ஏழு வசனங்கள் எவை? அலீ (ரலி) அவர்களின் பதில்

அல் குர்ஆன் அத்தியாயங்களின்  துவக்கத்தில்  உள்ள  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  என்பது  அந்த  அத்தியாயங்களின்  ஒரு பகுதியா?  ஒரு அத்தியாயம் முடிவு பெற்று விட்டது. அடுத்த அத்தியாயம் துவங்குகின்றது என்பதற்கான  அடையாளமா?  


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது மொத்த குர்ஆனுக்கும் ஒரு தடவை எழுதப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலேயும் எழுதப்பட்டு இருக்கின்றது. குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களுக்கும் நம்பர் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதில் மட்டும் நம்பர் போடப்படவில்லை. நம்பர் போடாமல் காலியாகவே இருக்கின்றன.  


எல்லா அத்தியாயங்களிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு அடுத்து வரக் கூடிய ஆயத்களிலிருந்துதான் ஒன்று இரண்டு என்று வரிசையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்பர் போடப்பட்டுள்ளது.


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது குர்ஆனில் உள்ள ஆயத்தாக இருந்தால் அதற்கும் வசன எண் போட்டு இருக்க வேண்டுமே. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் ஏன் நம்பர் போடப்பவி்ல்லை? இப்படி சிலர் தங்கள் கருத்துகளுக்கான ஆதாரமாக வாதம் வைத்து வைத்து கேள்வி கேட்கிறார்கள்.  


குர்ஆனில் உள்ள வசனங்களுக்கு நம்பர் போடச் சொன்னது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள். அல்ல. ஸஹாபாக்களும். நம்பர் போடவில்லை. ஸஹாபாக்களால் தொகுக்கப்பட்ட மூல குர்ஆன் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்டு மியூஸியத்திலும் துருக்கி இஸ்தம்பூலில் உள்ள மியூஸியத்திலும் இன்றும் இருக்கின்றது. அதில் வசன எண்கள் கிடையாது.




பிற்காலத்தில் வந்தவர்களால்தான் நம்பர் போடப்பட்டது. நம்பர் போட்டவர்கள். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு நம்பர் போடாமல் விட்டு விட்டார்கள். நம்பர் போடாததால் குர்ஆனில் உள்ளது இல்லை என்று ஆகாது. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் குர்ஆனில் உள்ளதுதான். 113 அத்தியாயங்களுக்கும் முதல் வசனம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  என்பதுதான்.


அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்த போதுதான்  பல்வேறு கால கட்டங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப  அவர்களுக்குத்தான்  குர்ஆன்  அருளப்பட்டது. திருமறைக் குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன்  இந்த வசனங்களை  இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள். இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்.  இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள். இந்த இந்த செய்திகள் கூறப்படும் இந்த அத்தியாயத்தில் இந்த வசனத்தை  வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கட்டளையிடுவார்கள்.  அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள். இந்த விபரங்களை  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்து உள்ளார்கள். அஹ்மத் , திர்மிதீ , அபூதாவூத்  ஆகிய நுால்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.


திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (15;87) எவை? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது  அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்றார்கள். அதில் ஆறு வசனங்கள் தானே உள்ளன என்று மறுபடியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  (என்பதையும் சேர்த்து ஏழு வசனங்கள்)  என்று பதில் கூறினார்கள். இது  தாரகுத்னியில்  இடம் பெற்றுள்ளது.


இதிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்தில் மேல் உள்ள பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது. அந்த அந்த அத்தியாயங்களின் முதல் வசனம்தான் என்பதை தெளிவாக அறியலாம்.


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று ரசூல் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்  அபூதாவூத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த ஹதீஸ், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது  அத்தியாயம் முடிந்து விட்டது என்பதற்கான அடையாளமாக பின்னால் வந்தவர்கள் சேர்க்கவில்லை. அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டதுதான். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளைதான். அது குர்ஆனின் ஒரு பகுதிதான்  என்பவற்றுக்கு ஆதாரமாக உள்ளது. ஆய்வோம் அறிவோம் தெளிவு பெறுவோம் இன்ஷாஅல்லாஹ்.
நன்றி மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரய்யான் கேள்வி பதில் நிகழ்ச்சி  

அடுத்த கேள்வி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஒன்றாவது வசனம் என்பதற்கு நபி வழியில் ஆதாரம் உண்டா?


முந்தைய கேள்வி

சூரத்துல் பாத்திஹாவில் உள்ள 6,7 ஒரே வசனமா? 2 வசனங்களா?


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.