நோன்பு என்றால் என்ன?

நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?

ரமழான் மாதத்தை அடைந்ததும் முஸ்லிம்கள் நோன்பு வைக்கிறார்கள். நோன்பு என்று சொன்னதும் அனைவருக்கும் முஸ்லிம்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள். நோன்புக்கு விரதம் என்ற வார்த்தையை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் முஸ்லிம்கள் நோன்பு என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அந்த நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? நோன்பு என்றால் என்ன? என்ற கேள்விகளை பலரும் பலரிடம் கேட்டு விட்டார்கள். தமிழ் வெப் சைட்டுகளில் ஒன்று நோன்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு வேண்டியுள்ளது. நோன்பு என்றால் என்ன? என்ற தலைப்பிட்ட அந்த இடம் இதுவரை காலியாகவே உள்ளது.

கேட்கப்படுவது விளக்கங்கள் அல்ல?

நோன்பு என்றால் மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும், இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று இது மாதிரி நோன்பு ஏற்படுத்தும் ஏராளமான விளைவுகளை விளக்கங்களாக கூறுகிறார்கள். கேட்கப்படுவது விளக்கங்கள் அல்ல? நோன்பு என்பதற்கு என்ன பொருள் என்பதே. இதைக் கேட்டால். உண்ணமால் இருப்பது என்கிறார்கள். நோன்பு என்றால் உண்ணமால் இருப்பதுதான் அதன் பொருளா? அப்படியானால் போராட்டம் நடத்துபவர்கள் உண்ணா நோன்பு, உண்ணா விரதம் என்று ஏன் கூறுகிறார்கள்.

உண்ணாமல் இருப்பதை உணர்த்துவதற்காக.

நோன்பு, விரதம் என்று சொன்னாலே உண்ணாமல் இருப்பதுதான் அதன் பொருள் என்றால் போராட்டம் நடத்துபவர்கள் ஏன் உண்ணா நோன்பு போராட்டம் உண்ணா விரதம் போராட்டம் என்று குறிப்பிட வேண்டும். நோன்புப் போராட்டம் விரதப் போராட்டம் என்று குறிப்பிடலாமே. ஏன் அவ்வாறு குறிப்பிடுவதில்லை. நோன்பு, விரதம் என்ற சொற்களுக்கு உண்ணாமல் இருப்பது என்ற பொருள் இல்லை. அதனால்தான் உண்ணாமல் இருப்பதை உணர்த்துவதற்காக உண்ணா நோன்பு உண்ணா விரதம் என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்ணாமல் பருகாமல் இருத்தல் என்பது பொருள் என்று கூற முடியாது.

உண்ணா நோன்பு உண்ணா விரதம் என்று போராட்டம் நடத்துபவர்கள் கூட திடப் பொருள்தான் சாப்பிட மாட்டார்கள். திரவப் பொருள்களான நீராகாரங்களை சாப்பிடுவார்கள். திடப் பொருள்களை சாப்பிட்டால்தான் உண்ணுதல் என்பதில் வரும். திரவப் பொருள்களான நீராகாரங்களை சாப்பிட்டால் உண்ணுதல் என்பதில் வராது. குடித்தல் என்பதில்தான் வரும். அதனால்தான் அரசியல்வாதிகள் நடத்தும் உண்ணா நோன்பு போராட்ட பந்தலில் பானையில் நீராகாரம் வைத்து இருப்பார்கள். சில சமுதாயத்தவர் வைக்கும் நோன்புகளும் இது மாதிரியே உள்ளன. எனவே நோன்பு என்றால் உண்ணாமல் பருகாமல் இருத்தல் என்பது பொருள் என்று கூற முடியாது.

நம் மீது விதிக்கப்பட்டிருக்கும் நோன்புக்கு அல்லாஹ் திரு குர்ஆனில் ஸியாமு.

முஸ்லிம் அல்லாதவர்கள் வைக்கக் கூடிய நோன்புகளில் மவுன நோன்புகளும் உண்டு. மவுன விரதம் என்பார்கள். இந்த மவுன நோன்பு இஸ்லாத்தில் இல்லை. முந்தைய சமுதாயத்தில் இருந்திருக்கிறது. இப்பொழுது நம் மீது விதிக்கப்பட்டிருக்கும் நோன்புக்கு அல்லாஹ் திரு குர்ஆனில் ஸியாமு (2:183,185,187,196. 4:92. 5:89,95. 58:4) என்று குறிப்பிடுகிறான்.

மவுன விரதத்துக்கும் ஸவ்மன் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

"நீர் உண்டு பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன் எனவே எந்த மனிதனுடனும் பேச மாட்டேன் என்று கூறும்" என 19ஆவது அத்தியாயம் 26ஆவது வசனத்தில் மர்யம் (அலை) அவர்களின் மவுன விரதத்துக்கும் ஸவ்மன் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இந்த வசனத்தைப் படித்தால் உண்ணாமல் பருகாமல் இருப்பதற்கு மட்டும் ஸவ்ம் நோன்பு என்று கூற முடியாது. உண்டு பருகி பேசாமல் இருப்பதற்கும்தான் ஸவ்ம் என்று அல்லாஹ் கூறச் சொல்லி உள்ளான் என்பதை விளங்கலாம்.

மர்யம் (அலை) அவர்கள் வைத்த நோன்பு.
எனவே நோன்பு என்றால் உண்ணாமல் பருகாமல் இருப்பது என்பது பொருள் அல்ல. நோன்பு என்றால் விலகி இருத்தல், தவிர்த்து இருத்தல் என்பதே பொருள். மர்யம் (அலை) அவர்கள் வைத்த நோன்பு பேசுவதை தவிர்த்து இருத்தல். பேசுவதை விட்டும் விலகி இருத்தல் என்ற நோன்பாகும். நம் மீது விதிக்கப்பட்டிருக்கும் நோன்பு உண்ணாமல், பருகாமல், மனைவியுடன் சேராமல் விலகி இருத்தல், தவிர்த்து இருத்தல் எனும் நோன்பாகும். ஆக நோன்பு என்பதற்கு விலகி இருத்தல், தவிர்த்து இருத்தல் என்பதே பொருள்.

மேலப்பாளையத்தில் இரவுத் தொழுகையின் போது ஒருவர் ஆற்றிய உரையிலிருந்து தொகுத்தது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.