போர் வசனங்கள் அடிப்படையில் போர் செய்வது நமக்கு கடமையா?


போர்களா?  போராட்டங்களா? தொடராசிரியர் அபூ இஸ்ராவின் எழுத்துக்கள் வித்தியாசமான கோணத்தில், தற்கால நடைமுறைகளையும் இணைத்து, எழுதி வருகிறார். வார வாரம் படிக்கத் துாண்டுகிறது. 
மௌலவி கனீமத்துஸ்ஸலாஹ் - புதுக்கோட்டை

போர்களா?  போராட்டங்களா? கட்டுரை நடப்பு செய்திகளை ஒப்பிட்டு, விறு விறுப்பாக தொடர்கிறது. தற்போதைய சமூகப் பார்வையுடன், மார்க்கத்தை கவலையுடன் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் தான் இதன் ஆசிரியர் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். வாக்கியங்கள் நீளமாக உள்ளன. அவற்றை சிறியதாக்கினால், இன்னும் படிக்க விறுவிறுப்பாக இருக்கும்.
ஷிப்லி- கீழக்கரை




போர் செய்ய வேண்டிய இக்கட்டான அந்த கால கட்டத்திலேயும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய தன்மை எப்படி இருந்தது? மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் போவதா? போரில் கலந்து கொள்வதா? என்று கேட்ட போர்ப்படை வீரருக்கு என்ன பதில் சொன்னார்கள்? மனைவியுடன் ஹஜ்ஜுக்கு போங்கள் என்று பதில் சொன்னார்கள்.(புகாரி1862)


அதே மாதிரி இன்னொரு மனிதர் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார் அல்லவா? அவரிடம் நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் என்று பதிலளித்தார். அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் (உழைப்பு) செய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி3004)


ஜிஹாத் என்ற அரபுச் சொல்லுக்கு விடா முயற்சி, கடின உழைப்பு என்றெல்லாம் பொருள்கள் இருக்கின்றது. அவற்றை விட்டு விட்டு. ஒரு சாரார் ஜிஹாத் என்ற சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற தவறான அர்த்தத்தை இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டார்கள். அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு "புனிதப்போர்"  என்ற பொருள் காணவே முடியாது.


இன்னொரு சாரார், ஜிஹாத் என்றாலே பயங்கரவாதம், மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல், தாக்கி அழித்தல், போர் தொடுத்தல் போன்ற பொய்யான விளக்கங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் மனதில் பதிந்து விட்டார்கள். இப்பொழுதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே து பற்றியும் விரிவாக விளக்க வேண்டிய கட்டாய காலத்தில் இருக்கிறோம். பின்னர் விரிவாகவும், தெளிவாகவும் விளக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.


அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு ஆள் போனால் சம்பளம் மிச்சம். இன்னொரு ஆள் போனால் இன்னும் மிச்சம் என்றா அனுப்பினார்கள். மனைவியுடன் பயணத் துணையாக கணவன் செல்லவும் பெற்றோருக்கு பணிவிடை செய்யவும்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். போருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. தற்காப்புக்காகத்தான் அவர்கள் போரிட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகளும் ஆதாரமாகும்.


எதிரிகளை சூழ்ச்சி செய்து கொல்ல வேண்டும். அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். நாடுகளை கைப்பற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன செய்து இருப்பார்கள். ஆசை காட்டி வந்தவர்களை விடாமல் வைத்து இருப்பார்கள். 13 ஆண்டுகள் மக்காவில் கஷ்டப்பட்டபொழுது கவலைப்படாதீர்கள் மதீனா போனதும் போர் புரிவோம் என்று ஆறுதல் கூறினார்களா? போரில் நிறைய கனிமத்து பொருள் கிடைக்கும்அதில் உங்களுக்கு பங்கு போட்டுத் தருவேன்  என ஆசை காட்டினார்களா? எதுவுமே கிடையாது.


போருக்கான எந்த முன் திட்டங்களும் எதிர்காலத் திட்டங்களும் இல்லை. கொடுமைகளுக்கு மேல் கொடுமைகளை அனுபவித்தார்கள். அந்த நிலையிலும், கொடுமை செய்தவர்கள் தனிமையில் கிடைத்தபொழுதும் அவர்களை ஒன்றும் செய்யாமல் விடுகிறார்கள். அப்படியானால் எவ்வளவு பெரிய மனப்பான்மை வேண்டும். அவர்களை இவ்வளவு உயர்ந்த மனிதாக ஆக்கியது எது? குர்ஆனும் ஹதீஸும்தான்.


இந்த உயர் தரமான மனப்பான்மை இஸ்லாத்தின் பார்வையில் பார்த்தால் மிகச் சாதாரணம். அல்லாஹ்வுக்காக இருக்கிறார்கள். அல்லாஹ் சொன்னதைச் செய்கிறார்கள் அவ்வளவுதான். குர்ஆன் ஹதீஸ் பெயரால் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றால் அவர்களிடம் இந்த மனப்பான்மைகளை பார்க்கவே முடியாது. எதிரியா கிடைத்த இடத்தில் அடி, உதை, குத்து, வெட்டு. எல்லாம் செய்து விட்டு அவன்தான் செய்தான் என்று துணிந்து பொய் சொல். இதுதான் குர்ஆன் ஹதீஸ் என்று கூறிக் கொண்டு கூலிக்கு மாரடிப்பவர்கள் நிலையாக இருக்கும், இருக்கிறது. உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ் சொன்னதைச் செய்வார்கள். அதை பார்க்கும்பொழுது கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அல்லாஹ்வுக்காக செயல்படும் முஸ்லிம்களுக்கு மிகச் சாதாரணம். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு என்ன கட்டளை இடுகிறானோ அதைச் செய்கிறார்கள். இல்லை என்றால் மறுமையில் அல்லாஹ் நம்மைப் பார்த்து கேள்வி கேட்பான் என்ற அச்சம். அந்த அச்சம்தான் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்த நபி(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்தது. குர்ஆன் ஹதீஸ்களோ இவர்களை புடம் போட்டது. கூலிக்கு மாரடிப்பவர்களோ குர்ஆன் ஹதீஸ் பெயரால் படம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.


அல்லாஹ் உடைய துாதரும் அவருடைய தோழர்களும் தற்காப்பு போர்தான் செய்தார்கள்அதுமட்டுமல்ல அல்லாஹ்வும் தற்காப்புக்காக போர் செய்வதற்கு மட்டும்தான் அனுமதியும் வழங்குகிறான். மதீனாவுக்கு வந்த பிறகுதான் எதிர்த்து போரிடக் கூடிய ஒரு அனுமதியை வழங்குகிறான்.


(நிராகரிப்போரால்) அநியாயத்தில் சிக்கி போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு, நிச்சயமாக அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள் எனும் காரணத்தால், அவர்களை எதிர்த்து போரிட அனுமதி வழங்கப்பட்டு விட்டது.(அல் குர்ஆன் 22; 39) 


இந்த வசனத்தின் மூலம் போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நேரத்தில் மட்டும்தான் அவர்களுக்கு அனுமதி. அவர்களாக திட்டமிட்டு யாரையும் அடிக்க முடியாது. யார் மீதும் போர் தொடுக்க முடியாது. நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில்தான் எதிர்த்து தற்காப்பு போரிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த தற்காப்பு போருக்கு ஏதாவது பின்னணி இருக்கிறதா? என்றால் இருக்கிறது.


கொடுமைப்படுத்தப்பட்டு சித்திரவதைப்பட்டு சொத்து சுகங்களை மக்காவிலேயே விட்டு விட்டு வந்தார்கள். அதன் பிறகு போனால் போகட்டும் என விட்டு இருந்தால். இந்த மாதிரி  எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட அல்லாஹ் அணுமதி வழங்கி இருக்க மாட்டான்ஆனால் அபு ஜஹ்ல் விடவில்லை. அபு ஜஹ்ல் சும்மா இருப்பானா? அவனது விளம்பரத்துக்காக. அவனைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக. ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பான்.


மதீனாவுக்கு வந்த பிறகும் அபு ஜஹ்லும் அவனது ஆட்களும் அவர்களால் முடிந்த அத்தனை வழிகளிலும் முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த மாதிரி தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டு வரும்பொழுதுதான், எட்டு தடுப்பு முயற்சிகள் நடந்த பிறகுதான். அல்லாஹ் போரை அனுமதித்து கடமையாகவும் ஆக்குகிறான். இந்த போர் கடமையாக்கப்பட்டதற்கு பின் நடந்ததைப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்.


அதுபோன்ற சம்பவங்கள்தான் இப்பவும் நடந்து கொண்டு இருக்கின்றதா? அது போன்ற ஒரு முயற்சியை நாம் இன்றும் செய்ய வேண்டுமா? அது போன்ற போர் வசனங்கள் அடிப்படையில் போர் செய்வது நமக்கு கடமையா? அது நமக்கு பொருந்துமா? என்பதை நாம் விளங்க வேண்டும்.


எப்போதும் போரிடக் கூடியவனாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும் போரிடும் எண்ணம் அவனது உள்ளத்தில் இருக்க வேண்டும். எந்த நாட்டில் அவன் வாழ்ந்தாலும் அந்த அரசாங்கத்தை எதிர்த்து போரிடக் கூடியவனாக அவன் இருக்க வேண்டும். இப்படி சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்?


குதிப அலைக்குமுல் கிதால்” (விசுவாசம் கொண்ட மக்களே) போர் செய்வது உங்கள் மீது கடமையாக ஆக்கப்பட்டுள்ளது என்ற குர்ஆன் (2;216) வசனத்தை ஆதாரமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வசனம். அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது என்பது உண்மை. அது எந்த கால கட்டத்திலே இறக்கி அருளப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு முன்னாலே பிடிக்க வேண்டியதை பின்னால் பிடிக்கிற கதையாக இருக்கக் கூடாது. அது மட்டுமல்ல அல்லாஹ் கடமையாக ஆக்கி இருக்கின்றான் என்றால். அல்லாஹ் இதை மட்டும்தான் கடமையாக ஆக்கி இருக்கின்றானா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.