உபரியான தொழுகைகளை எண்ணிக்கை வரையறை இன்றி தொழலாமா?

தொழுகை என்று சொன்னாலே பா்ளு (எனும் கட்டாயக் கடமையான) தொழுகை இருக்கின்றது. இது போக உள்ள மற்ற தொழுகைகளை சுன்னத் என்றும். நபில் என்றும் இன்னும் சில பெயர்களைக் கொண்டும் நாம் விளங்கி வைத்து இருக்கிறோம்.

என்ன மாதிரி

ஹாஜத்து தொழுகை

இஸ்திகாரா தொழுகை, 

இரவுத் தொழுகை 

இந்த மாதிரி பல பெயர்களில் விளங்கி வைத்து இருக்கிறோம். இங்கே கேள்வி என்ன


இந்த மாதிரி உள்ள உபரி தொழுகைகளை  எண்ணிக்கை வரையறை இன்றி நம்முடைய விருப்பத்திற்கு தொழலாமா? என்பதே.


உதாரணத்திற்கு 200 ரகஅத் தொழலாமா? 100 ரகஅத் தொழலாமா? என்பதுதான் கேள்வி உடைய மைய கருத்து. நாம் முதலில் அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும்.


தெரியாத மொழியில் வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப் பெரிய குறைபாடு

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும். அந்த மொழியிலே சொல்லக் கூடிய வார்த்தைகளுடைய அர்த்தம் என்ன? அது நமக்கு விளங்கியது என்று சொன்னால். அதன் மூலம் எந்த தவறும் தீமையும் ஏற்படாது.


விளங்காமல் இருந்த ஒரு சில வார்த்தைகளினால் ஏற்பட்ட விபரீதங்களையும் நாம் சிந்தித்து விளங்க கடமைப்பட்டுள்ளோம்


ஒவ்வொன்றிலும் பெரிய வித்தியாசத்துக்கு காரணம். ஒரு வார்த்தையை அதன் மூல மொழியிலிருந்து சரியாக விளங்காமல் போனதுதான்.. சரியாக விளங்காமல் புரியாமல் போவது என்ற நிலை தாய் மொழியிலும் நடக்கும்


அருகில் என்றால் பக்கத்தில் என்றும் அருகாமை என்றால் துாரத்தில் என்றும் அர்த்தம்


பக்கத்தில் என்பதற்கு அருகாமை என்ற வார்த்தையை பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்

அருகில் என்பதைவிட அருகாமை என்ற வார்த்தை சொல்வதற்கு கவர்ச்சியாக உள்ளதால் மேதைகள் போல் பயன்படுத்துகிறார்கள்

புரியாமல் போனதால் ஏற்பட்ட விளைவு இது. இப்படிப்பட்ட விளைவு எல்லாவற்றிலும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால். முதலில் அர்த்தம் தெரிய வேண்டும்.

பர்ளு என்றால் என்ன அர்த்தம் தெரிய வேண்டும்

நபில் என்று சொன்னால் அர்த்தம் என்ன தெரிய வேண்டும். 

சுன்னத் என்று சொன்னால் என்ன அர்த்தம் தெரிய வேண்டும். 

உபரித் தொழுகைகளை எண்ணிக்கை வரையறை இன்றி தொழலாமா? என்பதைப் பற்றி விடை அறியும் முன். உபரியான தொழுகை என்றால் என்ன அதை முதலில் தெரிய வேண்டும்

நபில் என்றால் என்ன? சுன்னத் என்றால் என்ன? தெரிய வேண்டும்.

சுன்னத் என்று சொன்னால் வழி முறை என்று அர்த்தம். யாருடைய வழி முறை?  நபி உடைய வழி முறை என்று சொல்லுவோம்

நபி உடைய வழி முறை என்று சொல்வதாக இருந்தால். சுன்னத்துன் நபி என்று சொல்ல வேண்டும். சரியான வாசகப்படி எப்படி சொல்ல வேண்டும் என்றால். சுன்னத்துன் நபி, என்றுதான் சொல்ல வேண்டும்

சுன்னத்து ரசூல். இறைத் துாதருடைய வழி முறை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும் நடை முறையில் சுன்னத் என்று சொன்னாலே. அது அல்லாஹ் உடைய துாதரின் சுன்னத்துதான் என்று சமுதாயம் அர்த்தமாக ஆக்கிக் கொண்டது. ஏற்றுக் கொண்டு விட்டது

அதனால் சுன்னத்துன் நபி, சுன்னத்து ரசூல் என்று சொல்லாமல். வெறுமனே சுன்னத் என்று சொன்னாலும் அதை தவறான அர்த்தம் என்ற சொல்ல முடியாது


ஆனால் சுன்னத் என்றால் என்ன பொருள்? வழி முறை அவ்வளவுதான் பொருள்.

அல்லாஹ்வுடைய துாதரின் வழி முறையைப் பின் பற்றி நாம் இரண்டு ரகஅத் தொழுதால் அதற்குப் பெயர் சுன்னத்

சுபுஹுடைய பர்ளு 2 ரகஅத். அந்த பர்ளான இரண்டு ரகஅத்தை அல்லாஹ்வுடைய துாதரின் வழி முறையைப் பின் பற்றித்தான் நாம் தொழுகிறோம். 

ஆனால் அதை சுன்னத் என்று சொல்ல மாட்டோம். ஏன்?

அதில் அல்லாஹ்வுடைய துாதரை பின்பற்றுதல் என்பது மட்டும் அதில் அடங்கவில்லை, இருக்கவில்லை. அல்லாஹ் உடைய ஏவலும் அதில் அடங்கி இருக்கிறது. 

பஜ்ரில் நாம் தொழக் கூடிய 2 ரகஅத் தொழுகையில் அல்லாஹ் உடைய ஏவல் அதை கட்டாயமாக ஆக்கி இருக்கிறது. 

அந்த தொழுகையை நிறைவேற்றும் முறையை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்றால். அல்லாஹ் உடைய துாதர் சொன்ன அடிப்படையில் அமைத்துக் கொள்கிறோம். அதில் அல்லாஹ் உடைய ஏவல் இருப்பதால் அது பர்ளு(கடமை, கட்டாயம்) ஆகி விடுகிறது.


அந்த பஜ்ருக்கு முன்பாக உள்ள 2 ரகஅத்களோ லுஹருக்கு முன்னும் பின்னுமாக உள்ள தொழுகைகளோ அல்லாஹ் கடமை ஆக்கவில்லை. 


எனவே இந்த சுன்னத்களை தொழாவிட்டால் அல்லாஹ் ஏன் தொழவில்லை? என்று கேட்க மாட்டான். 

அதனால் சுன்னத்களை தொழாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. 

நபியின் சுன்னத்துகள் எவ்வளவு முக்கியமானது? வெயிட்டானது? சரியான நேரத்தில், எந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் எப்படி பர்ளுக்கு ஈடான நன்மைகளை பெற்றுத் தரும்? அதை பின்னர் பார்ப்போம்.

ரசூல்(ஸல்) அவர்கள் பஜ்ருக்கு முன்னால் 2 ரகஅத் தொழுது இருக்கிறார்கள். அல்லாஹ் கட்டாய கடமையாக ஆக்கி கட்டளை இடவில்லை. இருந்தாலும் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் தொழுது இருக்கிறார்கள். இந்த காரணத்தால்தான் நாமும் தொழுகிறோம், தொழுவோம். இப்படி தொழுதால்  இது சுன்னத்துன் நபி. இறைத் துாதரின் வழி முறை.


சுன்னத்துன் நபியாக (இறைத் துாதரின் வழி முறையாக) இருக்கக் கூடிய இந்த தொழுகைகளை. அதாவது இறைத் துாதரின் வழி முறையைப் பின் பற்றி ரசூல்(ஸல்) அவர்கள் தொழுதது அவர்களுக்கு சுன்னத்தா? இதை விளங்க வேண்டும். ரசூல்(ஸல்) அவர்கள் 2 ரகஅத் தொழுகிறார்கள். அவர்கள் தொழுதது சுன்னத்தா? இதுதான் கேள்வி. புரிகிறதா?


அவர்கள் தொழுதது சுன்னத் கிடையாது. அவர்கள் தொழுதது நபில் உபரியானது. நாம் தொழுவதுதான் சுன்னத். நாம் என்ன செய்கிறோம். இறைத் துாதரைப் பின் பற்றி தொழுகிறோம். இறைத் துாதருடைய வழி முறையை (சுன்னத்தை) செயல்படுத்துகிறோம். அல்லாஹ்வுடைய துாதர் யாருடைய சுன்னத்தை (வழி முறையை) பின்பற்றினார்கள்?


அவர்கள் யாருடைய வழி முறையையும் பின்பற்றி தொழவில்லை. அவர்கள்தான் வணக்கத்தை நமக்கு கற்றுக் கொடுக்க வந்தவர்கள். அவர்கள்தான் வழி முறையை காட்ட வந்தவர்கள்.  ஆகவே அவர்கள் தொழுதது அவர்களுக்கு சுன்னத்தா

கிடையாது. நபில் உபரியானது. ஐவேளை என்பது கடமை. இது உபரி. நமக்கும் இது உபரிதான். ஆனால் அல்லாஹ்வுடைய துாதரின் சுன்னதாக நாம் அதை தொழுகின்றோம். எனவே இந்த வணக்க வழிபாடுகளை பதிவு செய்யும்பொழுது இது சுன்னத் என்று நமக்கு பதிவு செய்யப்படும்.


அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் அருளி உள்ளார்கள். மனிதன் எல்லா விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்கப்படுவான். நிச்சயமாக கேள்வி கேட்கப்படும் ஒரு நாள் இருக்கின்றது. கேள்வி கேட்கப்படும் அந்த நாளில். முதல் கேள்வி தொழுகையைப் பற்றித்தான் இருக்கும். இந்தக் கேள்வி உடைய பதில் இலகுவாக ஒரு மனிதனுக்கு அமைந்து விட்டால். ஏனைய எல்லா கேள்விகளும் எளிதாக அமைந்து விடும்.


அதாவது மற்றவற்றில் எல்லாம் அல்லாஹ் மன்னிப்பு கொடுத்தாலும்.  தொழுகையில் மட்டும் அல்லாஹ் ரொம்ப கண்டிஷனாக இருப்பான். 


நிச்சயமாக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும் 29:45.  என்று அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்


தொழுகை மானக்கேடான கெட்ட தீய விஷயங்களிலிருந்து விலக்கும் தடுக்கும் பாதுகாக்கும். இப்படி பாதுகாத்து நல்ல முறையில் மனிதன் இருக்க வேண்டும். இதற்காகத்தான் அல்லாஹ் தொழுகைளை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆக்கி இருக்கிறான். 

நிச்சயமாக நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. 4:103.

இப்படி கடமையான தொழுகையை ஒரு மனிதன் தவற விட்டால். மறுமையில் நிச்சயமாக அவன் கைசேதப்படுவான். எப்படிப்பட்ட கைசேதம்

அதை நிவர்த்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும். கடந்து போன கடமையை மறுபடியும் நிறைவேற்ற முடியுமா? முடியாது.

நேற்று ஒரு பர்ளான தொழுகையை விட்டு விட்டோம் என்று சொன்னால். மறுபடியும் அந்த தொழுகையை நம்மால் தொழவே முடியாது. வேறு எந்தவிதமான தொழுகையை தொழுதாலும் அந்த தொழுகையை  தொழுததாக ஆகாது.

பதிவு செய்து கேள்விகள் கேட்கக் கூடிய அந்த நாளில் முதல் கேள்வி தொழுகை. இதற்கு பதில் சொல்லாமல் யாரும் அங்கிருந்து நகர முடியாது. அசைய முடியாது. இந்த மாதிரி கேள்வி கேட்கப்படும் அந்த சூழ்நிலையில். அங்கு இருக்கக் கூடிய மலக்குகள் அவர்களது பணியை செய்வார்கள்.

இப்பொழுது நாம் ஒரு அரசு அலுவலகத்துக்கு சென்றால் என்ன நடக்கிறது.. அப்துல்லாஹ் என்பவர்களில் குறிப்பிட்ட ஒருவரின் பெயரை கம்யூட்டரின் பட்டனை தட்டினால் அவரைப் பற்றிய எல்லா விபரமும் வந்து விடுகிறது. மலக்குகளின் கம்யூட்டர் இதைவிட வேகமாக செயல்படும்.


மலக்குகள் இன்னார் மகன் இன்னார் என்று கம்யூட்டரில் தட்டினால். அவருக்கு எந்த நாளில் தொழுகை கடமை ஆகியதோ அந்த நாளில் இருந்து, அவர் இறந்து போன அன்று வரைக்கும் உள்ள விபரங்கள் வரும். முழு விபரத்துடன் வரும். இதில் பர்ளு என்று உள்ள இடத்தில் எல்லாம். எந்த எந்த நாளில் தொழாமல் விட்டுள்ளார். எந்த எந்த தொழுகைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்படி எல்லா விபரமும் வரும்.


அப்பொழுது அந்த ஆள் அங்கிருந்து அசைய முடியாது. மலக்குகளும் விட மாட்டார்கள். விடுதற்கு அவர்களுக்கு அனுமதியும் கிடையாது. அனுமதி கிடைக்காத காரணத்தால் மலக்குகள் அல்லாஹ்வின் ஆணையை எதிர் நோக்குவார்கள். யா அல்லாஹ் தொழுகையில் இவ்வளவு குறைவுடனும் குறைபாட்டுடனும் இவர் இருக்கிறாரே என்ன செய்ய என்று கேட்பார்கள்.


அல்லாஹ் தனது அளப் பெரும் அன்பின் காரணமாக. நம்மீது காட்டக் கூடிய மிகப் பெரும் கிருபையான அந்த இரக்கத்தின் காரணமாக என்ன சொல்வான் தெரியுமா


பர்ளான தொழுகையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக தன்னுடைய அடியான் நஷ்டவாளியாக ஆகி விடக் கூடாது என்பதற்காக சொல்வான். என்னுடைய அடியான் சுன்னத்தான தொழுகைகளை தொழுது இருப்பான் அல்லவா அந்த தொழுகைகளை விடுபட்ட பர்ளுக்குரிய ஈடாக எடுத்துக் கொள்ளுங்கள் என்பான்.


சுன்னத்தான தொழுகைகள் விடுபட்ட பர்ளுகள் இடத்தை நிரப்பி விட்டால். உடன் அங்கிருந்து போக அணுமதி கிடைத்து விடும். இதிலிருந்து என்ன விளங்குகிறோம். நாம் தொழுத சுன்னத்தான தொழுகைகள் எல்லாம் கடமையான தொழுகைகளுக்கு ஈடாக ஆகி விடுகின்றன. நாம் தொழுத சுன்னத்தான தொழுகைகளுக்கு மறுமையில் அல்லாஹ் பர்ளுக்கு சமமான அந்தஸ்த்தை தந்து விடுகின்றான்.


சனிக்கிழமை அஸரை ஒருவர் தொழாமல் விட்டு விட்டார் என்று சொன்னால் மறுபடியும் அந்த அஸர் நேரம் வராது. ஞாயிறன்று வரும் அஸர் நேரம் அது ஞாயிற்றுக்கிழமைக்குரியது. ஒவ்வொரு நாளுக்கும் அஸர் இருக்கிறது. அதை அன்றன்றுதான் தொழ வேண்டும். எனவே விடுபட்ட பர்ளுகளை ஈடு செய்ய சுன்னத்களை தொழுது சேமித்து வர வேண்டும்.


சேமித்து கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய தொழாமல் விட்டவர்கள் என்ன நினைக்கலாம். தினம் ஐம்பது அறுபது என தொழுது நிறைய சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரலாமா? என்றால் எண்ணம் வரலாம். எண்ணங்கள் வருவதை தடுக்க முடியாது. அப்படிச் செய்யலாமா? என்பதுதான் கேள்வி

இதற்கு அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள்தான் பதில் தர வேண்டும். அல்லாஹ் துாதர்(ஸல்) அவர்கள் என்ன பதில் தருகிறார்கள்.

ஸல்லுா கமா ரஅய்துமூனி ஸல்லி என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தான் நீங்கள் தொழ வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களின் பதிலாக உள்ளது.

என்ன அர்த்தம்? நிலையில் நிற்பது, ருகூஉ செய்வது, ஸஜ்தாவில் வீழ்வது,  கிராஅத் முறை தஸ்பீஹ், ரகஅத்துகள் எண்ணிக்கை இப்படி எல்லாமே அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி முறைப்படி இருக்க வேண்டும்


எதிலுமே நாம் அல்லாஹ் உடைய துாதரை முந்த முடியாது. இன்றைய இளைஞர்களுக்கு புரியும் பாஷையில் சொல்வதாக இருந்தால் ஓவர் டேக் பண்ண முடியாது. நபியை ஓவர் டேக் பண்ணக் கூடாது. மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று.


அல்லாஹ்வையும் அவனது துாதரையும் முந்தாதீர்கள் (ஓவர் டேக் பண்ணாதீர்கள்) என்பது அல்லாஹ் தனது திருமறை மூலம் இட்டுள்ள கட்டளைாயகும் (49;1) 


எனவே ஓவர் டேக் பண்ணாமலும் இருக்க வேண்டும். அதே நேரம் விடுபட்ட தொழுகைகளை தொழவும் செய்யணும் என்றால் என்ன செய்ய வேண்டும். இதற்கு அல்லாஹ்வும் அவனது துாதரும் அழகான வழி முறையை காட்டி உள்ளார்கள். என்ன வழி?

நமக்கு கடமையான தொழுகைகள் என்று பார்த்தால் ஒரு நாளுக்கு 17 ரகஅத்கள்தான். வெள்ளிக்கிழமை அன்று அதிலும் 2 குறைத்து 15 ரகஅத்கள்தான். இவ்வளவு பர்ளான (கடமையான) தொழுகைகள் இருக்கவே அவற்றுக்கு முன்னும் பின்னுமாக நபிலான (உபரியான) தொழுகைகளையும் காட்டித் தந்துள்ளார்கள். அவர்களுக்கு  நபில் (உபரி) நமக்கு அது சுன்னத்.


நபிக்கு நபிலான நமக்கு சுன்னத்தான இந்த தொழுகைகளே பர்ளைவிட அதிகமான ரகஅத்களாக உள்ளன. இவ்வளவும் காணாது. இதற்கு மேலும் நான் தொழுவேன் என்று சொன்னால். அவர் என்ன செய்கிறார்


அல்லாஹ்வின் துாதரை முந்துகிறார். ஓவர் டேக் செய்கிறார். இப்படி ஓவர் டேக் பண்ணக் கூடிய அனுமதி எந்த முஃமினான ஆணுக்கும்  முஃமினான பெண்ணுக்கும் கிடையாது. சூரத்துல் அஹ்ஸாபில் தெளிவாகவே சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முடிவு செய்து விட்ட ஒரு காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை 33:36.

செய்வது பிந்தைய விஷயம்.  மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கே அணுமதி இல்லை எனும்பொழுது எப்படி செய்ய முடியும்? 

ஆகவே உபரியான வணக்கங்கள் என்பது சுன்னத்துன் நபி யாகத்தான் (நபியின் வழி முறையாகத்தான்) இருக்க வேண்டும்.  வேறு யாருடைய வழிமுறையாகவும் இருக்கக் கூடாது.

பர்ளான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள சுன்னத்கள் யாவும் அல்லாஹ்வின் துாதருடைய சுன்னத் (வழிமுறை). இவை அல்லாமல் நாமாக நபில் என்று கூறி 50 ரகஅத் தொழுதால் அது யாருடைய சுன்னத் (வழிமுறை)?

அல்லாஹ்வும் அவனுடைய துாதர்(ஸல்) அவர்களும் ஏவாத ஒன்றை (கற்றுக் கொடுக்காத ஒன்றை) நன்மை என எண்ணி யாராவது அமலாக செய்வார்களேயானால் அவை என்ன செய்யப்படும்

இதற்கு அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) அவர்கள்  சொல்லும் பதிலைப் பாருங்கள். நாம் ஏவாத ஒன்றை (கற்றுக் கொடுக்காத ஒன்றை) நன்மை என எண்ணி யாராவது அமலாக செய்வார்களேயானால் அவை என்ன செய்யப்படும் நிராகரிக்கப்படும்.


எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்.)

மற்றோர் அறிவிப்பில்: எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’ (முஸ்லிம்)

பஹுவ ரத்துன். ரத்து என்ற அரபி வார்த்தை இன்றும் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு சட்டம்  நீக்கம் செய்யப்படுகிறது என்பதை ரத்து செய்யப்படுகிறது என்று சொல்வார்கள். 


ரத்து செய்யப்பட்டது பயன் தருமா? ரத்து செய்யப்பட்ட சட்டத்தைக் கொண்டு போய் அரசு அதிகாரியிடம் காட்டி.  அதில் உள்ளபடி பயனைக் கேட்டால் அதிகாரி அதை துாக்கி வீசி விடுவார். அதிகாரம் உள்ள அதிகாரி என்றால் மூஞ்சியில் துாக்கி வீசி விடுவார். மலக்குகள் சாதாரணமானவர்களா?

அல்லாஹ்வும் அவனது துாதரும் கற்றுக் கொடுத்த எத்தனையோ வணக்க வழிபாடுகள் முறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வெள்ளிக்கிழமை அன்று நோன்பு நோற்கக் கூடாது 

பெருநாள்கள் அன்று நோன்பு நோற்கவே கூடாது. 

ரமழான் நோன்பா? இல்லையா  என்று சந்தேகமான நாளில் நோன்பு நோற்கவே கூடாது 

இப்படியெல்லாம் ஹதீஸ்கள் இருக்கின்றது. இதன் பின்னரும் இந்த தினங்களில் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இப்படிச் செய்தவருக்கு நன்மை கிடைக்குமா? கிடைக்காது.

தொழுகை என்று சொன்னால் அல்லாஹ் உடைய துாதர் காட்டித் தந்தது சுன்னத். அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டு கடமையாக்கிய தொழுகை பர்ளு. இதற்குப் பிறகு முஃமினான எந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ்வும் அல்லாஹ் உடைய துாதரும் கற்றுக் கொடுக்கவில்லை.

ஆகவே அல்லாஹ்வும் அவனது துாதரும் கற்றுக் கொடுத்ததன் அடிப்டையில்தான் நமது தொழுகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி அமைத்துக் கொள்ளும்போது நமக்கு முழுமையான நன்மை கிடைத்து விடும். சுவர்க்கத்துக்கு போகின்ற வாய்ப்பு கிடைத்து விடும் எனும்பொழுது. அதற்கு மேல் ஒன்று நமக்குத் தேவையா?

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் துாதரிடம் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். ஐந்து வேளை தொழ வேண்டும். ரமழான் மாதம் நோன்பு நோற்க வேண்டும். (வசதி இருக்கும்போது) ஜகாத் கொடுக்க வேண்டும் என்றார்கள்


ஒவ்வொரு கடமையையும் சொல்லும்போதும். 'அதைத் தவிர வேறு ஏதாவது கடமை என் மீது உண்டா?' என்று வந்தவர் கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள், 'நீர் விரும்பிச் செய்தாலே தவிர வேறு இல்லை' என்று பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  

உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூட்டவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன்  என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். 

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்  :   தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) நூல்:      புகாரீ  46, 1891, 2678, 6956


இங்கே உபரியான அமல்களையெல்லாம்  சொல்லவும் இல்லை. கடமையைத் தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று ஒருவர் கூறுகிறார். அவரைத்தான் வெற்றியாளர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். 


அதிலிருந்து  கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்கு சுவர்க்கம் போவதற்கு போதுமானது என்பதை அறிய முடிகின்றது.

ஆனால் கடமையை நாம் சரியாகச் செய்கிறோமா? கடமையில் கூட குறையும் குறைவும் உடையவர்களாக மனிதர்கள் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் இந்த உபரிகளைச் செய்து ஈடு செய்ய வழி காட்டப்பட்டுள்ளது.

ஜகாத்தில் குறைவு இருக்கும் ஸதகா செய்தால் அது ஈடாக, சமமாக ( ஈகோலாக) ஆகி விடும். ஹஜ்ஜில் ஏதாவது குறைபாடு இருந்தால் ரமழான் மாதத்தில் உம்ரா செய்தால் ஹஜ்ஜுக்கு சமமான நன்மையை அல்லாஹ் தரக் கூடியவனாக இருக்கிறான். இந்த மாதிரி  சமமான நன்மைகளெல்லாம் மறுமையில் முஃமின்கள் நஷ்டவாளியாகி கைசேதப்படாமல் இருக்க. அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு கிப்ட். அதையே மனிதன் தவறுதலாக பயன்படுத்தினான் என்று சொன்னால். அது அந்த மனிதனின் முகத்தில் துாக்கி எறியப்படும். ஆகவே எண்ணிக்கைகளும் அல்லாஹ்வின் துாருடைய சுன்னத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதை மீறி தொழுவதற்கு நமக்கு அனுமதி இல்லை என்பதை விளங்கி செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக!


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.