் வெளியில் வருகிறார்கள். அப்படித்தான் அவர்களை உருவாக்கினார்கள்

அரபி மொழியை அறிந்து வெளியாகும் அவர்கள் தான். அவர்களுக்குள்ள அறிவையும் கற்ற  அரபி மொழி அறிவையும் ஞானத்தையும் வைத்து மார்க்கத்தை ஆராய வேண்டும். ஹதீஸ்களை தேடி எடுக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸ்களில் கூறி உள்ளபடி குர்ஆனை ஹதீஸ்களை சிந்தித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதற்கான அடிப்படை தகுதிகளைத்தான் அரபி கல்லுாரிகளில் உருவாக்கி விடுகிறார்கள். இதைத்தான ஏழு ஆண்டுகளில் செய்கிறார்களே தவிர. அவர்களை பெரிய ஹதீஸ் கலை வல்லுணராகவோ மிகப் பெரிய முஜ்தஹிதாகவோ அவர்களை உருவாக்கி விட்டதாக யாரும் சொல்லவில்லை.

இப்பொழுது பெரிய பீடிகைப் போட்டு இவர் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறாரோ இதைத்தான் அங்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த மதரஸாக்கள் மீது எவ்வளவு குறைகள் சொன்னார்கள்? எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள்?

மார்க்கத்தை அறிய அந்த அரபி கல்லுாரிகளே தேவை இல்லை என்கிற மாதிரி சொன்னார்கள். அரபி மொழி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையெல்லாம் நாசப்படுத்தினார்கள்.

அரபி கல்லுாரிகளில் ஸனது பெற்றவர்களுக்கு அரபி கிதாபுகள் படிக்க தெரியுமா? இன்றைய அரபி பத்திரிக்கைகளை படிக்கத் தெரியுமா? இவர்கள் படித்த படிப்பை வைத்து அரபு நாட்டில் வேலை கிடைக்குமா? என்றெல்லாம் கிண்டலடித்தார்கள்.

அதன் பிறகு இவர்கள் உருவாக்கிய 4 வருஷ கோர்ஸில் சேர்ந்தவர்கள் நிலை என்ன?  ஸனது வாங்காமலே பிர்தவ்ஸி என்று போட்டு பரதேசிகளாய்த் திரியும் போலிகளை விட்டு விடுவோம். படித்து  பட்டம் ஸனது பெற்று வந்தவர்கள் நிலை என்ன?

அவர்களுக்கு அரபி கிதாபுகளை ஒழுங்காக படிக்கத் தெரியுமா? இலக்கணம் இலக்கியம் தெரியுமா? அத்தனை பேரும் அரை குறையாகத்தான் படித்து விட்டு வந்து இருக்கிறார்கள். இதை அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்களினால் நடக்கும் விவாதங்கள் மூலம் அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவருடன் 30 ஆண்டுகள் இருந்தவர்களையே இவர் கூமுட்டைகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இவர் படித்துக் கொடுக்கப் போகும் அரபி புஸுஹா படிப்பை வைத்து ஆம் அரபி(களிடம்) பேச முடியுமா?

அரபிகள் பேசுவதை புரிய முடியாது. அரபி பத்திரிக்கைகளை படிக்க முடியுமா? நடைமுறையில் உள்ள அரபி மொழிகளை முழுமையாக விளங்க முடியுமா?. அரபு நாட்டு ஆபீஸ்களில் வேலை பெற உதவுமா? என்றால் அறவே உதவாது.

இவர் நடத்தப் போகும் அரபி பாடத்தை படித்து விட்டு அரபிகளிடம் சரளமாகப் பேச உதவுமா?   
 
படித்துக் கொடுக்கப் போகும் அரபி வேறு. பழக்கத்தில் உள்ள அரபி வேறு. இந்த படிப்பை வைத்து 1400 ஆண்டுகளுக்கு முந்தைய குர்ஆன் ஹதீஸ்களில் உள்ள அரபி மொழியை விளங்க முடியும் என்கிறார்

எந்த அரபிக் கல்லுாரிகளிலாவது எங்களிடம் படித்தால் அரபு நாட்டு வேலை உறுதி. அரபிகளிடம் சரளமாக அரபியில் பேசலாம் என்று விளம்பரம் செய்தார்களா?

அப்படியானால் அன்று அரபி கல்லுாரிகளில் படித்து விட்டு அரபு நாட்டில் வேலை பெற முடியுமா? என்று கிண்டலடித்த இவர்கள் அத்தனை பேரும் எப்படிப்பட்ட உண்மையாளர்கள்?

அதே நேரத்தில், அரபி மொழியை இலக்கணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் குர்ஆன் ஹதீஸ்களை நேரடியாக பொருள் தெரிய வேண்டும். இந்த நோக்கில் இவரிடம்  ஆர்வத்துடன் படிக்கக் கூடிய மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பீ.ஜே. மீது உள்ள வெறுப்பால் இந்த உண்மையை நாம் மறுக்க மாட்டோம்

படிப்பவர்கள் ரொம்ப கவனமாகவும் முழுமையான கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அப்பதான் இது புரோஜமான கல்வியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மாற்றுக் கருத்து இல்லை.

அல்லாஹ் அவருக்கு கொடுத்துள்ள புரிந்ததை மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் தன்மை. எளிமையான பேச்சு. தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டு அதையும் சேர்த்து சொல்லிக் கொடுப்பது. திறமை மிக்க அவரது அந்த டீச்சிங் முறை. மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும்

சாதாரணமாக மேடைப் பேச்சிலேயே பாடம் நடத்துவது போல் பேசக் கூடியவர் பாடம் நடத்தும் போது சொல்லவும் வேண்டுமா?

அரபிக்கல்லுாரிகளின் படிக்கட்டுகளில் நான் ஏறியது கிடையாது. மழைக்காகக் கூட ஒதுங்கியது கிடையாது. ஆனாலும் அந்த டீன் ஏஜ் பருவத்தில் எனது நண்பர்கள் பெரும்பாலும் அரபிக்கல்லுாரிகளில் படிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள்

அந்தப் பருவத்திற்குப் பிறகு கல்யாண வயதில் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் வட்டமே எனது நட்பு குழுவாக இருந்தது.

அதனால் 1983ல் புதுமனைப் பள்ளிவாசல் அலுவலகத்தில் வைத்து நடந்த மஜ்லிஸில் உலமாவின் குர்ஆன் மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் முஹிப்பில் உலமா என்று கவுரவிக்கப்பட்டேன்.

இன்றும் ஐம்பது வயதை தாண்டிய ஸனது பெற்ற பலருடன் நட்பாகவே இருக்கிறேன். அந்த நண்பர்களெல்லாம் அரபிக்கல்லுாரிகளில் அரபு மொழி இலக்கணம் படிக்கிற காலத்தில் தாய் மொழி தமிழே அவர்களுக்குத் தெரியாது. தமிழே தெரியாது எனும்பொழுது தமிழ் இலக்கணம் எங்கே இருந்து தெரியும்?

அவர்களுக்கு மாத்திரம் அல்ல அவர்களுக்கு அன்று படித்துக் கொடுத்த உஸ்தாதுமார்களுக்கே தமிழ் தெரியாது. இஸ்தஃக்ரக் என்பதற்கு அடைய வளைந்து கொண்டது என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். 

அடைய வளைந்து கொண்டது என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாது. அடைய வளைந்து கொண்டது என்பதற்கு நடைமுறைத் தமிழ் என்ன என்று கேட்டால் இன்றும் பதில் தெரியாத பலர் பேரறிஞர்களாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இறந்த(கடந்த) காலம், நிகழ் காலம், வருங் காலம் என முக்காலம் இருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) சொன்னார்கள் என்ற கடந்த கால வார்த்தையை சொல்வார்கள் என்று பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

வார்த்தைகளில் கடைசி எழுத்து மருவி சைலண்டாக செத்த மாதிரி இருக்க வேண்டும். அவர்களுக்கு என்பதை அவர்களுக்கூ என்றும் வந்தது என்பதை வந்ததுா என்றும் பேசக் கூடியவர்களாக இன்றைய இளைய தலைமுறை ஆலிம்களும் உள்ளார்கள்

சமீபத்தில் இளைய தலைமுறை ஆலிமின் கருத்தாழமிக்க ஒரு உரையை திருச்சியில் மருத்துவராகவும் உள்ள ஒரு அறிஞருக்கு அனுப்பி வைத்தேன்.

கருத்தாழமிக்க பேச்சாக இருந்தாலும் அவர்களுக்கூ வந்ததுா என்பது எவ்வளவு கொச்சையாக உள்ளது பார்த்தீர்களா என்று விமர்சித்து இருந்தார்.

நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற நிகழ்ச்சிக்கு எதிராக பதிவு போடுங்கள் என்று வற்புறுத்தி உள்ளவர்கள். .தக்வா உள்ளவனிடம் கல்வி படிச்சாத்தான் அவன் உருப்படுவான். நல்லவனிடம் கல்வி படித்தால்தான் நல்லவனாக வருவான். கெட்டவனிடம் கல்வி படித்தால் கெட்டவனாகப் போவான் என்று எழுதுங்கள் என்றார்கள்.

நம்மால் ஷைத்தான் என்று விமர்சிக்கப்படும், லுஹாவால் விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட பீ.ஜே. என்பவர் கலீல் அஹ்மது கீரனுாரி போன்ற பெரிய பெரிய அல்லாமாக்களிடம் படித்தவர்தானே. அந்த பீ.ஜே. கெட்டவனாக போய் விட்டார் என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். அது எப்படி?

கெட்டவனாகப் போவது அவனவன் நஸீபு. தலையெழுத்து, விதி. யாரிடம் படித்தாலும் விதி அப்படித்தான் என்று இருந்தால் அவன் கெட்டவனாகத்தான் போவான். அதை யாராலும் மாற்ற முடியாது.

ஆயத்துல் குர்ஸியை இரவில் ஓதினால்  ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இந்தக் கல்வி அறிவு அபுஹுரைரா(ரலி) அவர்களுக்கு யாரிடமிருந்து கிடைத்ததுஷைத்தானிடமிருந்து தானே கிடைத்தது

ஷைத்தானிடமிருந்து இதை அறிந்த பயின்ற அபுஹுரைரா(ரலி) அவர்கள்  ரசூல்(ஸல்) அவர்களிடம் சொன்னபொழுது நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்? 

அவன் ஷய்த்தான் ஆகவே கேட்காதே (செவிமடுக்காதே) என்று சொல்லவில்லையே! சொன்னது உண்மை சொன்னவன் ஷய்த்தான் என்றுதானே அடையாளம் காட்டினார்கள். நமக்கு முன் மாதிரி வழி காட்டி நபிகள் நாயகம் தானே.

பத்ர் யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, முஸ்லிம்களில் பத்து பேருக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பத்ர் யுத்தக் கைதிகள் யார்? அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அவனது துாதரையும் அழித்தொழிக்க வந்த பெரும்பாவிகளான காபிராகத்தானே இருந்தார்கள்.

"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அல் குர்ஆன்  20:114.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.