கொன்றால் சொர்க்கமா? கொல்லப்பட்டால் சொர்க்கமா?

முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் நடந்த போர்களில் முஸ்லிம்கள் இழந்ததை விட, முஸ்லிம்களும் காபிர்களும் சேர்த்தே இழந்ததை விட, முஸ்லிம்கள் வரலாற்றில் முஸ்லிம்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டு. இழந்த பொருளாதார இழப்புகளும் இறந்த எண்ணிக்கையும் தான் அதிகமாக இருக்கின்றது.


முஸ்லிம்களை எதிர்த்து போரிடாதீர்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இப்பொழுது உலகில் யாரும் யாருமாக போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய இழப்புகளெல்லாம் யாரும் யாரும் மோதிக் கொண்டபொழுது ஏற்பட்டது, ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது? பெரிய பெரிய இழப்புகளெல்லாம் முஸ்லிம்களும் முஸ்லிம்களுமாக அடித்துக் கொண்ட இடத்தில் தான் ஏற்பட்டு இருக்கிறது.


இது போன்ற சம்பவங்களை இஸ்லாமிய வரலாறு என்று எழுதக் கூடாது. இஸ்லாமியர் வரலாறு  முஸ்லிம்கள் வரலாறு என்றுதான்  எழுத வேண்டும்.


அல்லாஹ் யாருடன்  போரிட கட்டளை இட்டுள்ளான். ”வகாதிலுா அவ்லியாவுஷ் ஷய்த்தான்” ஷைத்தானுடைய சகோதரர்களாக தோழர்களாக உள்ளவர்களுடன் போரிட அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.


ஷைத்தானுடைய தோழர்களுடன் சண்டையிடச் சொன்னால் முஸ்லிம்கள் யாருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காபிர்கள் முஸ்லிம்களை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று வாய் கிழிய பேசுவார்கள். மணிக் கணக்கில் ஆதாரங்களை பட்டியல் இட்டு உணர்ச்சிகளை கொப்பளிப்பார்கள்.


உணர்ச்சி கொந்தளிப்புகள் யாவும் மேடையுடன் முடிந்து விடும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த முஸ்லிமை  வீழ்த்த எந்த காபிரை ஆதரிக்கலாம் என்று பொதுப் பணத்தில் ரூம்பு போட்டு யோசிப்பார்கள்.


தான் வெறுக்கும் முஸ்லிமை வீழ்த்த வேண்டும் என்றால் எந்தக் காபிரையும் ஆதரிக்க தயங்க மாட்டார்கள். கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். பிறகு அதற்கான ஆதராங்களை தேடி அலைவார்கள். ஆதாரம் இல்லை என்றால் பினாமி பெயரால் இட்டுக் கட்டி குற்றம் சாட்டுவார்கள். இதை சம காலத்தில் பார்க்கிறோம். சிந்தித்தோமா? படிப்பினைகள் பெற்றோமா?


காபிர்கள் முஸ்லிம்களை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் திட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களை கொல்வதற்கு அவர்கள் தேர்வு செய்யும் இடம் பெரும்பாலும் பள்ளிவாசல்களாக இருப்பதில்லை.


ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம்களை கொல்வதற்கு தேர்வு செய்யும் இடம் பெரும்பாலும் பள்ளிவாசல்களாகத்தான் இருக்கின்றது. குவைத், எகிப்து, சிரியா, லிபியா, எமன், ஆப்கான் என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அல்லாஹ் உடைய பள்ளிவாசல்களிலே எத்தனை பள்ளிகளே தன் சகோதரனுடைய ரத்தத்தை சகோதர முஸ்லிம் சிந்தி இருக்கின்றான். யாருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவ்லியாவுஷ் ஷைத்தானுடன் போரிடு என்று சொன்னால், யார் ஒருவன் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ் என்று கலிமாச் சொல்லி ஈமான் கொண்டுள்ளானோ அவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான்.


"முஸ்லிமைத் திட்டுவது (களங்கப்படுத்துவது அத்துமீறிய) பாவமாகும். அவருடன் போர் செய்வது நிராகரிப்பு (காபிர்த்தனம்) ஆகும்.  அறிவிப்பவர் அபூமஸ்வூத் (ரழி) ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிமை ஏசுவது, களங்கப்படுத்துவது பாவம் என்று இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம். ஒரு முஸ்லிமை ஏசுவதற்கு நமக்கு அனுமதி இல்லை. தப்பு செய்தானா உபதேசம் செய். இல்லையா அல்லாஹ்விடம் விட்டு விடு. முடிந்தால் மன்னித்து விட வேண்டும். மன்னிப்பது தான் சிறந்த குணம்.


ஒரு முஸ்லிமை திட்டுவதற்கு எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை. ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம். ஒரு முஸ்லிமை கொல்வது குபுர். ஒரு முஸ்லிமை கொலை செய்கிறவன் நரகத்துக்கு உரியவனாக இருக்கிறான் என்பதுதான் இஸ்லாத்தின் நிலை.


எவனாவது ஒருவன் ஈமான் (எனும் நம்பிக்கை) கொண்டவனை வேண்டுமென்றே கொலை செய்தால், அவனுக்கு உரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். இன்னும் அவன் மீது அல்லாஹ் கடும் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். கடுமையான வேதனையையும் அவனுக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( அல் குர்ஆன்4:93)


அப்படி இருக்க ஒரு முஸ்லிம் தனது சகோதரனான இன்னொரு முஸ்லிமை அல்லாஹ் உடைய பள்ளியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்கிறான். ஸஜ்தாவுக்கு போகும்போது குத்தி கொலை செய்கிறான்இன்று நேற்று நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்ல. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாம் கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்த மாதிரியான கொலைகள் காபிர்களுடன் நடந்த சண்டையில் ஏற்பட்டதா?


ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி) என்கிறது ஹதீஸ்
நிச்சயமாக விசுவாசிகள் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். (49:10) என்று போதனை செய்கிறது அல் குர்ஆன்


ஒருவரை நாம் எதிர்த்து போரிடுவது என்றால் அவர் முஸ்லிமாக இருக்கக் கூடாது. அப்படி எதிர்த்து போரிடுவதால் இந்த உலகில் மிகப் பெரும் பலனை பெற்றுத் தரலாம். மறுமையில் நரகத்தை வேறு எதனையும் பெற்றுத் தராது. திண்ணமாக நரகத்தை தவிர வேறு கூலி இல்லை.


அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான் யுகாதிலுான பீ ஸபீலித் தாகூத்” யார் தங்கள் வழியில் கெட்டவர்களாக இறைவனை மறுத்தவர்களாக நிராகரிப்பாளர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் தான் ஷைத்தானுக்கு உதவியாக ஷய்த்தானுடைய வழியில்பாதையில் போரிடுவார்கள்.


முஸ்லிம்களாக இருப்பவர்கள், விசுவாசம்(ஈமான்) கொண்டவர்களாக இருப்பவர்கள் அல்லாஹ் உடைய பாதையில் அநியாயத்தை எதிர்த்து போரிடுவார்கள்.


போரிடுவதற்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் வழி முறை. இடும் கட்டளை என்ன? யார் ஷய்த்தானுடைய தோழர்களாக இருக்கின்றார்களோ அவர்களை எதிர்த்து நீங்கள் போரிடுங்கள் என்று.


இறைத்துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்கிறார். அல்லாஹ் உடைய துாதரே என்னிடத்தில் இருக்கக் கூடிய என்னுடைய உடமையை ஒருவர் பறிக்க முயல்கிறார் நான் என்ன செய்வது? என்று. கொடுத்து விட்டு போ என்றார்களா? என்ன பதில் சொன்னார்கள்?


உன்னுடைய உடமையை நீ பறி கொடுக்காதே. அவனை எதிர்த்து போராடு என்றார்கள். அவன் என்னைக் கொன்று பறிப்பதற்கு முயற்சி செய்கிறான். நீயும் அதே மாதிரி அவனிடம் போராடு. அதில் நான் கொல்லப்பட்டால்? நீ சொர்க்கவாதி. அவன் கொல்லப்பட்டால்? அப்பொழுதும் நீ சொர்க்கவாதி என்றார்கள்.


சூழ்நிலையின் காரணமாக அநியாயம் செய்யக் கூடிய ஒருவனை எதிர்த்து நாம் போரிடும்பொழுது அவன் கொல்லப்பட்டாலும்  நாம் கொல்லப்பட்டாலும் நமக்கு நன்மை இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது.


அதே நேரத்தில் தவறாக இரு முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து  போரிட்டு. அதில் அவன் கொல்லப்பட்டாலும் இவன் கொல்லப்பட்டாலும் இருவரில் யார் கொல்லப்பட்டாலும் இருவருக்கும் நரகம்தான். இதை இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக சொல்லிக் காட்டி உள்ளார்கள். கொன்றவனுக்கும் நரகம் கொல்லப்பட்டவனுக்கும் நரகம் என்று.


இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் அதில் ஒருவன் கொல்லப்படுகிறான். அவனுக்கும் நரகம். ஒருவன் கொன்று விட்டான் அவனுக்கும் நரகம் என்று சொல்லி உள்ளார்கள் இறைவனின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.


ஆச்சரியமாக இல்லையா? கொலை செய்த கொலைகாரன் நரகம் செல்கிறான் என்றால் ஆச்சரியமானது இல்லை. ஆட்சேபத்திற்குரியதும் இல்லை.


முந்தைய சம்பவத்தில் உரிமைப் போராட்டத்தில் கொன்றாலும் சொர்க்கம். கொல்லப்பட்டாலும் சொர்க்கம் என்றார்கள். இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அது இறைவனிடத்தில் நீதியானது நியாயமானது அதனால் இரண்டு நிலையிலும் சொர்க்கம் என்ற தீர்ப்பை மனம் ஏற்றுக் கொண்டது.


இங்கே கொன்றவனுக்கும் நரகம். கொல்லப்பட்டவனுக்கும் நரகம் என்கிறார்கள் இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். இதுவும் இறைவனிடத்தில் நீதியானது தான் நியாயமானது தான். அதனால் இரண்டு நிலையிலும் நரகம் என்ற தீர்ப்பை மனம்  ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.


அறிவு  சிந்திக்கின்றது. இரண்டு முஸ்லிம்கள் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவர் கொன்று விட்டார். கொலை செய்தவருக்கு நரகம் என்றால் சரியான தீர்ப்புதான். அறிவு ஏற்றுக் கொள்கிறது. இன்னொருவன் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறான் அவனுக்கும் நரகம் என்றால் எப்படி என அறிவு கேட்கிறது. எனவே நமது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. யாருடைய மனம்தான் ஏற்றுக் கொள்ளும். ஸஹாபாக்களுடைய மனங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.


எங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை. எனவே எங்கள் மனங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே இந்த ஹதீஸை தள்ளுபடி செய்கிறோம் என்றார்களா? ஸஹாபாக்கள்? என்ன செய்தார்கள்?


கொலை செய்தவருக்கு நரகம் என்றால் சரியான தீர்ப்புதான். கொல்லப்பட்டு பிணமாக கிடக்கின்றவருக்கும் நரகம் என்றால் அல்லாஹ்வின் துாதரே எப்படி என்று விளக்கம் கேட்டார்கள் ஸஹாபாக்கள். அதுதான் ஸஹாபாக்கள். தங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்றதும் ஹதீஸ்களை தள்ளுபடி செய்தவர்கள் அல்ல ஸஹாபாக்கள். எனவே விளக்கம் கேட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் என்ன பதில் விளக்கம் சொன்னார்கள்?


தொடரும் இன்ஷா அல்லாஹ். 

நன்றி மக்கள் உரிமை
                                               முந்தைய தலைப்பு

அடுத்த தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.