அல்லாஹ்விடமிருந்து வந்த தீர்ப்பு என்ன? ஒரு தப்பு எப்பொழுது நியாயமாகும்?

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரலி) அவர்கள் தலைமையில் சென்றவர்கள் ஆலோசித்து முடிவு செய்தார்கள். அவர்கள் முடிவு செய்தபடி.  போராட ஆரம்பித்தார்கள். வில்லிலிருந்து சென்ற அம்பால் ஒருவர் இறந்து விடுகிறார். இறந்தவர் அம்ர் இப்னு ஹழ்ரமி என்ற மக்காவாசியான அந்த கூட்டத்தின் தலைவர்.


உஸ்மான் இப்னு அப்துல்லாஹ், ஹகம் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விடுகிறார்கள். நவ்ஃபல் என்பவர் கொஞ்சம் பொருள்களோடு தப்பித்து ஓடி விட்டார். நான்கு பேரில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் ஓடிப் போய் விட்டார். மீதியுள்ள இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். 


போர் என்ற அடிப்படையில் சிறிய தாக்குதல் நடந்ததும் இதுதான். எதிரி கொல்லப்பட்டதும் இதுதான் முதல் முறை. இது வரை போர் என்ற பெயரில் ஏழு சம்பவங்கள் நடந்தும் ஒரு ஆளும் கொல்லப்படவில்லை. 


இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர். கனீமத்துப் பொருள் கிடைத்ததும் இதுதான் முதல் முறை. “கனீமாவில்அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பாகம் ஒதுக்கப்படும். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்படும் முதல் கனீமா பங்காகும்.


இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனாவுக்கு திரும்பி வந்தனர். இதுவரை ஒரு  பொருளும் முறியடிக்கப்பட்டு மதீனாவுக்குள் வரவில்லை. இதை கொண்டு போனால் மதீனாவின் மன்னர் முஹம்து நபி(ஸல்) அவர்கள் பாராட்டுவார்கள் என்று எண்ணிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வருகிறார்கள். 

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையை வெறுத்தார்கள் ஏன்? இரண்டு காரணங்கள். ஒன்று  நபி(ஸல்) அவர்கள் சொல்லாததை செய்தது. இன்னொன்று ரஜப் மாதத்தில் செய்தது. நான்கு மாதத்தில் அரபிகள் எந்த யுத்தமும் செய்ய மாட்டார்கள். அரபுகளின் நடைமுறையைத்தான் இஸ்லாமும் அங்கீகரித்து இருந்தது.

புனித மாதங்கள் குறித்து 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36  ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த எந்த மாதங்கள் என்று குர்ஆனில் கூறப்படவில்லை. இறைவனின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். 

வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும். நூல் : புகாரி : 3197, 4406, 4662, 5550, 7447 அபூ பக்ரா(ரலி) அறிவித்துள்ளார்கள். 

துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என தொடர்ந்து மூன்று மாதங்கள் . ஹஜ்ஜுக்கு முந்தைய மாதத்திலும் ஹஜ்ஜுக்கு பிந்தைய மாதத்திலும் ஹஜ்ஜுடைய மாதத்திலும் அரபுகள் சண்டை செய்ய மாட்டார்கள். அது போல்  ரஜப் மாதத்திலும் அரபுகள் சண்டை செய்ய மாட்டார்கள்.

இந்த சங்கைமிக்க மாதத்தில் நீங்கள் போர் புரிந்து விட்டீர்களே! புனிதமான மாதத்திலே ஒருவர் கொல்லப்பட்டு விட்டாரே. போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதம் ஆயிற்றே. போர் புரியும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே! கண்காணித்து வரும்படிதானே உங்களைச் சொன்னேன். என்று ரசூல்(ஸல்கண்டித்தார்கள்

கொண்டு வந்த பொருட்கள் கைதிகள் விஷயத்தில் எதுவுமே பேசவில்லை. அமைதி காத்தார்கள். முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மனதிலே நெருடலுடன் இருந்தார்கள். ஏற்கனவே முஸ்லிம்களை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி புனிதமிகு மாதத்தை கண்ணியப்படுத்த தெரியாதவர்கள் என்றும் விமர்சிப்பார்கள்.


இது எதார்த்தம். சாதாரணமாக முஸ்லிம்களைப் பற்றி விமர்சிக்கும்பொழுது இப்பொழுது சும்மா இருப்பார்களா? வெறும் வாய்க்கு அவ்ல் கிடைத்த கதை என தமிழில் ஒரு பழமொழி உண்டு. வெறும் வாயையே மென்று கொண்டு இருப்பான். அவன் வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருப்பானா? இன்னும் ஆர்வத்தோடு மென்று கொண்டு இருப்பான். ஜாகிர் நாயக் பற்றி சங்பரிவார்கள் பேசிக் கொண்டிருக்கிற மாதிரி.

சும்மாவே முஸ்லிம்களைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் மக்காவாசிகள். அவர்களுக்கு இப்படி ஒரு செய்தி கிடைப்பது இன்னும் இனிப்பான ஒன்றாக ஆகி விட்டது. இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்து விட்டு வந்து விட்டார்கள். வெளியில் தலை காட்ட முடியாதே என்கின்ற அளவுக்கு சூழல். ரசூல்(ஸல்) அவர்கள் மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சவில்லை. அல்லாஹ் குற்றம் பிடித்து விடக் கூடாதே என்ற அச்சம்தான்.

அவர்களையும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர்களும் அழகான ஒரு வாய்ப்பு ஆயிற்றே. இதை எப்படி நழுவ விடுவது என்று எண்ணி அவர்கள் பயன்படுத்தி விட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்களை ரொம்பவம் மனம் நோகச் செய்த ஒரு நிகழ்ச்சி இது. முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இது ஆனது. 

புனித மாதங்களைக் கூட முஹம்மது மதிப்பது இல்லை. எல்லாரும் சேர்ந்து செயல்படுத்தி வரக் கூடியதை மதிக்க வேண்டாமா? இந்த மாதத்தில் அரபுகள் சண்டை செய்வதில்லையே. சண்டை வந்தாலும் புனித மாதம் என்று விலகிக் கொள்வோமே. அப்படித்தானே நடந்து கொண்டு இருக்கிறோம். இந்த மரபையே முஹம்மது வீணாக்கி விட்டாரே என்று பரவலாக குற்றச்சாட்டுகள் கூறி வந்தார்கள்.

அந்த பொருட்களும் அப்படியே இருந்தன. எவ்வளவோ விலை உயர்ந்த பொருட்களாக இருந்த போதிலும் ரசூல்(ஸல்) அவர்களுக்கு அதன்பால் ஈடுபாடு இல்லை. மக்கள் மத்தியிலே விமர்சனமாக உள்ளது. அல்லாஹ்வின் புறத்திலுருந்து (வஹிச்) செய்தி எதுவும் வரவில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்தன. அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு வந்தது. அல்லாஹ்விடமிருந்து வந்த தீர்ப்பு என்ன? அல்லாஹ் வசனத்தை இறக்கி அருளினான்.


யஸ்அலுானக அனில் ஷஹரில் ஹராம்’ புனித மாதத்தில்  போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர்”

புனித மாதங்களில் போர் புரிவது பற்றி மக்கா காபிர்கள் கேள்விகளும் கேட்டு பரப்ப ஆரம்பித்து விட்டனா். யூதர்களும் கேலி கிண்டல் செய்பவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்பார்கள். புனிதமிக்க மாதங்கள் எதுவெல்லாம் சொல்லுங்க என்று. எப்படிப்பட்ட சூழல்? தர்ம சங்கடமான நிலை. அந்த சூழலில் நாம் இருப்தாக கற்பனையாக எண்ணிப் பார்த்தால்தான் அந்த வலி நமக்கு விளங்கும். அதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். புனிதமிக்க மாதங்களைப் பற்றி இவர்கள் உம்மிடத்தில் கேட்கின்றனர். அவர்களிடத்தில் நீங்கள் சொல்லுங்கள்.

குல் கிதாலுன் பீஹி கபீருன் 'அதில் (அந்த மாதங்களில்) போரிடுவது பெருங்குற்றமே’ அதாவது பெரும் பாவமே! மாற்று கருத்து இல்லை. என்னுடைய துாதரின் தோழர்கள்(ஸஹாபாக்கள்) தவறு செய்து விட்டார்கள் என்பதற்காக சட்டத்தை மாற்றி விடுவேனா? தப்பு தப்புதான். ஆனால். 

”வஸத்துா அன் ஸபீலில்லாஹ்” அல்லாஹ்வின் பாதையை விட்டும்(தடுப்பதும்), அதாவது மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைவதை தடுப்பதும்.

”வகுப்ருன்ம் பிஹி” (அல்லாஹ்வாகிய)அவனை ஏற்க மறுத்து நிராகரிப்பதும். 

”வல் மஸ்ஜிதில் ஹராமி” (ஹஜ் செய்ய வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்குள் வர விடாமல் தடுப்பதும். 

”வஇக்ராஜு அஹ்லிஹி மின்ஹுஅதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை (அங்கு வசித்தோரை) அங்கிருந்து வெளியேற்றுவதும் 

”அக்பரு இன்தல்லாஹ்” அல்லாஹ்விடம் தை விடப் பெரியது. அதாவது இவை அல்லாஹ்விடத்தில் மாபெரும் பாவங்களாகும்.

நுாற்றுக் கணக்கான பாவங்களை செய்து வைத்துக் கொண்டு. ஒரு பாவத்தை விமர்சனம் பண்ண வந்து விட்டீர்களா? தனது நபியின் தோழர்களான இவர்கள் செய்தது தப்புதான். அதை அல்லாஹ் மறுக்கவில்லை. அழகாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். புனிதமிக்க மாதத்தில் ஸஹாபாக்கள் போர் செய்தது பாவம்தான். ஆனால் இந்த பாவம் செய்ய அவர்களை துாண்டியது எது? துாண்டியது யார்?

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இணைவதை தடுத்தார்கள். அல்லாஹ்வுடைய அந்த வீட்டை வலம் வர வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்கள்.  இப்படிப்பட்டவர்களை எதிர்த்து போர் புரிந்தது. பெரிய விஷயம் ஒன்றும் இல்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டான். 

தப்புதான் ஆனால் ஒரு தப்பு எப்பொழுது நியாயமாகும்? ஒரு மனிதனை கொல்லுவது பாவம். அதே மனிதன் நம்மை கொல்ல வரும்போது? எப்படி பாவம் இல்லாமல் போகிறது. அது போல்தான். அந்த இடத்தை பொறுத்துதான். அதாவது சூழ்நிலைகளை வைத்துதான் நியாயம் எது? அநியாயம் எது? என தீர்மானிக்கப்படும்.

தை விடப் பெரிய பாவம் செய்தவர்கள் புனித மாதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கஃபாவில் தொழ வந்தவர்களை தடுத்தது நியாயமா? அந்த ஊருக்கு சொந்தக்காரர்களை ஊரை விட்டு விரட்டினார்களே அது நியாயமா? என்று கேட்டு விட்டு அல்லாஹ் சொல்கிறான்.

மக்கா காபிர்கள் செய்த இவை எல்லாம் அல்லாஹ் இடத்தில் பெரிய பாவங்களாக இருக்கின்றது

வல் பித்னது அக்பரு மினல் கத்லி” (நீங்கள் செய்யக் கூடிய) பித்னா (கலகம் விஷமம் - குழப்பம் இருக்கின்றதே அது) கொலையை விட பெரியது (கொடியது) என்று மக்கத்து காபிர்களின் செயல்களை படம் பிடித்து பட்டியலிட்டுக் காட்டி அல்லாஹ் தீர்ப்பு அளித்து விட்டான். 

தீர்ப்பு வந்ததும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எடுத்த அடுத்த நடவடிக்கைகள் என்ன?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்http://mdfazlulilahi.blogspot.in/2016/07/blog-post_10.html 

நன்றி மக்கள் உரிமை

அடுத்த தலைப்பு 
ஈகை நபியையா  இரக்கம் இல்லாதவர் போர்க் குணமும் பழி வாங்கும் எண்ணமும் உடையவர் என்கிறார்கள் பாவிகள்?

சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா?

முந்தைய தலைப்பு

அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்கள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.