சிறைவாசி சிம்மாசனம் ஏற முடியுமா?

ஒருமைப்பாட்டின் நாயகர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட ஏழாவது ஒப்பந்தம். “பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்” பிறருக்கு எதிரான போர் என்றாலும் அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி பொருளாதார உதவியும் செய்ய வேண்டும் என்பது இதில் அடங்கி இருக்கிறது.



அதாவது யூதர்களுக்கு எதிரான போர் என்றாலும் முஸ்லிம்கள் நமக்கு என்ன என்று இருந்து விடக் கூடாது. சரி நாமும் போய் போர் செய்வோம் என்று மட்டும் முஸ்லிம்கள் போய் விடக் கூடாது. முஸ்லிம்களிடமுள்ள பொருளாதாரத்தையும் செலவு செய்ய வேண்டும். யாருக்காக? யூதர்களுக்காக, எதற்காக? யூத சமுதாயத்தினரைக் காப்பாற்றுவதற்காக. முஸ்லிம்களை போருக்கு போகச் சொன்னதோடு நிற்கவில்லை. யூத இனத்தைக் காக்க முஸ்லிம்களும் தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்து உள்ளார்கள் இந்த ஒப்பந்தத்தில்.


ஒரு கட்சியினரோடு கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டால். அந்த கட்சி போட்டியிடும் தொகுதியில் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்ட முஸ்லிம்கள் எப்படி செயல்படுவார்கள்? உண்மையான புரட்சிக்குத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இந்த வழியில்தான் செயல்படுவார்கள். இந்த புரட்சி வரலாற்றை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை.


ஏனைய மக்களோடு முஸ்லிம்களுடைய தொடர்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வளவு அழகான முன் மாதிரி. சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற அழகிய முன் மாதிரியான வழிகாட்டுதல்களைத்தான், படிப்பினைகளைத்தான் இந்த தொடர் மூலம் அறிந்து பின் பற்றி செயல்படுத்த வேண்டும். இதுதான் தொடரின் நோக்கமாகும்


இதைப் பதிப்பிப்பவர்களிலிருந்து ஆட்சியாளர்கள் வரலாம். படிப்பவர்களிலிருந்தும் ஆட்சியாளர்களாக யாரும் வரலாம். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால். இது போன்ற அழகிய வழிகாட்டுதல்களை ஆட்சித் தலைவராக உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அல்லது அவர்களே ஆட்சித் தலைவராக அமர்ந்து சட்டத்தை இயற்றக் கூடிய அதிகாரத்தை அல்லாஹ் வழங்கலாம். அப்படி வழங்கினால் அவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தெரியாத எந்த விஷயத்தையும் செயல்படுத்த முடியாது. முதலில் தெரிய வேண்டும். அதனால்தான் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை. இராணுவ தரைப்படை, கடற்படை, விமானப்படை, தீ அணைப்பு படை மற்றும் போலீஸ் ஒத்திகைகள் நடக்கின்றன. சரியாகச் சொன்னால் பாடம் நடத்தப்படுகிறது


தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஆரம்ப வகுப்புகளிலே பாடம் சொல்லித் தருவார்கள். ஒருவரின் உடலில் தீ பிடித்து விட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அறியாதவர்களுக்கு வரும். ஆரம்ப பாடத்தில் தண்ணீரை ஊற்றுகிற மாதிரி ஒரு படம் போட்டு அதில் X தப்பு என அடையாளம் போட்டு இருப்பார்கள். ஒரு பெரிய விரிப்பில் போட்டு சுருட்டுகிற மாதிரி படம் போட்டு ரைட் (சரி) என்கிற அடையாளம் போட்டு இருப்பார்கள். இது சிறு வயதிலேயே மனதில் பதிந்து விடும்.


50 அல்லது 60 வயது ஆனதற்குப் பிறகு ஒரு இடத்தில் தீ பிடிப்பதைக் கண்டால். இப்படித்தான் செயல்படுத்த வேண்டும் என்ற அந்த பாடத்தை மூளை நினைவுக்கு கொண்டு வந்து விடும். எல்.கே.ஜி, யு.கே.ஜி. யில் அல்லது ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளில் படித்து அறிந்தது. நமது மனதில் இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்த பயன்படுகிறது


அப்படியானால் ஒரு மனிதன் உலகில் எதை செயல்படுத்துவதாக இருந்தாலும். அதை தியரியாகபிராக்டிக்கலாக ஒரு முறையாவது கேட்டு இருக்க வேண்டும், படித்து இருக்க வேண்டும், பார்த்து இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வழியில் தெரிந்து இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் எப்படி வழி நடத்த முடியும்? செயல்படுத்த முடியும்? சொல்ல முடியும்?


சிறைக் கொட்டடியில் இருந்த யூசுப் நபி(அலை) அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது எது? சிறையில் இருந்த நபி யூசுப்(அலை) அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது தன்னிடம் உள்ள, கனவுக்கு விளக்கம் கூறும் திறமையை சிறைத் தோழர்களுக்கு கூறி விளங்க வைத்தார்கள். (அல் குர்ஆன் 12:37) 


விடுதலையாகக் கூடியவரிடம் தன்னைப் பற்றி சொல்ல வேண்டிய இடத்தில் அதாவது ஆட்சியாளரிடத்தில் சொல்லச் சொன்னார்கள். விடுதலையானவரை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். (அல் குர்ஆன் 12:42)  நீண்ட காலமாக மறந்து விட்டவருக்கு கனவு  பற்றிய பேச்சு வந்ததும் நபி யூசுப்(அலை) அவர்கள் சொல்லி வைத்தது நினைவுக்கு வந்தது. (அல் குர்ஆன் 12:45).


தியரியாகபிராக்டிக்கலாக கேட்டு பயன் பெற்றதால் சிறைத் தோழர் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில் எடுத்துச் சொன்னார். நபி யூசுப்(அலை) அவர்கள் உணவு அமைச்சராக ஆனார்கள். ஆட்சியில் பங்கு பெற்று அதிகாரம் உடையவராகவும் ஆனார்கள்.  (அல் குர்ஆன் 12:55,56). ஆகவே சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும்.  சொல்லி வைத்தால் சிறைவாசியும் சிம்மாசனம் ஏற முடியும்.


இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள், தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருப்பவர்கள். இது போன்ற இஸ்லாமிய விஷயங்களை படித்தார்களா? விளங்கினார்களா? அல்லது மார்க்க நிகழ்ச்சிகளிலே விளக்கப்படுவதை சற்று நேரமாவது அமர்ந்திருந்து கேட்டிருக்கிறார்களா? இல்லை. அப்படியானால் இல்லாத ஒன்றை எதிர் பார்க்க முடியுமா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.. அவர்கள் இது போன்ற விபரங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இஸ்லாத்தை நாம் எதிர்பார்த்தால் கிடைக்குமா? கிடைக்காது.


பொதுப் பணித்துறை அமைச்சர் சட்டசபையில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இந்துக்கள் ராமனை வணங்குவதைப் போல, கிறித்துவர்கள் ஏசுவை வணங்குவது போல, முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்குவதைப் போல என்று பேசினார். சபையில் இருந்த த.மு.மு.க.வால் வார்க்கபட்ட மமக எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா இடைமறித்து எழுந்தார். 'நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் வணங்கவில்லை. ஓரிறையையே வணங்குகிறார்கள்" என்ற விளக்கத்தை தெரிவித்தார். மானிய கோரிக்கையின் போது இடைமறித்து பேசக்கூடாது என்பது மரபு. எனினும் முதல்வர் அந்த பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தார்.


அல்லாஹ்வின் பள்ளியினுள் வந்து சிறு நீர் கழித்தவரிடம் கூட நபி(ஸல்) கோபப்படவில்லை. தவறியவர்களுக்கு நபி வழியில் புரிய வைத்தால் தானாக வருந்தலாம். அவர்கள் உள்ளம் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படலாம். 

நபி வழியில் சுட்டிக் காட்டிய பின்பும் திரித்திக் கொள்ளவில்லை, தவறுக்கு வருந்தவில்லை என்றால் விவகாரத்தை வீதிக்கு கொண்டு வரவேண்டியதுதான். எடுத்த எடுப்பிலேயே வீதிக்கு வருவது வீரியமிக்கவர்கள் செயல் அல்ல. வியாதிமிக்கவர்களின் செயல் அது. விளம்பரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளவர்களின் விளம்பர வெறிச் செயல். மன நோயாளிகளெல்லாம் எல்லாரையும் தங்களைப் போலவே கருதி எப்பொழுதுமே வீதியில் நின்றுதான் கத்திக் கொண்டிருப்பார்களாம். ஆகவே மன நோயாளிகள் போல் செயல்படக் கூடாது.

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மார்க்க விஷயங்களை, வழிகாட்டுதல்களை அழகிய முறையில் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் அழகிய முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) வழியாகும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய நேரத்தில்,. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல. நம்மவர்களை சட்டமன்றத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள். மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்” என்பது எட்டாவது உடன்படிக்கையாகும். குழப்பங்களை ஏற்படுத்துவதையும் விஷமத்தனம் செய்வதையும் தொழிலாகக் கொண்டு திரிபவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும். இரத்தம் ஓட்டுதல் என்பது அறவே கூடாது. இரத்தம் ஓட்டுதல் முற்றிலும் ஹராமாக்கப்பட்டிருக்கிறது.

மதத்தின் பெயரால் குழப்பங்களை ஏற்படுத்தி கொலை செய்யத் துாண்டியவர்கள். தங்களை புனிதவான்களாகக் காட்ட பிறர் மீது அநியாயமாக பழி சுமத்தி விஷமத்தனம் செய்து கொண்டு திரிவதைப் பார்க்கிறோம். 

இந்த மூன்றும் செய்யக் கூடியவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக வன்மையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதுதான் இஸ்லாத்தின் நிலை. இதை எட்டாவது உடன்படிக்கையில் இருந்து அறிகிறோம். ஒன்பதாவது ஒப்பந்தம் இறைத்துாதர் வாழ்வில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் நிகழ்ச்சியாகும். அது என்ன நிகழ்ச்சி?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை
ஏப்15-21,2016
அடுத்த தலைப்பு

குமாரசாமி கால்குலேட்டர்களை கொடுத்து தீர்ப்பு கூறச் சொல்லுமா கூட்டணி ?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.