அன்சாரி அவர்களே! என்ன இல்லை இஸ்லாத்தில் வெளியில் இருந்து உள் வாங்க?

எல்லா மக்களையும்  அரவணைப்பதுதான் இஸ்லாம். எனவேதான் எல்லா மக்களையும்  அரவணைப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.  எல்லா கொள்கைகளையும் அரவணைத்தால் அதற்குப் பெயர் இஸ்லாமிய மார்க்கம் அல்ல. அப்படி அரவணைப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர்கள் ஆவார்கள். எல்லா மக்களையும்  அரவணைப்பது என்பது வேறு. எல்லா கொள்கைகளையும் அரவணைப்பது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிவுடையவர்கள் அறிவார்கள்.


எல்லா மண்ணிலும் உள்ள மனிதர்களுக்கேற்ற மார்க்கம்தான் இஸ்லாம். இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சகோதரர் இதை விளங்கினார். இஸ்லாம் அவரை உள் வாங்கியது. மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற விளக்க நுால் வெளியிட்டார். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்சாரி அவர்களே ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் என்ன சொல்லி உள்ளீர்கள்?


இந்த மண்ணுக்கேற்ற அரசியலைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திராவிட இயக்க அரசியல், தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் ஆகியவற்றை உள்வாங்கி அரசியல் செய்ய வேண்டும் என்பதை முன்னெடுக்க நாங்கள் கட்சியைத் தொடங்கியுள்ளோம். (கட்சியை தொடங்க இதுதான் காரணமா?) இந்தக் கொள்கைகளை ம... உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பின்பற்றவில்லைஎன்று கூறி உள்ளீர்கள்.


உலகளாவிய அரசியல் சித்தாந்தங்களில் மன்னிக்கவும். நீங்கள் படித்தவர் ஆகவே ஆங்கிலம் கலந்த வார்த்தைகள்தான் உங்களுக்கு பிடிக்கும். ஆகவே அப்படியே எழுதுகிறோம். உலக அரசியல் இஸங்களில் மக்களிடம் தோற்றுப் போன இஸம்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடதுசாரிகளின் அரசியலான கம்யூனிஸம். அதில் எதை உள் வாங்கப் போகிறீர்கள்?


தமிழ் தேசியம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். தமிழ் தேசியம் என்று ஒன்றும் கிடையாது. தமிழ்நாடு என பெயர் வைத்துக் கொண்டாலும் அது இந்திய தேசியத்தில் உள்ள ஒரு மாநிலம்தான். தனி தேசம் (நாடு) இல்லை. தமிழ்நாடு என்பது இடுகுறி பெயர்தான் காரணப் பெயர் கிடையாது. தமிழ் தேசியம் என்ற ஒரு அரசியல் பாரம்பர்யம் வரலாற்றில் கிடையாது.

நாயக்கர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். ஒவ்வொருவரும் ஆட்சி செய்யும்பொழுது அவர்கள் சார்ந்த மதக் கொள்கைப்படிதான் ஆட்சி செய்து உள்ளார்கள். தவிர உங்கள் கண்டு பிடிப்பான தமிழ் தேசியம் என்ற எந்த ஒன்றும் வரலாற்றில் இருந்ததே கிடையாது. தமிழர்களுக்கு என்று கலாச்சார இருக்கிறது பண்பாடு இருக்கிறது. தேசிய அரசியல் கிடையாது. இல்லாத தேசியத்தில் எதை உள் வாங்கப் போகிறீர்கள்.


திராவிட இயக்க அரசியல் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் என்றழைக்கப்படட்ட காமராஜர் அவர்கள் திராவிடர்தான். தி.மு.க.வில் முதல் அமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும் திராவிடர்தான். ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது இருவருமே இந்திய அரசியல் சட்டப்படிதான் ஆட்சி செய்து உள்ளார்கள். இதில் திராவிட அரசியலை எங்கிருந்து உள் வாங்கப் போகிறீர்கள். பேராசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தை கவனிக்காத மாணவராக நீங்கள் இருந்துள்ளீர்கள். இந்தக் குறையை உங்கள் செயல்பாடுகள் பலவற்றில் கண்டுள்ளேன். இந்த உள் வாங்களிலும் தெளிவாகக் காண்கிறேன்.


மற்ற மதங்களில் அவ்வப்போது மாற்றி எழுத வேண்டிய உள் வாங்கல்கள் அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாம் என்பது அப்படி அல்ல. இஸ்லாம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம். நிச்சயமாக அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாம்தான் (அல் குர்ஆன் 3;19) அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் இந்த மண்ணுக் கேற்ற அரசியல் வழி காட்டல் இல்லை. ஆகவே கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களிடமிருந்தும் இணை வைப்பவர்களிடமிருந்தும் உள் வாங்கப் போகிறோம் என்கிறீர்களா? அதாவது இஸ்லாத்தில் குறை காண்கிறீர்களா? அன்சாரி!


முற்றிலும் உண்மையைக் கொண்டே அருளப்பட்டதுதான் அல்குர்ஆன் என்கிறான் அல்லாஹ் (17;105)  அந்தக் குர்ஆனில் இந்த மண்ணுக்கு ஏற்ற அரசியல் வழி காட்டல் இல்லை என்கிறீர்களா? (நபியே!) ஒட்டுமொத்த உலகத்துக்கும் அருளாகவே நாம் உம்மை அனுப்பி உள்ளோம் (அல் குர்ஆன் 21;107) என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்லி உள்ளான். ஒட்டுமொத்த உலகத்துக்கும் வழி காட்ட வந்த நபியிடம் இந்த மண்ணுக்கு ஏற்ற அரசியல் வழி காட்டல் இல்லை என்கிறீர்களா? அன்சாரி!


முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் பிற மதத்தவர்கள் யாராவது இருந்து. அவர்கள் அநியாயமாக முஸ்லிம்களின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டால், தண்டிக்கப்பட்டால். சொர்க்கத்துடைய வாசனையைக் கூட நீங்கள் நுகர முடியாது என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. (புகாரி 6914)  அன்சாரி அவர்களே நீங்கள் உள் வாங்க உள்ளவற்றில் இதை விட சிறந்தது உண்டா? சிறந்தது வேண்டாம். இதற்கு நிகரானதாவது உண்டா? உலகில் வேறு எதிலும்தான் உண்டா? உள் வாங்கி காட்டுங்கள் பார்ப்போம்.


உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்களிடையே தீர்ப்பு வழங்கும்போது நீதியாக  தீர்ப்பு வழங்க வேண்டும் (அல் குர்ஆன் 4;58) ஒரு சமுதாயத்தவர்கள் மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களை  துாண்ட வேண்டாம். (எல்லாரிடமும்) நீதியாக நடங்கள் (அல் குர்ஆன் 5;8)


ஆட்சிக்கு அரசியலுக்கு இதை விட சிறந்த வழி காட்டுதலை எங்கே இருந்து உள் வாங்கப் போகிறீர்கள். எதனையெல்லாம் உள் வாங்கப் போகிறீர்கள் பட்டியலிடுங்கள் பார்ப்போம். உள் வாங்கலுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. அதைச் சொல்லி உள்ளீர்களோ? எதையும் இஸ்லாத்தில் உள் வாங்க முடியாது. எதை உள் வாங்கினாலும் உள் வாங்கிய நீங்கள் உங்கள் வறுமையிலிருந்து தப்பிக்கலாம். மறுமையிலிருந்து தப்பிக்க முடியாது.



”இந்தக் கொள்கைகளை ம... உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறி உள்ளீர்கள்.  என்ன வழி காட்டுதல் இல்லை இஸ்லாத்தில் நீங்கள் வெளியில் இருந்து உள் வாங்க. முதலில் நீங்கள் இஸ்லாத்தின் உள் வாருங்கள். பிறகு புரிவீர்கள் எதையும் உள் வாங்கத் தேவை இல்லை என்று. 

முந்தைய தலைப்புகள் 

சட்ட(ம் இயற்றும்) சபைக்கு சன்மார்க்கத்தவர்கள் செல்லலாமா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.