சூரத்துல் இக்லாஸ் – குல்ஹுவல்லாஹு அஹது ஓதியவர் மீது வந்த கம்ளைன்ட் - புகார்


சிறிய படைப் பிரிவு ஒன்றுக்கு ஒருவர்  தலைவராக இருந்தார். தொழுகை நேரம் வந்ததும் தலைவராக இருந்த அவர்தான் இமாமாக நின்று தொழுகை நடத்துவார். இந்தக் காலத்தில் உள்ள தலைவர்கள் என்றால் தலைவராக இருந்தால்  தொழ வேண்டும் என்பது சட்டமா? என்று கேட்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி இமாமாக நின்று தொழுகை நடத்துவார்கள்

ஒரு காலத்தில் முத்தவல்லி என்ற தலைமை மட்டுமே பள்ளிவாசல்களில் இருந்தது. பதவி வெறி பிடித்தவர்கள் அமைப்புகளில் ஊடுறுவி சண்டைகள் போட்டது போல் பள்ளிவாசல்களிலும் ஊடுறுவி பதவிச் சண்டை போட்டார்கள். அதன் பிறகுதான் இஸ்லாத்தில் இல்லாத செயலாளர், பொருளாளர் பதவிகள். கமிட்டி என்று சொல்லத் தெரியாத மம்மட்டிகள். மெம்பர்கள் என்று சொல்லத் தெரியாத நம்பர்கள் என்ற பதவிகள் பள்ளிவாசல்களிலும் நுழைந்தன.
நாம் சொல்ல வந்த வரலாற்றில் இமாமத் செய்த படைத் தளபதி என்ன செய்தார் என்றால், ஒவ்வொரு தொழுகையிலும் சூரத்துல் பாத்திஹா ஓதிய பின் குர்ஆனின் எந்த வசனங்களை ஓதினாலும் ருகூவுக்கு முன் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத்எனும் (112 வது) அத்தியாயத்தை ஓதிய பின்தான் ருகூவுக்கு போகக்  கூடியவராக இருந்தார். அந்த பயணம் முழுவதும் அப்படியே செய்தார். 

பயணக் குழுவினரான படையினர்  மனதில் இதற்கு எதிரான மாற்றுக் கருத்து இருந்தது. தளபதி என்ற தலைமைக்கு கட்டுப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து விட்டார்கள்.

படையினர் நாடு திரும்பியதும் ஆட்சித் தலைவர் அவர்களிடம் போய் புகார் செய்தார்கள். பயணத்தின் போது படைத் தலைவர் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதினார் என்று

அப்போது ஆட்சித் தலைவர் அவர்கள், அதற்கு பதில் சொல்லவில்லை. என்ன சொன்னார்கள் என்றால்  எதற்காக ப்படிச் செய்தார்? இப்படிச் செய்ய என்ன காரணம்? என்று அவரிடமே போய் கேளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.

படையினர் தளபதியாக இருந்தவரிடம் போய் கேட்டார்கள். நன்கு கவனிக்க வேண்டும். பணயத்தில் இருந்தபொழுது படையினர் கேள்வி கேட்கவே இல்லை. படையில் இருந்தபொழுது அவர்களின் அந்த சிறிய தலைமைக்கு அதாவது கிளைத் தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டார்கள். சர்வ அதிகாரம் உடைய சர்வாதிகாரியான ரைஸ் என்ற ஆட்சித் தலைமையான ஒட்டு மொத்த தலைமை சொன்ன பிறகுதான் போய் கேள்வி கேட்டார்கள். 

எதற்காக ஒவ்வொரு ரகஅத்திலும் வெவ்வேறு சூராக்களை ஓதி விட்டு குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதினீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் பதில் சொன்னார். அந்த ரஹ்மானின் (பேரருளாளனின்) சிபத்துகள் (ஏகத்துவப் பண்புகள்) முழுவதும் சூரத்துல் இக்லாஸில் அடங்கி இருக்கிறது. அதனால் அது எனக்கு பிடித்து இருக்கிறது. அதை அதிகமாக ஓத நான் விரும்புகிறேன், அதை நான் நேசிக்கிறேன் என்றார்.

இதைக் கேட்டவர்கள், அல்லாஹ்வை பற்றிய எல்லா தன்மைகளும் அதில் இருப்பதால் எனக்கு அது பிடித்திருக்கிறது என்று அவர் கூறிய விளக்கத்தை  ஆட்சித் தலைவரிடம் வந்து சொன்னார்கள். 

அதற்கு ஆட்சித் தலைவர் சொன்னார். நான் சொல்வதை அவரிடம் போய் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். என்ன சொல்லி அனுப்பினார் ஆட்சித் தலைவர்?

அவரை அல்லாஹ்வுக்கு பிடித்திருக்கிறது, அல்லாஹ் அவரை நேசிக்கிறான், அல்லாஹ் அவரை விரும்புகிறான் என்ற பொருள்படும் வார்த்தையை சொல்லி அனுப்பினார்கள்.

சாதாரண மனிதனுக்கு ஒருவனை பிடித்து விட்டால் அவன் நினைத்த காரியத்தை அவனிடம் சாதித்து விடலாம். அவன் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான்.

அல்லாஹ் நம்மை விரும்பி விட்டால், அல்லாஹ் நம்மை நேசித்து விட்டால், அல்லாஹ்வுக்கு நம்மை பிடித்து விட்டால் வேறு என்ன இருக்கிறது. நாம் நினைப்பதெல்லாம் கிடைக்கும். சொர்க்கமே கிடைத்து விடும்.

இந்த சூரத்துல் இக்லாஸ் – குல்ஹுவல்லாஹு அஹது அத்தியாயத்தை ஒருவர் விளங்கி விரும்பி ஓதினால் அவரை அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அவரை நேசிக்கிறான். அல்லாஹ்வுக்கு அவரை பிடித்திருக்கிறது என்ற நற்செய்தி கூறிய ஆட்சித் தலைவர் யார் தெரியுமா? அவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.

இந்த வரலாற்று நிகழ்ச்சியை அறிவித்தவர் யார் தெரியுமா? அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள். நுால் புகாரி  7375.

நாமும் அல்லாஹ்வின் நேசத்திற்கும் பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரியவர்களாக அல்லாஹ்வுக்கு பிடித்தவர்களாக ஆக குல்ஹுவல்லாஹு அஹது அத்தியாயத்தை  விளங்கி ஓதுவோமா? 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.