பாதிப்பை ஏற்படுத்தியவனும், பாதிக்கப்பட்டவனும் சமமே எனும் ரீதியில் பேசக்கூடாது.

பாதிப்பை ஏற்படுத்தியவன் தண்டிக்கப்பட்டாக வேண்டும். பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் அளித்தாக வேண்டும்.

அன்புச்சகோதரர் A.R. பரகத் அலி அவர்களுக்கு,

நம் அனைவரின் நல்லெண்ணத்திற்கும், முயற்சிகளுக்கும் சிறந்த கூலியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.

சமரசம் அல்லது சமாதானம் என்று பேசும்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியவனும், பாதிக்கப்பட்டவனும் சமமே எனும் ரீதியில் பேசக்கூடாது. பாதிப்பை ஏற்படுத்தியவன் தண்டிக்கப்பட்டாக வேண்டும். பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் அளித்தாக வேண்டும். அண்ணன் PJஅவர்களின் அதிரடியான அவசரக்குடுக்கை செயலினால் இயக்கமும், சமுதாயமும் பாதிக்கப்பட்டு பிளவுபட்டு நிற்பதாய் வருத்தப்படக்கூடிய தாங்கள், ஒரு சமரச திட்டத்தை முன்வைக்கும்பொழுது அதன் பலனாக எதனை அடைய வேண்டுமென்ற குறிக்கோளை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

அத்தகைய குறிக்கோளாக தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றிலுள்ள முக்கிய அம்சம்

 எல்லா முஸ்லிம்களும் வரவேற்பார்கள். வெறுப்பவர்கள் கூட விரும்புவர்
 அரசியல் கட்சிகள் ஆச்சரியப்படுவார்கள்
 பிற இயக்கங்களுக்கு முன்னுதாரணமாய் அமையும்
 அகில இந்தியாவிற்கே தலைமை ஏற்று வழி நடத்தப்படலாம்
 அத்துடன் அல்லாஹ்வின் திருப்தியும் ஏற்படும்

மேற்கூறியவற்றில் தாங்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள் போலும். பிரிந்தவர் கூடினால் சந்தோஷமே. ஆனால் கூடுவது மீண்டும் பிரிவதற்காக இருக்கக் கூடாதல்லவா.

'மனம் திறந்த மடல்' க்குப்பின் சமரசம் மூலம் இணைந்து இன்று 'முக்கிய அறிவிப்பின்' மூலம் பிரிந்த அண்ணன், மீண்டும் இணைந்தால் இருக்கப்போவது எத்தனை நாட்களுக்கு? இதற்கான உத்திரவாதத்தை யார் தர முடியும்? நீங்களா? உங்களைப் போல ஆசைப்படும் நானும் நம்மைபோன்ற பிற தவ்ஹீத்வாதிகளுமா? அல்லது அண்ணனேவா? யார் இதற்கான பதிலைத் தர முடியும். இதற்கு பதில் கிடைக்காமல் கூறப்படக்கூடிய குறிக்கோள்கள் யாவும் கற்பனையாகவே அமையும். இதனை நான் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. மாறாக மனம் திறந்த மடலுக்குப்பிறகு கிடைத்த அனுபத்தின் மூலம் கூறுகிறேன்.

எனவே சமரச திட்டத்தை முன்வைக்கும் தாங்கள் யாரிடம் இதனை முன்வைக்கிறீர்களோ அவர்களது செயல்களை சீர் தூக்கிப் பார்த்து அவர்வர் குறைகளை சுட்டிக்காட்டியும் அடுத்தவர்களின் உயர் பண்புகளை எடுத்துரைத்தும் சமரசத்திற்கு அழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அண்ணன் அவர்கள், பிரிவு தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாது மக்களையும் சென்றடைந்து விட்டது என குறிப்பிட்டுள்ளதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பிரிவை மக்களிடம் முந்திச் சென்று சேர்ப்பித்தது யார்? என தங்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களிடம் சென்று சேர்வதை தடுக்க முயன்ற பல நல்லவர்களின் குரலுக்கு, அழைப்புக்கு பதிலளிக்காத, பதிலளிக்க விரும்பாத அருமை அண்ணன் அவர்கள் இன்று யார் எப்பொழுது அழைத்தாலும் உடனடியாக 'லைனில்' வருகிறார் என்ற தகவலும் தாங்கள் அறிந்தது தான். ஆக மக்களின் நாயகனான அண்ணன் அவர்கள், இப்பிரிவு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றே விரும்புவதாக தெரிகிறது.

இந்நிலையில் தாங்கள் குறிப்பிட்டுள்ள முதல் மூன்று யோசனைகளில் அண்ணன் அவர்களுக்கு சார்பாக இருந்தது ஒன்றுதான். அது அண்ணன் வகைறாக்களிடம் தலைமையை ஒப்படைப்பது. இது நீங்களோ, நாங்களோ அல்லது நிர்வாக பொறுபிலிருந்த 12 நபர்களோ முடிவெடுக்ககக் கூடியதல்ல. மாறாக கிளைஃநகர நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதற்கு கூட ஜுன் - ஜுலை வரை காத்திருக்க வேண்டும். அதிலும் அவசரப்பட்டுவிட்டதால் காரியம் கை மீறிப் போய்விட்டது. ஆக தாங்கள் குறிப்பிட்டிருந்த மூன்றிலும் அண்ணனுக்கு சாதகமாக எதுவுமில்லை என்பதே உண்மை.

அதே சமயம் தாங்கள் வைத்துள்ள நான்காவது யோசனையில் அண்ணன் இழப்பதற்கு எதுவுமில்லை. மாறாக ஏப்ரலுக்கு முன்னர் அவர் எதை நாடினாரோ அதனை சாதித்துக்கொள்ள தங்களின் யோசனையை அருமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தான், தங்களின் இத்திட்டமே தலைசிறந்தது எனக் குறிப்பிட்டு தங்களின் மெயிலுக்கான பதில் ஓரிரு மணி நேரத்திலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதனை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இத்திட்டத்தை அண்ணன், பாக்கர், அலாவுதீன், அன்வர்பாய் சார்பாகவும், தவ்ஹீத் ஜமாத் சார்பாகவும் (ஓரிரு மணி நேரத்தில்) ஏற்றுக் கொண்டதாக அறிவித்து உள்ளதையும், 12 பேரில் எவரும் எக்காரணம் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக எப்படி முடிவெடுக்கப்பட்டது? தவ்ஹீத் ஜமாத் பொதுக் குழு மீண்டும் திருச்சியில் கூட்டப்பட்டதா? அல்லது உதவித் தலைவர் (அண்ணன்) தலைவரை (ளுளுருயை)கலந்தாலோசித்தா? அல்லது தலைவர் (அண்ணன்) தன்னிச்சையாக எடுத்த முடிவா? தவ்ஹீத் ஜமாத் தலைவர் இதனை அறிவிப்பாக உணர்வில் வெளியிடுவாரா? அவரது கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, அண்ணன் தன்னிச்சையாக அறிவித்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தங்களின் கோரிக்கைகயில் 'புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஆலோசகர்களாக செயல்படுங்கள். நீங்கள் எந்தவிதமான ஆலோசனையைக் கூறினாலும் அதில் இறுதி முடிவு எடுக்கும் உரிமையை தலைமையிடமே ஒப்படைத்து விடுங்கள்' எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். மிகச்சரியான வார்த்தைகள் இவ்வாறு நடக்க உறுதியும் உத்திரவாதமும் அளிக்கப்பட்டால் இததையைதொரு பாரிய முயற்சி எடுப்பதில் பயனுண்டு. ஆனால் இதற்கு அண்ணன் அவர்கள் உத்திரவாதம் அளிக்க மாட்டார். ஒரு வேளை உத்திரவாதமாக ஒப்புக்கொண்டாலும் உறுதியாக இருக்க மாட்டார். இது கற்பனையல்ல. இதுவும் கடந்தகால அனுபவமாகும்.

 தமுமுகவிலுருந்து வெளியேறிய போது கொள்கைப் பிரச்சனை என்றார். தற்சமயம் தலைமையை மாற்றக் கோருகிறார். பிரச்சனை கொள்கையா? தலைமையா? கொள்கைதான் முக்கியம் என அவர் கூறியதைக் கேட்டு வெளியேறிய சகோதரர்கள் தலைமை மாற்றினால் மட்டும் இணைந்து விடுவார்களா?
 புதிய தலைமை என அவர் குறிப்பிடுவது, அவரது சொல்படி ஆடும் தலையாட்டி தலைமையா? அல்லது பிற நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கும் தலைமையையா?
 புதிய தலைமையின் இறுதி முடிவுகளுக்கு இவர் கட்டுப்படுவார் என்பதற்கு என்ன உத்திரவாதம்? (அப்படி கட்டுப்பட்டிருந்தால் பிரச்சைனையே எழுந்திருக்காதே !)
 பொதுக்குழு உறுப்பினர்களால் இப்போதைய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என உத்திரவிடுவது ஏன்? பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குரிமையை இவர் ஏன் பறிக்க நினைக்கிறார்? இப்படி ஒரு சர்வாதிகாரப் போக்கு எப்படி ஒரு ஜனநாயக இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும்?
 களப்பணியாற்றினால் ஈமானை இழந்து விடுவோம் என ஏகத்தவம் இதழில் தலையங்கம் எழுதப்பட்டது. ஏகத்துவம் இதழ் அண்ணனின் மேற்பார்வையில் அண்ணனின் அன்பிற்குரிய அறிஞர் சம்சுல்லுஹாவால் தானே நடத்தப்படுகிறது. இக்கருத்து அண்ணனுக்கு உடன்பாடானதா? எதிரானதா? எதிரானது எனில் ஏன் அதனை தடுத்து நிறுத்தவில்லை. உடன்பாடானது எனில் உணர்வு பத்திரிக்கை கேள்வி பதிலில் 'நாம் அவ்வாறு கூறவில்லை. நாமே களப்பணி ஆற்றிக்கொண்டுதானே இருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளது ஏன்?
 ஏகத்துவம் பத்திரிக்கை தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரபூர்வ பத்திரிக்கையா? அல்லது சம்சுல்லுஹாவின் தனிப்பட்ட பத்திரிக்கையா? அதிகாரபூர்வ ஏடு எனும் பட்சத்தில், தற்சமயம் உணர்வில் வெளியாகியுள்ள அண்ணனின் பதில் எதிர் மறையாக காணப்படுவதால், அண்ணன் தவ்ஹீத் ஜமாத் கொள்கைகளுக்கு மாற்றமாக செயல்படுவதாகக் கொள்ளலாம் தானே?
 உணர்வின் வெளியான அண்ணனின் பதில் மூலம் அவர் தமுமுக தலைமையல்ல, தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கும் கூட மாற்றமாகத்தான் செயல்படுவார் என்பது விளங்கவில்லையா?
 உணர்வில் முபாஹலா சம்பந்தமான கேள்விக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்காமல் பொது விவாதத்திற்கு தயாரா என திசை திருப்பினாரே ஏன்?

இப்படியான பல கேள்விகள் நாலாபுறத்திலிருந்தும் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவற்றிற்கு முன்பைப் போல் வீரியத்துடன் நம்மால் பதிலளிக்க இயலவில்லை. காரணம் இக்கேள்விகளில் உண்மையுள்ளது. இதில் நாம் சப்பைக்கட்டு கட்ட இயலாது. நமது இயலாமையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். நமது செயல்பாடுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருந்தால் இவற்றிற்கு பதிலளித்திருக்க முடியும். ஆனால் அண்ணன் எனும் தனிமனிதனின் செயல்களுக்காக வக்காலத்து வாங்க நினைப்பதால் வலிமையாக பதிலளிக்க முடியவில்லை. தவிர, அண்ணன் காட்டித்தந்த வழி முறைப்படி மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள்தான். மனிதர்கள் என்ற முறையில் இரு தரப்பாரும் செய்துள்ள தவறுகளைப் பார்க்கும்பொழுது தமுமுக செய்த தவறுகளை விட தனிமனிதனாக அண்ணன் செய்துள்ள தவறுகள் அதிகமாக காணுவதால், அண்ணனது செயல்பாடுகளுக்கு துணை நிற்க நம்மால் இயலவில்லை. அண்ணன் கற்றுத்தந்த தவ்ஹீதை கடைபிடிக்கலாம். பின்பற்றலாம். அவரையே பின்பற்ற எண்ணுவது தக்லீதாகும். இதுவும் அண்ணன் கற்றுத்தந்த தவ்ஹீத் அடிப்படையில்தான்.

எனவே சமரசம் என்ற பெயரில் அண்ணன் சார்பு கருத்துக்களை உலவ விடுவதை விட்டுவிட்டு அதிக தவறு இழைத்தவர் என்ற அடிப்படையில் அண்ணனை விட்டும் விலகிக் கொள்வதுதான் நல்லதென நான் நம்புகிறேன்.

இனி சமுதாய அக்கறை கொண்டவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது ஒருவர் மீது ஒருவர் புழதிவாரித் தூற்றாமல் அவரவர் பணிகளைச் செய்து கொள்ளுங்கள் என இரு தரப்பினரையும் அறிவுறுத்துவது வேண்டுமானால் இந்நேரத்திற்கான சரியான சமரச ஏற்பாடாக அமைய முடியும். மாறாக அண்ணனது இயல்புக்கு மாற்றமாக இணைப்பது என்பது நடக்க இயலாத காரியமாக முடியும். அதற்கு முன்பாக தமுமுகவிலிருந்து கைப்பற்றியவற்றை திரும்பக் கொடுத்துவிட்டு அவரது விருப்பம்போல் தவ்ஹீது பணியில் ஈடுபட வலியுறுத்துங்கள். இதுவே தாங்கள் சமுதாயத்திற்கு செய்யக் கூடிய மிகச் சிறந்த பணியாக அமையும்.

வஸ்ஸலாம்

இப்படிக்கு,
அப்துல்காதர்
செயலர் - தமிழ் தஃவா கமிட்டி
தம்மாம் - சவுதி அரேபியா
MOB : 1096650 9878648

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.