இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும்.

இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள்.

இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்ற வார்த்தை இதே அத்தியாயத்தில் 67ஆவது வசனத்திலும் சூரத்துல் அஃராப் 57ஆவது வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

இருந்தாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்துடையவர்கள் அனைவருமே 12:40தையே ஆதாரமாக கூறுவார்கள். அதில்தான் அவர்களுடைய ஆய்வும் கருத்தும் தவறானது என்பதற்குரிய ஆதாரமும் உள்ளது.

குர்ஆனில் ஒரு சில வசனங்களை அந்த ஒரு வசனத்தின் மூலமே முழுமையாக விளங்கலாம். ஒரு சில வசனங்களில் அந்த ஒரு வசனத்தின் ஒரு சிறு பகுதி பகுதியிலேயே முழுமையான விளக்கம் கிடைத்து விடும். பல வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும்.

குர்ஆனுக்கு விளக்கம் குர்ஆன் என்பதை அனைவருமே ஏற்றிருக்கிறோம். குர்ஆனின் ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் விளக்கமாக இருக்கும். ஒரு வசனத்துக்கு இன்னொரு வசனம் தொடர்புடையதாக இருக்கும். அந்த வசனங்கள் வெவ்வேறு அத்தியாயங்களிலும் இடம் பெற்றிருக்கும். முன் பின் வசனங்களாகவும் இடம் பெற்றிருக்கும். ஒரு வசனத்தை முழுமையாக விளங்க அதன் முன் பின் வசனங்களையோ, வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ள அந்த கருத்துடன் தொடர்புடைய வசனங்களையோ பார்க்க வேண்டும். 12:40ஆவது வசனத்தை பொருத்தவரை முழுமையாக விளங்க அதன் முன் வசனமான 39ஆவது வசனத்தையும் படிக்க வேண்டும்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம்தான் குர்ஆன் முழுவதுமே அல்லாஹ்வுடைய வார்த்தைகள்தான் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது. அன ரப்புக்குமுல் அஃலா என்று பிர்அவ்ன் சொன்னதை அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான். இதை பிர்அவ்ன் சொன்னான் என்றே சொல்லுவோம்.

மனிதர்களின் முன்னும் பின்னும் வலமும் இடமும் வந்து வழிகெடுப்பேன் என்று சைத்தான் சபதம் ஏற்றதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டியுள்ளான். இதை சைத்தான் சொன்னான் என்றுதான் சொல்லுவோம். அல்லாஹ் சொன்னான் என்று சொல்ல மாட்டோம். குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளதையெல்லாம் அல்லாஹ் சொன்னான் என்று சொன்னால் பல இடங்களில் அர்த்தம் அனர்த்தனமாக ஆகி விடும்.

12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று அல்லாஹ் சொல்லவில்லை. யூசுப் அலை அவர்களே தங்களது பிரச்சாரத்தின் போது இப்படி குறிப்பிடுகிறார்கள். இதைக் கூட சரியாகப் புரியாமல்தான் 12:40இல் அல்லாஹ் சொல்லி உள்ளதாக அவசர கோலத்தில் இந்தக் கருத்துடையவர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

யூசுப்(அலை) அவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்.
''சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளகின்ற ஒருவனான அல்லாஹ்வா? (12:39 )

''அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் பற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும் ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.(12:40)

இதுதான் யூசுப்(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம். இப்படி பிரச்சாரம் செய்த நபி யூசுப்(அலை) அவர்கள்தான் ''(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக் நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.'' 12:55 என்று உணவு அமைச்சர் என்ற ஒரு பொறுப்பை கேட்டுப் பெற்றுள்ளார்.

இப்படி பதவியை கேட்டுப் பெற்ற யூசுப் (அலை) அவர்கள் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்த யூசுப் (அலை) அவர்கள் நபியாக இருந்தும் முழு ஆட்சி அதிகாரத்தையும் கேட்டுப் பெறவில்லை. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் மன்னரின் ஆட்சியில்தான் ஒரு துறையை மட்டும் கேட்டுப் பெற்றார்கள். அந்த மன்னரின் கீழ்தான் மந்திரியாக இருந்துள்ளார்கள். அந்த நாட்டு மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதை செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும்தான் நபி யூசுப் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரமும் இந்த அத்தியாயத்தில்தான் உள்ளது.

அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் என்பது அல்குர்ஆன் 12:76இல் உள்ள ஒரு சிறு பகுதியாகும். இதன் மூலம் நபி யூசுப்(அலை) அவர்கள் ஏனைய விஷயங்களில் அந்த நாட்டின் சட்டங்களையே செயல்படுத்தி வந்திருக்கிறார். அவரது சகோதரரை எடுத்துக் கொள்ள அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை. ஆனால் அல்லாஹ்வின் சட்டத்தில் இடமிருக்கிறது.

அதனால்தான் திருடர்களுக்குரிய தண்டனை என்ன? (அல்குர்ஆன் 12:74) என்று அவர்களிடம் கேட்டுள்ளார்கள். நபி யாகூப் (அலை) அவர்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய சட்டத்தை கேட்டு செயல்படுத்தி இருக்கிறார். அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற வசனப்படி அல்லாஹ்வின் சட்டத்தைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கேட்ட கேள்வி அல்ல. அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார் அதனால்தான் என்பதும் குர்ஆன் மூலமே மிகத் தெளிவாக ஆகி விட்டது.

ஒரு ஆட்சியாளரின் கீழ் இருக்கும்போது அந்த ஆட்சியாளரின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். அந்த சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளில் இருக்கலாம். இது இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்ற ஆயத்துக்கு முரணானது இல்லை என்பதற்குரிய தெளிவான ஆதாரமாகும்.

எந்த நபி இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்களோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.

அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்தாமல் அமுல்படுத்த முடியாமல் ஒரு நாட்டின சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய அமைச்சர் பதவியையும் அல்லாஹ் தனது அருள் என்றே குறிப்பிட்டுள்ளான்.

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். (அல் குர்ஆன் 12:56)

ஜனாதிபதி, பிரதமர், எம்.பி, எம்.எல்.ஏ. என கவுன்சிலர் வரை அனைத்துமே அல்லாஹ்வுடைய அருள்தான். அல்லாஹ்வே தனது அருள் என்று சொன்ன பிறகு யார்தான் இதை ஹராம் என கூற முடியும். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் சம்பந்தமான சட்டங்களை தவிர மற்ற மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்கு கட்டுப்படலாம். அதை நடைமுறைப்படுத்தலாம். அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளாக அமைச்சர்களாக இருக்கலாம். அவை அல்லாஹ்விடத்தில் குற்றமாக ஆகாது. இதற்கு சான்றாகத்தான் சகோதரர்கள் ஆதாரம் என காட்டியுள்ள 12:40இல் இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை என்பதன் முன் பின் வசனங்களும் தொடர்புடைய வசனங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம். இன்ஷhஅல்லாஹ்.

Comments

அஸ்ஸலாமு அலைக்கும்
சரியான விளக்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இதேபோல் மென்மேலும் எழுத வாழ்த்துகள்.
வஸ்ஸலாம்
நூ.அப்துல் ஹாதி பாகவி
சென்னை. 81fromAbdul Hadi
hadi2abshar@gmail.com

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.