APJ அப்துல் கலாம் - முஸ்லிமா? முனாஃபிக்கா?


நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:

நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:
(அப்துல் கலாம் குறித்தும், அவரது உண்மை நிலை குறித்தும் கடந்த காலங்களில் உணர்வு இதழில் எழுதப்பட்ட செய்திகளை காலத்தின் கட்டாயம் கருதி இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.)
தான் பயின்ற திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்கு வருகை புரிந்தார் ஜனாதிபதி வேட்பாளர் அப்துல் கலாம். கல்லூரியைச் சுற்றிப் பார்த்து தனது மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார் கலாம்.
1950-54 ஆண்டுகளில் அப்துல் கலாமுடன் பயின்ற ஒரு முஸ்லிம் நண்பர், அப்துல் கலாமைச் சந்தித்து “அந்தக் காலத்தில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த இரண்டே முஸ்லிம்கள் நாம்தான்” என்பதை நினைவுபடுத்தினார். உடனே இடைமறித்த அப்துல் கலாம், தயவு செய்து என்னை முஸ்லிம் என்று கூறாதீர்கள், இந்தியன் என்று கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி வேட்பாளராக கலாம் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில் தமிழகத்து செய்தியாளர்கள், நீங்கள் தமிழ்நாட்டுக்காரர் தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியை தமிழில் கூறுங்கள் எனக் கேட்டனர். அப்போது உடனிருந்த பிரமோத் மகாஜன், ஒரு பிராந்திய மொழியில் பேட்டித் தரக்கூடாது என்று அப்துல் கலாமைத் தடுத்தார். பிரமோத் மகாஜனின் உத்தரவுக்குப் பணிந்த அப்துல் கலாம் தமிழில் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.
அப்துல் கலாமை முஸ்லிமாகவும், தமிழராகவும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.
(ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறொம்)
அப்துல் கலாமின் அவமானப் பயணம்:
பதவியேற்றதும் முதல் சுற்றுப்பயணமாக குஜராத்துக்குப் போவதாக அப்துல் கலாம் முடிவெடுத்தவுடன் திடீரென ஆசாமி திருந்தி விட்டாரோ என பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்துல் கலாமின் குஜராத் பயணம் மணப்புண்ணுக்கு மருந்து போடுவதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தது.
ஷா ஆலம் முகாம் உள்ளிட்ட பல அகதி முகாம்களில் இந்திய முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட சோகம் நிலை கொண்டுள்ளது. அரசாங்கமே நடத்திய அராஜகத்தால் வாழ்விழந்த முஸ்லிம்கள் ஆறாத் துயரோடு அங்கே தங்கியுள்ளனர். அகதிகளான பின்னரும் பாஜக அரசு அவர்களை இயன்றவரை இம்சித்து வருகிறது.
குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அப்துல் கலாம் அம்மக்களைச் சந்தித்திருந்தால் அவர்களுக்கு அது ஓர் ஆதரவாக இருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்கியுள்ள அகதி முகாம்களை அப்துல் கலாம் முற்றிலும் தவிர்த்துள்ளார். அம்மக்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணமாக இருந்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தன்னோடே அழைத்துச் சென்றார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு குஜராத் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்ததையறிந்து அப்துல் கலாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
தனது வழக்கமான சிறுபிள்ளைத் தனங்களை அரங்கேற்றிட குழந்தைகளை அழைத்து கேள்விகள் கேட்டார். அதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை அவர் சந்தித்து தனது மதச்சார்பின்மையை(?) சிதைக்கவில்லை.
நரேந்திர மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப, தனது பார்வையிடல் பயணத்தை அமைத்துக் கொண்டார் அப்துல் கலாம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் மறந்தும் விசாரிக்கவில்லை. மருந்துக்குக் கூட ஆறுதல் வார்த்தைகளைக் கூறவில்லை. பூகம்ப சேத இடங்களைப் பார்வையிட்டு தனது காருண்ய குணத்தை வெளிக்காட்டினார் கலாம்.
நேரு காலத்தில் கும்பமேளாவில் மக்கள் நசுங்கி உயிர்விட்ட இடம், கும்பகோணத்தில் மகாமக நெரிசல் சாவுகள், இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடந்த எத்தனையோ இழப்புகள் உள்ளன. அவற்றையும் அப்துல் கலாம் பார்வையிட்டு தனது கருணையைக் காட்டட்டும். குஜராத்தில் இப்போது நடந்துள்ள கொடுமைகளை இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பின்னால் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் பார்த்துக் கொள்வார்.
இந்தக் கூத்துக்களை கண்ட ஒட்டுமொத்த உலகமும் உமிழ்கிறது.
(ஆகஸ்ட் 23 - 29, 2002 தேதியிட்ட உணர்வில் நாம் எழுதியது. அப்துல் கலாமின் மரணத்தினால் இதை மறக்க மாட்டோம்)
கலாமின் குஜாராத் பயணம் ஒரு கண்துடைப்பு :
அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நியமித்துவிட்டால் குஜராத்தில் தாங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளை உலக நாடுகளின் சிந்தனையிலிருந்து திசை திருப்பிவிடலாம் எனக் கனவு கண்ட பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார சக்திகள், மீண்டும் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்துல் கலாமை குஜராத்திற்குச் செல்ல வைத்து தங்கள் கபட நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர்.
குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய முகாமான ஷா ஆலம் முகாம், மற்றும் ஜுஹாபுராவில் உள்ள சங்கவித் நகர் முகாம் ஆகியவை அப்துல் கலாமின் பயணத் திட்டத்தில் இடம்பெறவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவித்துள்ளது.
இதற்கு மாறாக வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட கலூபூரில் உள்ள ஹஜ் இல்லம் மற்றும் ஜூஹாபுராவில் உள்ள விதவைகள் இல்லம் ஆகியவை அப்துல்கலாம் பார்வையிடும் இடங்களில் உள்ளவையாகும்.
86 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாடியாவிற்குச் செல்லும் கலாம் முன்னாள் எம்.பி. எஹ்ஸான் ஜாப்ரீ உள்ளிட்ட 39 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சமன்புராவிற்குச் செல்லவில்லை.
பிரதமர் வாஜ்பேய் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ உள்ளிட்டவர்கள் சென்ற மிகப்பெரும் நிவாரண முகாமான ஷா ஆலம் முகாமிற்கு கலாம் செல்லாதது பெரும் விந்தையாக உள்ளது.
செய்தி ஊடகங்களுக்குக் கூட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் இல்லம் மற்றும் விதவைகள் இல்லம் ஆகியவற்றிற்கு கலாம் செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் உடன்வர மாநில அரசு தடைவிதித்துள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ வந்தபோது செய்தி ஊடகங்களில் மாநில அரசுக்கெதிராக மிகப்பெரும் விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு எரிச்சலடைந்துள்ள அதிகாரிகள், அப்துல் கலாமின் வருகையின்போது செய்தியாளர்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.
மொத்தத்தில் அப்துல் கலாமின் குஜராத் பயணம் பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் காயங்களை போக்குவதாக இல்லை. மாறாக முக்கிய நிவாரண முகாம்களைப் பார்வையிடச் செல்லாத அவரது போக்கு அவர் சங்பரிவாரின் கைப்பாவைதான் என்பதை சந்தேகமின்றி நிரூபித்துள்ளது.
(ஆகஸ்ட் 16 - 22, 2002 தேதியில் நாம் எழுதியதை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்)
பா.ஜ.க. கொள்கையைப் பிரதிபலிக்கும் கலாம்:
பா.ஜ.க. கொள்கைகளுக்கு ஒத்து ஊதும் ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அப்துல் கலாம் நிரூபித்து விட்டார். தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அத்வானியும், அவருடைய ஆர்.எஸ்.எஸ். பரிவாரமும் பல தடவை கூறி வந்துள்ளது. அந்த கீறல் விழுந்த பழைய ரெக்கார்டின் பல்லவியை இப்போது கலாமும் பாடியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டால் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள் முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து எளிதாக எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்து விட்ட பிறகு மீண்டும் இந்தியர்கள் பட்டியலில் இணைவதற்கு ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டிவரும். அரசாங்கம் கேட்கும் அவ்வளவு ஆவணங்களும் எல்லோரிடமும் இருக்காது.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடும் மாற வேண்டிவரும். அதனால் பழைய விலாசம் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்றும் கூட அதிகாரிகள் நிராகரிக்கலாம். ரேஷன் கார்டு பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் வாக்காளர் அடையாள அட்டை பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்திலும் எழுத்துப் பிழையில்லாமல் யாருடைய பெயரும் சரியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு ஆவணங்களில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் கவனக்குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதும் சாதாரண விஷயமாகும்.
எனவே இதிலுள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் வீம்புக்காக அலைய விடலாம். இப்படி சட்டரீதியாக முஸ்லிம்களை அலைக்கழிப்பதற்கு அத்வானி கூறும் தேசிய அடையாள அட்டை சரியான காரணமாக அமையும். குஜராத், காஷ்மீர், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் வாழும் ஏராளமான முஸ்லிம்களை வந்தேரிகள் என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது.
தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டால் இம்மாநிலங்களில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து மத்திய பாஜக அரசு எளிதாக அகற்றிவிடும். மற்ற சமுதாய மக்களை விட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். ஆகவே தேசிய அடையாள அட்டை பற்றிய குறைகளைச் சொல்வதற்கு யாரை அணுக வேண்டும்? எத்தகைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்? உரிமைகள் பறிக்கப்படும் போது எப்படி சட்ட ரீதியாகப் போராட வேண்டும் என்ற வழிமுறைகள் தெரிய வாய்ப்பில்லை.
முஸ்லிம்களில் உள்ள பெரும்பான்மையினரின் நிலை இந்த வகையில்தான் உள்ளது. எனவே தேசிய அடையாள அட்டை என்ற யோசனை முஸ்லிம்களை நசுக்கவும் மனரீதியாக அவர்களைத் துன்புறுத்தவும் அரசுத் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்காகவும் தான் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப்பால் முன்மொழியப்படுகிறது. இதைத் தவிர இந்த அடையாள அட்டையால் வேறு எந்த வெங்காயமும் விளையப் போவதில்லை.
இந்த யோசனையை பா.ஜ.க. வைத் தவிர இந்தியாவில் உள்ள எந்தக் கட்சிகளும் தெரிவிக்கவில்லை. ஏற்கவில்லை. ஆனால் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கப் போகும் அப்துல் கலாம். இப்படிப்பட்ட தேசிய அடையாள அட்டை தேவை என்று டெல்லியில்  ஜூன் 25ஆம் தேதியன்று நடந்த தொழில்நுட்ப பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசியுள்ளார். தேசிய  அடையாள அட்டை ஒருமைப்பாடு அணுகுமுறைக்கு மிகவும் அவசியம் எனவும், அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
நாட்டு மக்களையும், சொந்த மண்ணையும் நேசிப்பவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அப்துல் கலாம் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் சொந்த நாட்டு மக்களை அகதி முகாம்களில் தங்க வைத்துள்ளவர்கள் ஆட்சியில் இதுபோல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு சதவீத அளவுக்குக்கூட இருக்க முடியாது என்பதுதான் உண்மை. பாஜக ஆட்சியில் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட்டால் அதனால் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சிதையுமே ஒழிய உறுதிப்படாது. 
இதை அப்துல் கலாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறும் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கு அப்துல் கலம் வலு சேர்த்து விடுவார் போல் தெரிகிறது.
(ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்)
கலாம் என்ற முஸ்லிம்?:
இந்தியாவுடைய அடுத்த ஜனாதிபதி ஆகப்போகின்ற அப்துல் கலாம் எல்லா வகையிலும் உலக அளவில் இந்தியாவிற்குப் புகழ் வாங்கிக் கொடுத்த விஞ்ஞானி என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரை ஏவுகணை மனிதன் என்பதில் எல்லா இந்தியர்களும் பெருமை அடைகிறோம்.
அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிமாகப் பிறந்ததினாலோ, முஸ்லிமாக வளர்ந்ததினாலோ முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதிகளான டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹமது இவர்களுக்கு சமமாகமாட்டார்.
கலாமைப் போலவே அவர்கள் இருவரும் மிகுந்த தேசப்பற்று உள்ளவர்களாகவும், இந்தியாவுடைய பெருமைகளை கட்டிக் காப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சொல்லிலும், செயலிலும் பெயரிலும் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்கள் திருக்குர் ஆன் வழி நடப்பவர்களாகவும், முஹம்மது நபி அவர்கள் காட்டிய வழியையே பின்பற்றுபவர்களாகவும் இருந்தார்கள்.
நாட்டுடைய வளர்ச்சியில் எப்படி அக்கறை கொண்டு இருந்தார்களோ அது போலவே தமது சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் மகாத்மா காந்திக்கு பிரியப்பட்ட உத்தமர்களாகவும் இந்தியாவுடைய சுதந்திர தியாகிகளாகவும் இருந்தார்கள்.
முஹம்மதலி ஜின்னாவின் பிரிவினை வாதத்தை எதிர்த்து அவர்கள் அபுல் கலாம் ஆசாத்தோடு கைகோர்த்து நின்றார்கள். இந்தியாவுடைய பண்பாட்டிலும், ஒருமைப்பாடிலும் ஒத்துப்போகக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.
டாக்டர் ஜாகிர் உசேன் ஜாமியா மில்லியா இஸ்லாமிய ஸ்தாபனத்திலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் உப தலைவராக இருந்தார். பக்ருத்தீன் அலி அஹமது அஸ்ஸாமிலும் மற்றும் சில மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் அறக்கட்டளைகளிலும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்துல் கலாமோ முஸ்லிம்களை விட்டும் எப்போதும் விலகி நிற்கவே முயற்சித்தர் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன். மேலும் அவர்களோடு பழகுவதையும் தவிர்த்தார். முஸ்லிம் சமுதாய விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார். 
மும்பையில் ஆல் இந்தியா கிலாபத் கமிட்டி வருடந்தோறும் நடத்தும் பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய மீலாது நபி தின பொதுக்கூட்டத்திற்கு இந்தக் கமிட்டியுடைய சேர்மன் என்ற முறையில் நான் அவர்களை நேரில் சென்று அழைத்தும் வர இயலாது எனத் தட்டிக் கழித்து விட்டார்.
1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலாபத் கமிட்டி நடத்தும் விழாக்களில் இந்தியாவுடைய பிரதமர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.
இதைப் போலவே மேலும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அஞ்சுமனே இஸ்லாம் சங்கம் நடத்திய நபி தின நினைவு நாளன்று நடக்கும் விழாவிற்கு அஞ்சுமன் நிர்வாகி இஸ்ஹாக் ஜும்கான்வாலா அழைத்தும் அவர் செல்லவில்லை. அதையும் தட்டிக் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் எந்த ஒரு முன்னேற்றத்திலும் இவருக்கு அக்கறை இல்லை என்பது கீழே குறிப்பிடுவதை வைத்து நீங்களே சொல்லலாம்.
மத்திய அரசாங்கத்தின் உதவியோடும், ஒத்துழைப்போடும் ஆரம்பிக்கப்பட்ட மௌலானா ஆசாத் எஜுக்கேஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையில் ஒரு நபராக இருந்தார். ஆனால் இதுவரை இவரை வைத்து முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
இந்து நண்பர்க்ளோடு பழகுவதையே அவர் விருப்பமாகக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் அதிக காலத்தை அவர்களோடு தான் அவர் செலவழித்தார் என்று சொல்வது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.
ஒரு முஸ்லிமை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கி இருக்கிறோம் என்று மார்த்தட்டிக் கொள்ளாதீர்கள். 
DRDL இதனுடைய முன்னாள் டைரக்டர் கே. ராமாராவ் எழுதுகிறார்.
32 வருடமாக நான் கலாமோடு பழகுகிறேன். 32 வருடகாலமாக எனக்கு அவரைத் தெரியும். 1954ல் இருந்து நாங்கள் ஒன்றாகவே ஒரே அறையில் தங்கியிருந்தோம்.
1980ல் விஞ்ஞானியாகி அதற்குத் தலைவராகி வரும் வரை என் கூடவே இருந்தார். அவர் இரவு வெகு நேரம் கழித்துத்தான் உறங்குவார். காய்கறிகள் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவர். முஸ்லிம் என்பதற்கு எந்தவொரு அடையாளமும் காணப்படாதவர். தினம் ஐந்து நேரத் தொழுகையோ ரமலான் மாதங்களில் நோன்பு நோற்கவோ நான் பார்த்ததில்லை.
பெங்களூர் மிஷிஸிளி சாட்டிலைட் சென்டரின் முன்னாள் டைரக்டர் ஆர். அறவுமதன் கூறுகிறார் “திருவனந்தபுரத்தில் இந்திரா பவன் லாட்ஜில் நாங்கள் தங்கியிருந்த காலத்தில் கலாமை, கலாம் ஐயர் என்று சொன்னால்தான் தெரியும். பிராமணர்களோடு இருப்பதையும், அவர்களின் உணவை சாப்பிடுவதையும் பெருமையாகக் கருதுபவர். அவர் அசைவம் சாப்பிட்டுள்ளார் என்றால் புரோட்டாவோடு முட்டை மசாலா மட்டுமே சாப்பிட்டுள்ளார். அவர் மாதா பிதாக்களை நினைத்தோ சொந்த பந்தங்களை நினைத்தோ பேசியதை நான் கேடதில்லை. ஆனால் தினந்தோறும் காலை பகவத் கீதை வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் கிருஷணனின் பக்தராக இருந்தார். சைவம் சாப்பிடுபவராகவும், சுத்த பிரம்மச்சாரியாகவும் இருந்தார். 
அவர் தன்னை ஒரு முஸ்லிம் ஜனாதிபதி என்றோ, முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அஹமது இவர்கள் போல் நானும் ஒரு முஸ்லிம் என்றோ சொல்லிக் கொள்ள விருப்பப்படாதவர். 
அவர் மோசமானவர் என்றோ இதற்கு முன்பிருந்த இரண்டு ஜனாதிபதிகளை விட தாழ்ந்தவர் என்றோ இதற்கு அர்த்தமில்லை. அவரை முஸ்லிம் என்று மதத்தின் பெயர் சொல்லி அழைப்பதையே நான் எதிர்க்கிறேன்.
(நன்றி : மாத்யமம் 21.06.2002 ஜூலை 12 - 18,2002 தேதியிட்ட உணர்வில் இடம்பெற்ற வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.)
மீலாது விழாக்களில்  நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது முஸ்லிம்களின் விழாவாக கருதப்படுகிறது. அரசு விடுமுறை விடப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் அந்த விழாவில் கூட கலந்து கொள்ள மறுத்துள்ளார். 
http://www.onlinepj.com/unarvuweekly/abdul_kalaam_kuriththu_unarvu_old_article/#.VcLwhbcVjug 

SatyaMargam.com
டந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM)  மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (வியாழன்) இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
மறைந்த அப்துல் கலாம் நல்லவர்;  வல்லவர் என்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதருமல்ல.  ஆனால் அவர்மீது அதீத அன்போ, எல்லையற்ற வெறுப்போ தேவையில்லை என்பதே நம் கருத்து.
"மரணம் அடைந்தபின் இவ்வுலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு கூலியை மறுமையில் அவர் பெற்றுக் கொள்வார்" எனும் நபிமொழி நமக்கு நினைவுபடுத்துவது, மரணித்தவரின் மறுமை நிலை பற்றி பேச இவ்வுலகில் எவருக்கும் அருகதை இல்லை என்பதே. ஆனால், தாங்கள் மட்டுமே சுவர்க்கம் செல்வோர் என்று சொல்லித் திரியும் ஒரு பிரிவினைவாதக் கூட்டம், காண்போரை எல்லாம் 'நரகவாசிகள்' என்று சகட்டுமேனிக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.
அப் பட்டியலில் மறைந்த அப்துல் கலாமையும் இணைத்து பொதுவெளியில் வைத்து அந்த டாக்டருக்கு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
SatyaMargam.comஅப்துல் கலாம் உருவாக்கிய, மனிதகுலத்திற்குத் நன்மை தரும் பல்வேறு நலத்திட்டங்களைப் புறம் தள்ளிவிட்டு, அவர் ஏன் இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை? ஏன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை? என்கிற ரீதியில் அடுக்கப்படும் இவர்களின் கேள்விகள், வரம்பைக் கடந்து இவர் முனாஃபிக் ஆகத்தான் மரணித்தார் என்றும் அவருக்காக துஆ செய்வதே கூடாது என்றும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்துக்கொண்டிருப்பது கவலைக்குரிய,  வருத்தத்திற்குரிய செய்தி மட்டுமன்று. மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.
ஏன்?
"இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்து விட்டார்கள்" என்ற (புகாரி 1393)  நபிமொழியை நன்கு அறிந்தும், பலர் நினைவுறுத்திய பின்பும் கூட இந்த வசவுகளில் ஈடுபட்டுட்டுள்ளோர் தம் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. மூமின்கள் இறந்துவிட்ட மனிதரின் நல்லறங்களை மட்டுமே பேச வேண்டும்; மஃக்பிரத் பெற்றுத் தர மட்டுமே துஆ செய்ய வேண்டும் என்று பல நபி மொழிகள் உலகத்திற்கு அழகாக முன்மொழிந்திருக்க அவையனைத்தையும் புறந்தள்ளி பிணம் தின்னிகளாக மாறி மரணித்தவரைப் பற்றி புறம் பேசி அலையும் பெரும் கொடுமையைக் காண முடிகிறது.
காஃபிர்களுடன் நடந்த போரில், வாளை உயர்த்திக் கொல்லப் போகும் நேரத்தில் கலிமாச் சொன்ன ஒருவரை நான் கொன்று விட்டேன் என்ற நபித்தோழரின் கூற்று நபிகளாரின் காதுகளுக்கு வந்தது.  விசாரணையில், "தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரி அவ்வாறு கூறியிருக்கலாம் அல்லவா!" என்று நபித்தோழர் விளக்கம் அளித்தபோது "உயிரைக் காக்கவே அவர் கலீமாச் சொன்னார் என்று அவரது இதயத்தைப் பிளந்து நீர் பார்த்தீரா?" என்ற நபிகளாரின் கடும் கண்டனம் நினைவில் வந்தால் உள்ளம் உதறல் எடுக்கும்.
"அப்துல் கலாம் சங்கராச்சாரியாரோடு அமர்ந்திருக்கிறாரே;  குத்துவிளக்கு ஏற்றியிருக்கிறாரே;   கோயில்களுக்குச் சென்றிருக்கிறாரே;   இது போதாதா இவர் காஃபீர் என்பதற்கு?” எனும் இவர்களின் வியாக்கியானங்கள் மேற்சொன்ன நபிமொழியைத் தூரம் வீசி எறிகின்றன. இத்தனைப் படங்களை இணைத்தவர்கள் அப்துல் கலாம் பள்ளிவாசல்களில் தொழும் பல்வேறு படங்களை ஏனோ இணைப்பதில்லை!
இந்தியா போன்ற பல்சமூகக் கட்டமைப்பினூடே வாழும் மக்கள் அனைவருக்குமான ஜனாதிபதி அவர் என்பதை மறந்து விட்டு, முஸ்லிம்களுக்கான ஜனாதிபதியாக மட்டுமே அவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது. அவரது இறை நம்பிக்கையில் பிழை இருந்தால் அதை நியாயத் தீர்ப்பு நாளில் அவரிடம் சரிபார்ப்பவன் இறைவன் மட்டுமே!
இறைத் தூதர் போதித்த சதக்கத்துல் ஜாரியாவாக Green Kalam திட்டத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நடுவதிலிருந்து ஏழை எளியோருக்கு பயன் தரும் பல்வேறு வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களை துவங்கி நிறைவேற்றியவர்;  நபிகளாரின் உன்னத போதனையான சமத்துவத்தினைப் பின்பற்றி மிக உயர்ந்த பதவியிலும் மிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்;  கிரிக்கெட்டுக்கு கைதட்டி விசில் அடித்தால்தான் நாட்டை நேசிப்பவன் என்ற கீழ்த்தர மனோநிலையை மாற்றி, நாட்டுப்பற்று என்றால் என்னவென்று இந்தியர்களுக்கு பாடம் நடத்திய முன்னோடி இந்தியர்;  தன்கீழ் பணியாற்றுபவர்களிடம் அன்பாய்ப் பழகியவர்; - சிறந்த தமிழ் மொழிப்பற்றாளர்; உலக அரங்கில் இந்தியர்களைத் தலை நிமிரச் செய்த அறிவியலாளர்; ஜமாஅத் தொழுகையின்போது அவரது பாதுகாப்பிற்காக பள்ளிவாசலுக்குள்ளே பிரத்தியேக இடத்தை ராணுவம் தேர்வு செய்தபோது அதை மறுத்து பிறரைப் போல நானும் இறைவனின் அடிமையே என்று உரைத்து மக்களோடு மக்களாக நின்று தொழுதவர்; இளைஞர்கள்,  மாணவர்கள், குழந்தைகள்தாம் இந்திய முன்னேற்றத்தின் அடிப்படை என்றுரைத்து 'கனவு கண்டு அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்' என்ற சித்தாந்தத்தை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர்; - சிறந்த கவிஞர்; அகந்தை அற்ற நற்குணத்தை பல்வேறு இடங்களில் நிரூபித்தவர்; தன்னடக்கத்திற்குச் சொந்தக்காரர்; - தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரை என்று தம் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்யாதவர்;  1950 களில் திருச்சி செஞ்ஜோசப் கல்லூரியில் படித்தபோது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்ற வறுமையின் காரணத்தால் சைவத்தை சாப்பிட ஆரம்பித்து அதனையே வாழ்நாள் முழுக்க கடைபிடித்தவர் - மறுமை நாள் சிந்தனைகள் பற்றியும் , குர்ஆன் வாசிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை என்றும் தனது உரைகளில் விளக்கியவர்; பூசணி உடைப்பது போன்ற பிற மத கலாச்சாரங்களை எள்ளி நகையாடாமல் அது அவரவர் நம்பிக்கை என்று கூறியதன் மூலம் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாசூக்காகக் கூறியவர் என இவரைப் பற்றிய சிறப்பம்சங்கள் ஏராளம். (www.satyaMargam.com)
இத்தகைய பண்புகளே, மதம் கடந்த இந்திய மக்களின் அன்பை டாக்டர் அப்துல் கலாமுக்குப் பெற்றுத் தந்தன.
9:84   وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ  அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
அப்துல் கலாமை காஃபீராக்குவோர், மேற்கண்ட சூரா தவ்பாவின் 84 ஆவது வசனத்தை ஆதாரமாகக் கூறி மிகத் தவறான விளக்கத்தை அளிக்கின்றனர்.  தப்ஸீர் இப்னு கஃதீர் விளக்கவுரையின்படி, முனாஃபிக் (நயவஞ்சகன்) தொடர்பாக இறங்கிய வசனம் இது. நயவஞ்சகனுக்கு மன்னிப்பு இல்லை எனும் சட்டங்களை அறிவித்த நபியவர்களே முனாஃபிக் என முன்மொழியப்பட்டவருக்கு தமது ஆடையை போர்த்தியதோடு ஜனாஸாவும் தொழ வைத்தார்கள். தயங்கிய நபித்தோழர்களிடம் 70 தடவை பாவமன்னிப்பு கேட்டாலும் முனாஃபிக் மன்னிக்கப்பட மாட்டான் என்று அல்லாஹ் கூறியதால் எழுபதுக்கு மேற்பட்ட முறைகளில் நான் பாவமன்னிப்பு கேட்பேன் என்று கூறியதன் மூலம் நயவஞ்சகனுக்கும் பாவமன்னிப்பு பெற முயற்சித்தார்கள்.
எவர் சுவர்க்கவாசி, எவர் நரகவாசி என்று அல்லாஹ்வும் இறைத்தூதரும் அறிவித்து விட்டவர்களைத் தவிர்த்து, வேறெவரின் மறுமை நிலையைப் பற்றி தீர்ப்பு உரைக்க நம்மில் யாருக்கும் உரிமையோ, தகுதியோ, அருகதையோ கிடையாது. காஃபிர்களுக்கு நேர்வழியின்பால் அழகிய முறையில் அழைப்பு விடுத்து முஸ்லிம்களாக்க ஒருபுறம் நன்மக்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்க -  இன்னொரு சாரார், இருக்கும் முஸ்லிம்களை காபிர்களாக அறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் முஸ்லிம்; - இவர் காஃபிர் என்று தரம் பிரிப்போர் இனியாவது இறைவனுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.
ஏகபோகத்துக்கு பரவும் ஏச்சும் பேச்சும் பொய்யாக இருந்துவிட்டால்? அவரது இவ்வுலக பாவங்கள் மறுமையில் மூட்டையாகத் தங்கள் முதுகில் ஏற்றப்படும் என்பதை புறம் பேசுபவர்கள் உணர வேண்டும்.  இறைக் கட்டளைகளை செயல்படுத்தி வரும்போதே, இறுதி நிலையில் முஸ்லிமாக மரணிப்போமா காஃபிராக மரணிப்போமா -  மறுமையில் தங்களுக்கு கிடைக்கவிருப்பது சுவர்க்கமா? அல்லது நரகமா? என்று உறுதியாகத் தெரியாத நிலையில் இறைவனிடத்தில் பிரார்த்தனைகளுடன் வாழ்கிறோம். இதில், இறந்து போன இன்னொருவரின் மறுமை நிலை பற்றி விவாதம். வேடிக்கை தான் இல்லையா?
இந்திய முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் சூழ்நிலையில் ராக்கெட், அணு ஆயுதம், வல்லரசு என்று உச்ச நிலையில் இந்தியாவைக் கொண்டு சென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முஸ்லிமைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம்.  மனம் போன போக்கில் எவரையும் முஷ்ரிக்காகவோ காஃபிராகவோ ஆக்கி அழகு பார்க்கும் விஷமக் கிருமிகளை அடையாளம் கண்டு தூர விலகி இருப்போம். இத்தகையோரிடம், இவர்களால் அநியாயமாக முஷ்ரிக் / காஃபீர் என இவ்வுலகில் அறிவிக்கப்பட்டவர்கள் மறுமையில் இறைவனிடம் முறையிட்டு தம் கணக்கைத் தீர்த்துக் கொள்வர்.
முஸ்லிமாகப் பிறந்து வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம். இறைவனுக்கு அஞ்சுவோம். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி அவனே! அவன் ஒருவனே!
- அபூ ஸாலிஹா

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.