எது விமர்சனமான பேச்சு? எது விவகாரமான பேச்சு?

இவ்வுலகில் அனைவருக்கும் மறுமையில் நல்லடியார்களுக்கு மட்டும் அருள்பாலிக்ககக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஸலாத்தும் ஸலாமும் காத்தமுன்நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றியோர் பின்பற்ற இருப்போர் மீதும் உண்டாகட்டுமாக. காத்தமுன்நபி என்பதை இந்த பகுதியில் அடிக்கடி சொல்ல வேண்டும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும். (அருகில் காதியானி பள்ளி உள்ளது)


மார்க்கத்தை தெரிய கேள்வி கேட்டு அறிவதில் ஒரு சிறப்பு இருக்கிறது. அதனால்தான் அல்லாஹ் யஸ்அலுானக அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் என்று கூறி கேள்வியையும் சொல்லி அதற்கான விளக்கத்தையும் சொல்லிக் காட்டி உள்ளதை திருமறையில் காணலாம். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் காட்டி தந்த வழிகாட்டுதலின்படிதான் நாம் தலைப்பை கேள்வியாக அமைப்போம்.

இதை இன்னும் விரிவாகவே பல நிர்வாகிகளிடம் ஆயத்து ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறோம் இருந்தும் கேள்வி மாதிரியான தலைப்பை மாற்றித் தருவதுதான் பலரது இயல்பாக உள்ளது. ரையான் நிர்வாகிகளும் அப்படித்தானோ என எண்ணினேன். அவர்கள் அப்படி இல்லை என்பதை நேரில் தெளிவுபடுத்தி விட்டார்கள். கைர். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரிவானாக.


يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ    

யாஅய்யுஅன்னாஸுத்தகூ ரப்பகுமுல்லரீ கலககும் மின்னப்ஸின்வ் வாஹித(தின்வ்வகல மின்ஹா zஸவ்ஜஹா வபஸ்ஸ மின்ஹா றிஜாலன் கதீரன்வ் வனிஸாஅ என்று பிரச்சாரம் செய்யப்படாத மேடையே கிடையாது. இந்த வசனம் உலகில் உள்ள மிகப் பெரிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

இன்று உலகில் பிரச்சனை இல்லாத இடமே இல்லை. அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் நிறப் பிரச்சனை என்றால் நம்நாட்டில் ஜாதிப் பிரச்சனை. அந்நியன் மண்ணியன் உட்பட மாட்டுப் பிரச்சனையானாலும் மனிதப் பிரச்சனையாக இருந்தாலும் வெட்டு குத்து என பாதிக்கப்படுபவன் மனிதன்தான். உடனே தலைவர்கள் என்று நம்பப்படுபவர்கள் வந்து விடுவார்கள்.

உயர்ந்தவன் என்ன தாழ்ந்தவன் என்ன உடல் மட்டுமே கறுப்பு உன் உதிரம் என்றும் சிகப்பு என்று எதுகை மோனையில் பேசுவார்கள், பாடுவார்கள்.

உன் கையை அறுத்துப் பார் அவன் கையை அறுத்துப் பார் இரண்டு பேர் ரத்தமும் சிகப்புதான் ஆகவே நாமெல்லாம் சகோதரர்கள், அண்ணன் தம்பிகள் மாமா மச்சான்கள் என்று கர்ஜிப்பார்கள். கை தட்டல் பெறுவார்கள்.

கொஞ்சமாவது அறிவுக்கு பொருந்துகிறதா? இந்த சித்தாந்தம்? ரத்தம் சிகப்பு என்ற காரணத்தினால் உறவு ஏற்பட்டு விடும் என்றால் மாட்டை மாமா என்றும் கிடாயை மச்சான் என்றும் அந்த தலைவர்கள் அழைப்பார்களா? அண்ணன் தம்பிகளாக மாமான் மச்சான்களாக வாழ இஸ்லாம் கூறும் காரணம்.

காரணம் மட்டுமல்ல ஆதாரம். எல்லாரும் ஒரே ஒருவரிலிருந்து வந்தவர்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் (அல்குர்ஆன் 4;1) என்ற ஆதாரம். இந்த ஆதாரத்தை விளக்கி சொல்ல வேண்டியவர்கள். இந்த வசனத்தை வெறும் வேத மந்திரமாகவே ஓதி விட்டுப் போய் விடுகிறார்கள்.

மன்ய்யுரீதுல்லாஹு பிஹி கைரன் யுபஸ்ஸிஹு பித்தீன் அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை கொடுப்பதாக நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். மார்க்கம் என்றால் என்ன? அல்லாஹ்வின் கட்டளைகள் இடம் பெற்றுள்ள அல்குர்ஆன். அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையான ஹதீஸுகள். ஆகிய இவை இரண்டும்தான் மார்க்கம்.

இந்த இரண்டின் அடிப்படையில் மார்க்கத்தின் விளக்கம் கிடைப்பது என்பது எல்லாருக்கும் கிடைத்து விடாது. இது அல்லாஹ் நாடிய மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதைத்தான் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் நாடியவர்களுக்கு மார்க்கத்தின் விளக்கத்தைக் கொடுக்கிறான் என்று. ஆகவே, நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகள் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இருக்கிறதா என்று அறிகின்ற பாக்கியம் இருக்கின்றதே அது யாருக்கு கிடைக்கும்?

அல்லாஹ்வின் அருள் மழை யார் மீது பொழிந்து கொண்டிருக்கிறதோ அவருக்கே கிடைக்கும்.

நாம் பேசப் போகின்றோம் என்றாலே நீங்கள் விவகாரங்களையே பேசுவீர்கள் பிரச்சனைகளையே பேசுவீர்கள் என்ற விமர்சனம் வந்து விடும். பள்ளி நிர்வாகிகள் நீங்கள்தான் பேச வேண்டும் என்று நேரில் சொல்வார்கள். பிறகு அவர்களே ஆட்களை செட்டப் செய்து அனுப்பி பேச வர வேண்டாம் என சொல்ல வைப்பார்கள்.

கதவை பூட்டிக் கொண்டு இருந்தாலும் கதவை தட்டி திறந்து சொல்லி விட்டுத்தான் போவார்கள். அது போன்று ரையானில் நடைபெறவில்லை. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு பேரருள் புரிவானாக.

அல்லாஹ் நம்மைப் பற்றி திருமறையில் எப்படி  புகழ்துள்ளான் தெரியுமா? அதை நமது இமாம் இன்று காலை சுபுஹு தொழுகையில் ஓதிக் காட்டினார். كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ    குன்தும் கைர உம்மதின் உக்ரிஜத் லின்னாஸ் மனித சமுதாயத்திலேயே மிகச் சிறந்த சமுதாயம் என்று.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் என்று அல்லாஹ் புகழ்துள்ளான். 3;110  எதனால் சிறந்த சமுதாயம் என்று புகழ்துள்ளான்? நன்மையை மட்டுமே எடுத்துச் சொல்வார்கள். விவகாரங்களை எல்லாம் பேசவே மாட்டார்கள் என்பதாலா? இல்லை. تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ  தஃமுரூன பில் மஃரூபி வதன்ஹவ்ன அனில் முன்கர் 

யார் நன்மையை எடுத்துச் சொல்வது போன்று தீமையை தடுக்கிறார்களோ அவர்களைத்தான் அல்லாஹ் சிறந்த சமுதாயம் என்கிறான். தீமையை தடுக்கும்போது அது விவகாரமாகத்தான் தெரியும். இஸ்லாம் அங்கீகரித்ததை சொல்லிக் காட்டுவது போல் அங்கீகரிக்காதததையும் சொல்லிக் காட்ட வேண்டும். சிறந்த உம்மத் என்பதற்கு அடையாளமே இரண்டையும் பேசுவதுதான்.

அல்லாஹ் யாரை வெற்றி பெற்றவர்கள் என்று சொல்கின்றான் தெரியுமா? அதையும் நமது இமாம் இன்று காலை சுபுஹு தொழுகைக்குப் பின் படித்துக் காட்டினார்.

ஓதிக் காட்டினார் என்றாலும் படித்துக் காட்டினார் என்றாலும் ஒரே பொருள்தான். இருந்தாலும் தொழுகையில் படித்துக் காட்டினார் என்றால் அது மக்களுக்கு விகாரமாகத் தெரியும் அதனால் நடைமுறைக்கு தக்கவாறு இதில் விட்டுக் கொடுத்து போவதில் தவறு இல்லை.

وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ வஉலாஇக ஹுமுல் முப்லிஹுன் அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்கிறானே அவர்கள் யார்? يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِؕ  யத்ஊன இலல் கைரி நன்மையின் பக்கம் அழைப்பவர்கள். அவ்வளவுதானா அத்துடன் நிறுத்தி விட்டானா? وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ வயஃமுரூன பில் மஃரூப் தீமையை தடுக்க வேண்டும். நல்வழியை நோக்கி அழைக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்கிறான் அல்லாஹ். 3 ; 103

இஸ்லாம் என்ன சொல்கிறது? சமுதாயம் என்ன செய்து கொண்டிருக்கிறது. பேசித்தான் ஆக வேண்டும் இதுதான் நமது பணி. எல்லாரும் இருப்பதைப் பேசுவார்கள் பிரச்சனை வராது. எல்லாரும் ஒன்றுபட்டு செய்வதை பேசுவார்கள் பிரச்சனை வராது. மார்க்கத்தில் இருக்கிறது சமுதாயத்தில் இல்லை ஜமாஅத்தாரிடம் இல்லை  என்பதைப் பற்றி பேசினால் பிரச்சனை வரத்தான் செய்யும்.

அடுத்த முறை பேச அணுமதிக்கவே மாட்டார்கள். சமுதாயத்திலும் ஜமாஅத்திலும் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினால் பிரச்சனை வரத்தான் செய்யும். அதனால்தான் அல்லாஹ் சொல்கிறான் وَتَوَاصَوْا بِالْحَقِّ வதவாசவ் பில்ஹக்கி அடுத்து என்ன சொல்கிறான்? 

மறுமை வெற்றிக்கான நான்கு பண்புகளை சொல்லி உள்ள அல்லாஹ் 3 ஆவது பண்பாக உண்மையைப் போட்டு உடைப்பதையும் 4 ஆவது பண்பாக அதனால் ஏற்படும் பிரச்சனையின் போது பொறுமைக் கொள்வதையும் சொல்லிக் காட்டி உள்ளான். அல்லாஹ் சொல்வதை கேட்பதா? அதிகாரம் உடைய நிர்வாகிகள் சொல்வதை கேட்பதா?

ஜும்ஆவுக்கு 2 பாங்கா ஒரு பாங்கா? 4 குத்பாவா ஒரு குத்பாவா? கைத்தடி அவசியமா? அவசியம் இல்லையா? அது கம்பாக இருக்க வேண்டுமா? இரும்பாலான வாளாக இருக்க வேண்டுமா? மிப்பருக்கு எத்தனை படிகள் இருக்க வேண்டும்? இமாம் மேற்கு நோக்கி ஏறும்படி படி அமைக்க வேண்டுமா? கிழக்கு நோக்கி ஏறும்படி படி அமைக்க வேண்டுமா? மிம்பர் படியில் எப்படியும் ஏறலாம் என்று ஒரு சாரார்.  இப்படித்தான் ஏற வேண்டும் என்று ஒரு சாரார். மிம்பருக்கு லிப்ட் வைக்கலாமா வைக்கக் கூடாதா?

இப்படியாக ஜும்ஆ மேடையில் ஏறி இறங்குவதற்குள் இத்தனை பிரச்சனைகள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் வாதங்கள். நடந்து கொண்டு இருக்கிறது.

நபிவழியில் ஒரு பாங்குதான், ஒரு குத்பாதான் அந்த ஒரு குத்பாவில்தான் இடையில் அமர வேண்டும். மஆஷர் என்ற பெயரில் முஅத்தின் குத்பா பண்ண வேண்டியது இல்லை. அதாவது பயான் பண்ண வேண்டியது இல்லை. மஆஷர் என்பது ஒரு பயான்தான் அதாவது அதுவும் குத்பாதான் என்று முஅத்தினுக்கும் தெரியாது. கேட்கிறவர்களுக்கும் தெரியாது. புரியாது. அஸாக் கம்பு சம்பந்தமான ஹதீஸ் பலஹீனமானது என்ற உண்மையைச் சொல்லுவோம்.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! என்பது அல்லாஹ்வின் கட்டளை 6:108.

அந்த அல்லாஹ்தான் மனிதன் ஈமான் கொள்ளும்போது சொல்ல வேண்டிய வார்த்தையாக லாஇலாஹ கடவுளே இல்லை என்பதைத்தான் முதலில் சொல்ல வைத்துள்ளான். அதன் பிறகுதான் இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர என சொல்ல வைத்துள்ளான். உலகில் கடவுள்களாக உள்ள அத்தனையும் கடவுள்கள் இல்லை என்ற உண்மையை முதலில் சொல்ல வேண்டும். இல்லாததை இல்லை என்று முதலில் அடையாளம் காட்ட வேண்டும். அதன் பிறகுதான் இருப்பதை சொல்ல வேண்டும். இதுதான் இஸ்லாம். அதுதான் தலைப்பு

அவர்கள் வணங்கும் கடவுள்களை திட்டாதீர்கள் என்று சொன்ன அல்லாஹ் அவை பேசுமா? பார்க்குமா? கேட்குமா? என்று விமர்சனம் செய்கிறான். விமர்சனம் செய்து பேசுவது என்பது வேறு விவகாரமாக பேசுவது என்பது வேறு
.
திட்டமிட்டு பொய் சொல்லி ஏமாற்றி பத்திரத்தை திருடியவனை, பள்ளியை திருடியவனை  திருடன் என அடையாளம் காட்டினால் அது விமர்சனம்.

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவனை தன் சுய நலனுக்கா எதுவும் செய்பவன் என அடையாளம் காட்டினால் அது விமர்சனம்.

அவன் தலையைப் பார், தொப்பியைப் பார், தலைப்பாகையைப் பார் என்று பேசுகிறார்களே வழி கேடர்களான பள்ளித் திருடர்கள். அது போல் பேசினால் அதுதான் விவகாரம். நாம் விவகாரமாக பேச மாட்டோம்எது விமர்சனமான பேச்சு? எது விவகாரமான பேச்சு? புரிகிறதா?

இஸ்லாத்தில் இருப்பதை இருப்பது போன்று சொன்னால். அசத்தியத்தை அசத்தியம் என்று சொன்னால். இஸ்லாத்தில் இல்லாததை செய்கிறீர்களே என்று சுட்டிக் காட்டினால். பிரச்சனைகள் வரும்.

நாம் மார்க்க ஆதாரத்தைக் கூறுவோம் அவர்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பார்கள். இறுதியாக நாங்களும் ஆதாரம் சொல்கிறோம் என்று அல்குர்ஆனிலிருந்தே ஆதாரம் தருவார்கள். என்ன ஆதாரம்?

அதீஉல்லாஹ வஅதீஉர்ரசூல வஊலில் அம்ரி மின்கும். அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் துாதருக்கு கட்டுப்படுங்கள் என்று சொன்ன அல்லாஹ் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்று சொல்லி உள்ளான். ஆகவே நிர்வாகிகளுக்கு கட்டுப்பட்டு 2 பாங்கு, 4 குத்பா, மஆஷர் என்பார்கள்.

பயின் தனாஸஃதும் பீ ஷய்இன் பருத்துாஹு இலல்லாஹீ வர்ரஸுல் என்று அந்த வசனத்திலேயே தீர்ப்பும் இருக்கிறது என்று நபி வழி நடப்போர் விளக்கம் அளிப்பார்கள்.

ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால், உங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் அதை அல்லாஹ்விடமும், அல்லாஹ்வின் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். என்று அந்த வசனத்திலேயே தெளிவு உள்ளது. தீர்ப்பு உள்ளது.

பலா வரப்பிக லாயுஃமினுான அல்லாஹ்வின் மீதே அல்லாஹ் சத்தியம் செய்து கூறும் வசனங்களில் ஒன்று இது. உங்களை  படைத்த ரப்பின் மீது சத்தியமாக அவர்கள் முஃமினாக ஆக முடியாது. யார் முஃமினாக ஆக முடியாது?

ஹத்தா யுஹக்கிமூக பீமா ஷஜரபைனஹும். அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில், பிரச்சனையில் நபியே உம்மை நீதிபதியாக தீர்ப்பு அளிப்பவராக ஏற்றுக் கொள்ளாதவரை அவர்கள்  முஃமின்களாக ஆகவே முடியாது. ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வந்து விட்டால் யாரை தீர்ப்பு அளிப்பவராக எடுக்க வேண்டும்?

அல்லாஹ்வின் துாதரை தீர்ப்பு அளிப்பவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்ஏற்றுக் கொண்டு என்ன செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் துாதர் என்ன சொல்லி உள்ளார்கள் என்று பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.  

பார்த்த பின் என்ன சொல்கிறார்கள் சரிதான் இது இன்றைய சூழலுக்கு  சமுதாயத்துக்கு ஒத்து போகாது என்கிறார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன தீர்ப்பு சொல்கிறான் தெரியுமா? நபி வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆக  மாட்டார்கள் 4;65

முழுமையான முஃமினின் பண்பாக  3 பண்புகளை அல்லாஹ் இங்கு சொல்லி காட்டி உள்ளான். ஒன்று அல்லாஹ்வின் துாதரை தீர்ப்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது என்ன தெரியுமா? அல்லாஹ்வின் துாதர்(ஸல்) கொடுத்த தீர்ப்பில் இரண்டாவது கருத்து கொள்ளக் கூடாது. உள்ளத்தினால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3 ஆவது பண்பு நபியின் தீர்ப்புக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இந்த 3 பண்புகளையும் முஃமின்களின் பண்புகளாக அல்லாஹ் நபிகளை நோக்கி சொல்லிக் காட்டி உள்ளான்.

பிரச்சனை என வந்து விட்டால் நபி வழியில் தீர்ப்புகளை தேட வேண்டும். அந்த தீர்ப்பை உள்ளத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு பரிபூரணமாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதுதான் இஸ்லாம். இதுதான் நமக்கு கொடுத்த தலைப்பு.

நபியின் தீர்ப்பை மறுத்தால் மாட்டோம் என்றால் அவர்கள் யார்? பிரச்சனைக்கு பயந்து அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று நாம் நழுவலாம். ஆனால் அல்லாஹ் தீர்ப்பு அளித்து விட்டான் அவர்கள் முஃமின்கள் அல்ல என்று.

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. வழிகாட்டலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழி காட்டல். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" ஒவ்வொரு வழிகேடும் நரகத்துக்கு இட்டுச்செல்லும்  என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனை ஒவ்வொரு குத்பாவிலும் சொல்வார்கள். அரபியில் மக்களுக்கு புரியாத பாஷையில் சொல்லிக் காட்டுவார்கள். பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகள் என்று சொல்லி விட்டு பித்அத்களோடு மட்டுமல்ல பொய்களுடன்தான் ஜும்ஆவை ஆரம்பிக்கிறார்கள். ரவாஊல் புகாரி முஸ்லிம் என்ற பொய். ரவாஊல் புகாரி என்று சொல்லத் தெரியாமல் ரவை புகாரி என்று சொன்ன முஅத்தின்களும் உண்டு. இது பற்றி சொல்ல வேண்டுமானால் ரையான் செயலாளர் நன்றாகவே சொல்லுவார்.

காலையில் கூட சொன்னார் மத்ஹப்வாதியான இன்ன மவுலவி ளயீபான ஹதீஸின்படி அமல்கள் செய்யலாம் என்ற கொள்கையில் உள்ளார் என்று. எல்லா இமாம்களும் பயிரா ஸஹ்ஹல் ஹதீஸி பஹுவ மத்ஹபி என்று கூறி உள்ளார்கள். 

மேலப்பாளையத்திலே அதிகமாக பின்பற்றுவதாக சொல்லப்படுகிற இமாம் ஷாபி(றஹ்) மிகத் தெளிவாக கூறி உள்ளார்கள். ஸஹுஹான ஹதீஸ்தான் எனது மத்ஹபு அதவாவது எனது கருத்து என்று கூறி விட்டார்கள். பிறகு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள். இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் கைப்பட எழுதிய உம்மு என்ற கிதாப் இன்றும் உள்ளது. அதில் உள்ளதற்கு மாற்றமாகத்தான் ஷாபி மத்ஹபு என்று சொல்லிக் கொள்பவர்கள் செயல்பாடுகள் உள்ளது.

உண்மையில் இவர்கள் ஷாபி இமாமையும் பின் பற்றுவது இல்லை. நபி(ஸல்) காலத்தில் சொன்னது போல் ஒரு பாங்கு சொல்ல வேண்டும் என்பதுதான் இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் கொள்கை. 

அந்த ஷாபி இமாம் இடம் அவர்களது மாணவர்கள் கேட்டார்கள். நீங்கள் நபிகளார் சொன்னது போல் ஒரு பாங்கு சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

ஸ்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டுவதற்காக கடைத்தெருவில் அதான் அழைப்பு விடுக்கப்பட்டதாக வருகிறதே. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு ஷாபி இமாம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா?


قال الشافعي وأيهما كان فالأمر الذي على عهد رسول الله صلى الله عليه وسلم أحب إلي

எது எப்படிப் போனாலும் நபிகளார் காலத்தில் எது இருந்ததோ அதுதான் எனக்கு விருப்பமானது என்று ஷாபி இமாம் சொல்லி விட்டார்கள். ஷாபி இமாம் விருப்பத்திற்கு மாற்றமாக 2 பாங்கு சொல்பவர்கள் எப்படி ஷாபி மத்ஹபாக இருக்க முடியும். ஷாபி இமாம் விருப்பத்திற்கு மாற்றமாக 2 பாங்கு சொல்பவர்கள் சொல்ல வேண்டும் என்பவர்கள்தான் ஷாபி இமாமின் எதிரிகள்.

நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்திலும் ஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும்   ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. 

ஸ்மான் (ரலி) காலத்தில்  ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஹதீஸ்கள் தமிழ் மொழி பெயர்ப்பாக வந்துள்ளன. தமிழில் மொழி பெயர்த்தவர்கள் யார்? மவுலவி  ரிபாஈ போன்ற தவ்ஹீது மவுலவிகளா? இல்லை. சுன்னத் ஜமாஅத் மவுலவிகள்தான்.

அதான் என்பதற்கு பாங்கு என்பது அல்ல நேரடி பொருள். பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்பதுதான்

பஅர்ரன முஹர்தின் என்று 7:44, ஆவது வசனத்தில் வருகிறது. பஅர்ரன முஹர்தின் அறிவிப்பாளர் அறிவிப்பார் என்பதற்கு இங்கே நரகத்தில் மலக்கு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று  பாங்கு சொல்வார் என மொழி பெயர்க்க முடியுமாஅநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது என்று மலக்கு சொல்வார் என்று அந்த வசனத்திலேயே விளக்கம் வந்து விட்டது.

9:3, ஆவது வசனத்தில் வஅரானும் மினல்லாஹி வரசூலிஹி  இந்த இடத்தில் அல்லாஹ்வும் ரசூலும் பாங்கு சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? யாராவது அப்படி மொழி பெயர்த்து உள்ளார்களா?

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர், வெளிப்படையாக அறிவிக்கின்றனர், பிரகடனம் செய்கின்றனர், எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு இப்படித்தான் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

12:70, ஆவது வசனத்தில் பஅர்ரன முஹர்தின் என்று உள்ளது ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!என்று அறிவிப்பாளர் அறிவித்தார் என்றுதான் மொழி பெயர்த்து உள்ளார்கள். பாங்கு சொன்னார் என்று யாரும் மொழி பெயர்க்கவில்லை.

22:27 ஆவது வசனத்தில் இங்கே வஅர்ரின் என்று உள்ளது இப்றாஹீம் நபி பாங்கு சொன்னார் என்று யாரும் மொழி பெயர்க்கவில்லை. ஸ்மான் (ரலி) காலத்தில்  ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் அழைப்பு விடுக்கப்பட்டது என்றால் என்ன அர்த்தம்?

புரிதல்களிலும் மொழி பெயர்ப்புகளிலும் உள்ள கோளாறுதான் இரண்டு பாங்கு என்பது. தக்பீர் சொல்லி கைகளை கட்ட வேண்டும் என்பதை தக்பீர் கட்டுதல், தக்பீர் கட்டுதல் என்று சொல்லி பழக்கப்பட்டதால் என்ன ஆயிற்று? 

பெருநாள் தொழுகையில் 7 தக்பீர் சொல்ல வேண்டும். ஜனாஸா தொழுகையில் 4 தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் கைகளை அவிழ்த்து கட்டுவதுதான் தக்பீர் என தவறாக விளங்கி அவிழ்த்து அவிழ்த்து கைகளை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு விஸிட் விஸாவில் அதிகமானவர்கள் அரபு நாடுகளுக்கு போகிறார்கள். விஸிட் என்ற ஆங்கில எழுத்துக்கு மேலே அரபியில் ஜியார என போட்டு இருக்கும். ஜியாரத் என்றால் நமதுார் மக்களுக்கு பஷீர் அப்பா தர்கா, நாகூர் தர்கா, மற்றும் கபுர்களுக்கு போவது என்றுதான் தெரியும். 

அலுவலகத்துக்கு அதிகாரி வந்துவிட்டு போனார் விஸிட் பண்ணிவிட்டு போனார் என்பதை, அரபு நாடுகளில் உள்ள அலுவலகங்களில் அதிகாரி ஜியாரத் பண்ணி விட்டு போனார் என்றுதான் சொல்வார்கள். சிறையில் உள்ளவர்களை பார்க்க போனாலும் ஜியாரத் என்றுதான் சொல்வார்கள்.

ரையான் செயலாளர் அவரது உஸ்தாதுகள் பெயர்களைச் சொல்லி அவர்கள் மாதிரி யாராலும் பேச முடியாது என்று இன்று காலை என்னிடம் சொன்னார். பேச்சுத் திறமை என்பது வேறு. உண்மையை பேசுவது என்பது வேறு. அவர்கள் உண்மை மார்க்கத்தை பேசவில்லை என்பதுதான் நமது நிலை.

ஜும்ஆ சொற்பொழிவைச் சுருக்கி தொழுகையை நீட்டுவதே நபி வழி ஆகும் ஆகவே வார்த்தைகளை நிறைவு செய்கிறேன். http://mdfazlulilahi.blogspot.in/2017/01/blog-post_21.html 

ஜும்ஆ உடைய நாள்  என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா

வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா?       
                 
[முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்?

முந்தைய சமுதாயங்களுக்கு (யூதர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு) ஜும்ஆ நாள் இருந்ததா

முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்தது

முதல் ஜும்ஆவை யார் ஆரம்பித்து வைத்து நடத்தினார்கள்

எப்பொழுது நடந்தது

எங்கு நடந்தது?

வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?

தனியார் இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?

சொந்த கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமா

கட்டிடமோ மேற்கூரையோ இல்லாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா

ஊருக்கு வெளியே ஜும்ஆ நடத்தலாமா?  

வக்பு செய்யப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா

ஆவது ஜும்ஆ எங்கு நடந்தது

குபா பள்ளியில் நடந்தது   முதல் ஜும்ஆவா

குபா பள்ளியில் நடந்தது யாருக்கு  முதல் ஜும்ஆ

விடையளித்து ஜும்ஆ ஒரு ஆய்வு என்றதலைப்பில் மேலப்பாளையம் மஸ்ஜித் ரய்யானில் (3.3.17) ஜும்ஆவில்   ஆற்றப்பட்ட  உரையைக் காண கீழே கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.