ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி யார் முன் மாதிரி.

யாருக்கு யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம் என்று முந்தைய வெளியீட்டை முடித்து இருந்தோம். அதன் தொடருக்கு முன்னதாக இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறி;ந்தவன் பேணிக் காப்பவன் என்று( 12:55) கூறிய யூசுப் (அலை) அவர்களிடம் உள்ள அரசியல் முன் மாதிரிகளை நினைவு கூறுவது இன்றைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. தேர்தல் நேரமாக - சாதனை பிரச்சார நேரமாக இருப்பதால் மிக பொருத்தமானது. எனவே அதனை முதலில் பார்ப்போம்.

ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி.

ரேஷன் முறையை கொண்டு வந்தது காங்ரஸ் ஆட்சிதான். இல்லை திமு.க. ஆட்சிதான். இல்லை இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரேஷன் முறையை கொண்டு வந்தார்கள். இப்படி வயதுக்கு தக்கவாறு வாதிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் பொருள்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டால் பஞ்சம், தட்டுப்பாடு வரும். எனவே அந்த பொருள் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் அரசாங்கமே வினியோகிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் பணக்காரர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். ஏழைகளுக்கு கிடைக்காது. எனவே ரேஷன் முறை அவசியம். இந்த ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்கள்தான் என்பதை அறிகிறோம்.

முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர்.

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வழி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். உணவு அமைச்சர் என்று இன்று நாம் சொல்கிறோமே அந்த உணவு அமைச்சர் என்ற பதவியை முதலில் வகித்தவர். முன் மாதிரி உணவு அமைச்சராக இருந்து காட்டியவர் யூசுப் (அலை) அவர்கள்தான்.

தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும்.

தகுதி உடைய பலர் உள்ளத்தில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசக் கூடியதைப் பார்க்கிறோம். அப்படி செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என வானளாவ ஆய்வுரை அறிவுரை வழங்குவார்கள். பிறரை ஏவி விடுவார்கள். பலன் கிடைத்தால் நான் சொன்ன யோசனை என்பார்கள். பிரச்சனை என்றாகி விட்டால் சொல்லைக் கேட்டு செயல்பட்டவனின் தலையில் கட்டி நழுவி விடுவார்கள். இதுதான் இன்றைய தகுதி உடையவர்கள் எனப்படுவோர் நிலையாக உள்ளது. மக்கள் நலன் காப்பதற்காக தகுதி உடையயவர்கள் பதவியை கேட்டுப் பெற வேண்டும். இதற்கு உளத்தூய்மைமிக்க முன் மாதிரி அரசியல்வாதியாக யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள்.

உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமா?

நடுநிசியில் முன்னெச்சரிக்கை கைது செய்தவன் ஆட்சியில் பொறுப்பு கேட்கலாமர்? உங்களை தடாவில் தள்ளியவன் பொடாவில் போட்டவன் ஆட்சியிலா பொறுப்பு கேட்கிறீர்கள்? உங்களை சிறையில் அடைத்தவன் ஆட்சியில் பொறுப்பு வகிக்கலாமர்? என்றெல்லாம் கேள்விகள் உள்ளது. அசிங்கமான கற்பழிப்பு முயற்சி என்ற பொய் குற்றச்சாட்டுக் கூறி சிறையில் தள்ளப்பட்டவர் நபி யூசுப் (அலை) அவர்கள்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம்.

எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியின் போது பஞ்சம் வரும் என்பதை முதன் முதலில் தெளிவாக தெரிந்தார்கள் யூசுப் (அலை) அவர்கள். உடனே நம்மை சிறையில் தள்ளிய ஆட்சியில் பஞ்சம் வரட்டும். அதன் மூலம் அந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வரட்டும் என பழி தீர்க்க நாடவில்லை. பஞ்சத்தை சமாளிக்கும் பொறுப்பை ஏற்றார்கள். நிரபராதியை சிறையில் அடைத்த ஆட்சியாக இருந்தாலும் சமுதாய நலன் கருதி அந்த ஆட்சியில் பங்கு வகிக்கலாம். எந்த ஆட்சி சிறையில் தள்ளியதோ அந்த ஆட்சியில் பதவி வகிக்கலாம். இந்த பரந்த மனப்பான்மையுடன் கூடிய தூய அரசியல் வழி காட்டலை சிறந்த அரசியல்வாதி யூசுப் (அலை) அவர்களிடம் காண்கிறோம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம்.

முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாமா என்ற கேள்விகளும் உள்ளது. தான் ஒரு நபியாக இருந்தும் கவுரவம் பாராமல் சமுதாய நலன் கருதி முஸ்லிம் அல்லாத மன்னரின் கீழ் அமைச்சராக இருந்து சமுதாயத்துக்கு பணியாற்றினார் நபி யூசுப் (அலை) அவர்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் முஸ்லிம்கள் பதவி வகிக்கலாம். அதன் மூலம் சமுதாயத்துக்கு பணியாற்றலாம் என்பதற்கும் நபி யூசுப் (அலை) அவர்கள் அரசியல் வாழ்வு முன்னுதாரணமாக உள்ளது.

அகில உலகுக்கும் முன் மாதிரி.

15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறார். இதைப் பார்த்து ஆந்திரா அறிவிக்கிறது. ஆந்திராவுக்கு முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். அகில இந்திய கட்சியினரும் அறிவிக்கிறார்கள். அகில இந்தியாவுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான். ஏன் அகில உலகுக்கும் முன் மாதிரி கலைஞர் கருணாநிதிதான் என்று பேசுகிறார்கள். இப்படி மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, தயாநிதி மாறன் பேசினால் நாம் வருத்தப்பட வேண்டியதில்லை.

வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

இப்படி யார் பேசுகிறார்கள். ஓட்டுப் போடுவது ஹராம், அரசியல் ஹராம், தேர்தல் களத்தில் ஈமான் போய் விடும் என ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுத்தவர்கள். இட ஒதுக்கீடு தந்தாலும் கோவையில் 19 பேர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்காதவரை கருணாநிதியை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்று பேசியவர்கள். அந்த சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு குர்ஆன் ஹதீஸ்களைக் கூறிய அந்த அறிஞர்கள்? 15ரூபாய்க்கு பெறுமான கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு தர கலைஞர் கருணாநிதிதான் அகில உலகுக்கும் முன் மாதிரி என்று பேசுவதால் நாம் வேதனைப்படுகிறோம். வெட்கித் தலை குணிகிறோம்.

வழி காட்டியவர் யார்?

வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடும் மக்களிடம் குறைவான பணம் வாங்கி விட்டு ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக நிறைவாகக் கொடுக்கவும் தானமாகக் கொடுக்கவும் வழி காட்டியவர் யார்? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கு மட்டுமல்ல ரூபாய்க்கு மூன்று படி அரிசிக்கும் யார் முன் மாதிரி. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் யூசுபிடம் வந்து அமைச்சரே எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88

யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

இன்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள் வாங்குகிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட பண்டமாற்று முறை இருந்து வந்துள்ளது. இப்பொழுதும் கூட கிராமங்களில் பண்டமாற்று முறை இருக்கத்தான் செய்கிறது. நபி யூசுப் (அலை) அவர்கள் காலத்தில் பண்டமாற்று முறைதான். வாங்கும் சக்தி குறைந்து வறுமையில் வாடிய மக்களிடம் மிகக் குறைந்த சரக்குகளை பெற்றுக் கொண்டு (அதாவது மிகக்; குறைந்த விலையில்) உணவுப் பொருள் வழங்கி இருக்கிறார்கள். அதனால்தான் உரிமையுடன் அற்பமான சரக்குகளையே கொண்டு வந்து இருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக. 12:88 என்று கேட்டுள்ளார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வழங்க அகில உலகுக்கும் யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள்.

அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி.

இது மட்டுமா அரசு சார்பாக வறுமையில் வாடிய மக்களுக்கு தானமும் செய்துள்ளார்கள். எனவேதான் எங்களுக்கு தானமாகவும் தருவீராக. 12:88 என்றும் கேட்டுள்ளார்கள். இன்று அரசு சார்பாக தானமாக இலவச வேட்டி, சேலை, என பல்வேறு தானங்கள் வழங்கப்படுகிறது. இப்படி அரசு சார்பாக தானங்கள் செய்ய யார் முன் மாதிரி. நபி யூசுப் (அலை) அவர்கள்தான் முன் மாதிரி. யாருக்கு யார் முன் மாதிரி புரிகிறதா? இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள். மானங்கெட்டவர்கள்.

இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி யார்?

நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரம், காவலர் குடி இருப்பு என அரசாங்கமே வீடுகளை அமைத்துக் கொடுப்பதை பார்க்கிறோம். இந்த இலவச வீடுகள் திட்டத்துக்கு முன் மாதிரி எது? அல்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள் என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் வஹீ அறிவித்தோம். 10:87. என்று அல்லாஹ் கூறுகிறான். அனைத்துக்கும் முன் மாதிரியாக இஸ்லாமும் இஸ்லாமிய அரசியலும்தான் இருக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

சமுதாயத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள், பிரபலமானவர்கள் என்ற ஒரே பலத்தை சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு தவறாக பயன்படுத்தி விட்டார்கள். இஸ்லாமிய விரோதிகளும் இவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பேண்டு போடுவது ஹராம். ஆங்கிலம் ஹராம். அரசியல் ஹராம். ஓட்டுப் போடுவதும் ஓட்டுக் கேட்பதும் தேர்தலில் நிற்பதும் ஹராம் என முஸ்லிம் சமுதாயத்தை மூலையில் முடங்க வைத்து விட்டார்கள்.

அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்?

அதோடு மட்டுமன்றி அரசியல் சாக்கடை என்ற பிரச்சாரம் வேறு. அரசியல் என்றால் என்ன? ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இருக்கின்ற, இருக்க முயற்சிக்கின்ற கட்சிகளை அரசியல் கட்சி என்போம். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை அரசியல் சார்பற்றது என்போம். அவர்கள் தங்களை சமுதாய அமைப்பு என்பார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அரசியலை சாக்கடை என்று அதிகமாகவே பிரச்சாரம் செய்வார்கள். அரசியல் சாக்கடை என்று சொன்னது யார்? அன்றைய அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்.

அரசியல் பற்றி அல்லாஹ்.

அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்றாஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். இன்னும் அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்4:54.

வேதத்தை ஞானத்தை தனது அருள் என்று சொன்ன அல்லாஹ் நன்கு கவனிக்க வேண்டும் அதே வரிசையில் ஆட்சி அதிகார அரசியலை தனது அருள் என்று குறிப்பிட்டுள்ளான்.

அண்ணன் வழியா? அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். 12:56 முஸ்லிம் அல்லாதவர் ஆட்சியில் நபி யூசுப் (அலை) அவர்கள் வகித்த அமைச்சர் பதவியையும் தனது அருள் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் சொல்கிறான் அரசியல் தனது அருள் என்று. அண்ணன் சொன்னார் அரசியல் சாக்கடை என்று. அரசியல் சாக்கடை என்பவர்கள் யார் வழியில் நடக்கிறார்கள். அண்ணன் வழியா?அல்லாஹ் காட்டிய வழியா? எது சரி சிந்தியுங்கள்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி.

திராவிட கட்சிகள் பிரபலமாக வேகமாக வளர விளம்பரமாக மக்களிடம் வரவேற்பை பெற மூல காரணமாக இருந்தது எவை. உழுபவனுக்கே நிலம் சொந்தம். இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை. இது போன்ற திட்டங்களுக்குரிய சட்டங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பன போன்ற தத்துவங்கள்தான். உழுபவனுக்கே நிலம் சொந்தம் யார் முன் மாதிரி. இடைத் தரகு இன்றி விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் (அதாவது உழவர் சந்தை) என இவை யாவும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி காலத்தில் போட்ட சட்டமாகும். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பது ஹதீஸ் குத்ஸியில் இருந்து எடுத்த தத்துவமாகும்.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல வேண்டிய முஸ்லிம்கள் பல்வேறு பெயர்களில் இஸ்லாமிய பிரச்சார மேடை அமைத்தார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு யாரை அழைத்தார்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் என திராவிட கட்சியினரை அழைத்தார்கள். இவர்கள் முஸ்லிம்களிடம் போய் பேச வேண்டுமே என்று இஸ்லாமிய நூல்களை படித்தார்கள். இஸ்லாம் கூறும் அரசியலை ஆட்சி முறையை அறிந்தார்கள். வாங்கும் சக்தியற்று வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த விலையில் ரேசன் மூலம் அரசாங்கத்தின் சார்பாக உணவு பொருள் கொடுக்கும் திட்டத்தை உணர்ந்தார்கள். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

பாய்மார்கள் (முஸ்லிம்கள்) விழித்துக் கொள்ளக் கூடாது தலையணை போட்டு உறங்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாக்கடை என்றார்கள். அரசியல் தனது அருள் என்று அல்லாஹ் சொன்னதை விட்டு விட்டு அரசியல் சாக்கடை என்று அண்ணன் சொன்னதை இஸ்லாமிய பிரச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் சொல்வது இஸ்லாமா? அண்ணன்கள் சொல்வது இஸ்லாமா?

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டால்தான் இவை மக்கள் நலனுக்கான இஸ்லாமிய சட்டங்கள் என்பதை பகிரங்கப்படுத்தி செயல்படுத்த முடியும். அதுவும் இஸ்லாமிய பிரச்சாரமாக அமைந்து விடும். இஸ்லாம் வளரும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆன பின்தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இன்ஷhஅல்லாஹ் விழித்தெழுவோம். அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆட்சி அதிகாரம் மூலம் செயல்படுத்தி அனைத்துக்கும் முன்மாதிரி இஸ்லாம்தான் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.
தொடரும் இன்ஷhஅல்லாஹ்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.