சிறையில் வாடும் முஸ்லிம்களின் அவலம் பாரீர்.

கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்தியாவில் எந்த வழக்குகளாக இருந்தாலும் அது பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே போனாலும் கைதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜாமீன் கொடுத்து விடுகின்றனர். 7 ஆண்டுகளாகியும் ஜாமீன் கொடுக்கப்படாத கைதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை, தமிழ்நாட்டில்தான் உள்ளனர். 

7 ஆண்டுகளாகியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் கைதிகளாக உள்ள உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் குஷ்டம், காதில் சீல் வடிதல், டி.பி, கண் பார்வை மங்கல், மன நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி விட்டனர். சரியான மருத்துவம் இன்றி மேலும் மேலும் நோய்களின் பாதிப்புகள் கூடிக் கொண்டே போகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, வேலூர்,கடலூர், பாளை, கோவை என தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைதிகளாக உள்ளனர். 

இதில் சமுதாய பிரச்சனைகளை ஒட்டிய கைதிகளாக உள்ளவர்கள் 365 பேர். கோவை சிறையில் மட்டும் 250 பேர் உள்ளனர். அதில் 166 பேர் கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதிகளாக உள்ளவர்கள். 

இவர்களில் அரசாங்கம் கூறி உள்ள குற்றச்சாட்டுப்படி பார்த்தாலும் குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக 10 பேர்தான் தேறுவார்கள். ஆனால் 166 பேர்களையும் உப்புசப்பு இல்லாத செக்ஷனில் ரிமாண்ட் கைதிகளாக வைத்துள்ளனர். 

உண்மையான குற்றவாளிகளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிப்பதாக இருந்தால் 2 அல்லது 3 ஆண்டுகள்தான் தண்டிக்க முடியும். 7 ஆண்டுகளாகியும் ஜாமீன் கூட கொடுக்காமல் ரிமாண்டில் உள்ளார்கள் என்றால் அதுதான் நமது சமுதாய நிலை.

வீரப்பன் குடும்பத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் நீதிபதிகள் உட்பட கண்டிக்கிறார்கள். பாபரி மஸ்ஜித்தை இடித்தவர்கள், பம்பாயில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றவர்கள், குஜராத் சம்பவம் உட்பட பல சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் குடும்பத்துடன் எந்தப் பிரச்சனையுமின்றி நன்றாக வாழ்கிறார்கள். 

முஸ்லிம்கள்தான் சிறையில் கைதிகளாக பல தொல்லைகளுடன் கஷ்டப்படுகின்றார்கள் என்றால், ஜகாத் கடமையாக்கப்பட்ட நமது சமுதாயத்தில் முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்களின் நிலை என்ன? 

உண்ண உணவின்றி! உடுக்க உடையின்றி! படுக்க வீடின்றி! நோய்க்குரிய சிகிச்சையின்றி! குழந்தைகளை படிக்க வைக்க பணமின்றி! வழக்குகளுக்குரிய வழக்கறிஞரின்றி இவர்கள் படும் வேதனைகளை வார்த்தையில் வடித்திட இயலாது.

சிறைவாசிகளில் உள்ளவர்களில் சிலரது தாய், தந்தையர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வீதிகளில் தங்கள் அன்றாட உணவுக்காக உதவி கேட்டு நிற்கின்றனர். சாப்பாடு கிடைக்காமல் தினமும் பப்பாளி பழம் தின்று ரத்த பேதிக்குள்ளானார்கள் சிலர். 

பர்தாவை பேண வேண்டிய பெண்கள் விதியை மீறி வீதிக்கும் சென்று விட்டனர். முஸ்லிம் அல்லாதவர்களிடம் சென்று முஸ்லிம் பெண்கள் தினக் கூலிகளாக உள்ளனர். படிக்க வேண்டிய வயதில் அவர்களது பிள்ளைகளும் வீதிகளில் நிற்கின்றனர். இருந்தும் வறுமை நீங்கவில்லை. 

வறுமை முஸ்லிமை காபிராக்கிட வழி கோலும் என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இந்த ஹதீஸ் கூறும் உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள நாங்கள், வறுமை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை எழுத வெட்கப்படுகிறோம். அப்படினால் கோவை சிறைவாசிகளின் சூழ்நிலைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சகோதரன் விடுதலையாகி தனக்கு கல்யாணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார் சகோதரி. ஜெயிலில் உள்ள சகோதரன் மன நோயாளி ஆகி விட்டான் என்ற செய்தி வருகிறது. அதிர்ச்சி அடைந்த சகோதரியும் மன நோயாளி ஆகி விடுகிறார். 

இனி தனக்கு வாழ்வு இல்லை என்று எண்ணிய சகோதரி மன நோயில் தலையில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து எறிந்து மரணம் அடைந்து விட்டார். 

7 ஆண்டுகள் ஆகி விட்டது இனி கணவன் விடுதலையாகி வரமாட்டான் என்று எண்ணிய பெண்கள் தலாக் வாங்கி விட்டனர். சிலர் குலா செய்து விட்டனர். இன்னும் சில எழுத முடியாத வரம்பு மீறுதல்களும் உண்டு.

குண்டு வெடிப்பு வழக்கு கைதிகளில் த.மு.மு.க.வின் கருணாநிதி நகர் கிளையைச் சார்ந்த 40 பேர்களுக்கு மட்டும் த.மு.மு.க. டிரஸ்ட் அமைத்து உதவி வருகிறது. கேரளாவைச் சார்ந்த 8 பேர்களுக்கு மட்டும் மதானி சகாய கமிட்டி உதவி வருகிறது. 

யாருமே உதவ முன் வராத முஸ்லிம் கைதிகளுக்காக சிறுபான்மை உதவி அறக்கட்டளை துவங்கினோம். குண்டு வெடிப்பு வழக்கில் உள்ள 115 பேர்களுக்கு பொறுப்பெடுத்து கவனித்து வருகிறோம். 

பூசணி அல்வா செய்து விற்று அதில் வந்த இலாபத்தை சிறைக்கைதிகள் வகைக்கு பயன்படுத்தினோம். சட்டப்பணிகளுக்கான வழக்கறிஞர்கள் கட்டணங்களுடன் சிறைபட்டோர் குடும்பத்தாரின் திருமணம், கல்வி, மற்றும் மருத்துவ உதவிகளும் செய்து வருகிறோம். 

மேலப்பாளையம் உட்பட சில சின்ன சின்ன வழக்குகளுக்கும் உதவி இருக்கிறோம். எங்கள் பொருளாதார சிக்கலையும் கோவை சிறைவாசிகளின் கஷ்ட்டங்களையும் உணர்ந்த மேலப்பாளையம் சிறைவாசிகள் நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டாம். கோவை மக்களை மட்டும் கவனியுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறி விட்டனர்.

ஓட்டு மொத்த முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதற்காக அனைத்து அமைப்புகளையும் அணுகும் பொறுப்பு ஆல் இண்டியா மில்லி கவுன்ஸிலிடம் ஒப்படைக்கப்பட்டது. 

முஸ்லிம் லீக், த.மு.மு.க, ஜமாஅத்துல் உலமா, ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட சுன்னத் ஜமாஅத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்களின் எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரால் புதிதாக அமைப்பு துவங்கியுள்ள பி.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் அவரது அமைப்பினர்கள் மட்டும் ஒத்துழைக்க மறுத்து விட்டார்கள்.

குண்டு வெடிப்பு வழக்கில் 2400 அரசு தரப்பு சாட்சிகள் உள்ளனர். இதில் 50 பேர்கள்தான் முஸ்லிம்கள். சாட்சி சொல்ல வந்த பெரும்பாலான இந்து சகோதரர்கள், அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகிவிட்ட முஸ்லிம் சிறைவாசிகள் மீது இறக்கப்பட்டு தங்களுக்கு சரியாக நினைவு இல்லை என்று கூறி விட்டனர். கோவை சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் முரளி அவர்கள், சம்பவம் நடந்தது உண்மை. 6 வருடம் ஆகி விட்டது. எனவே யார் என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை மறந்து விட்டது என்று கூறி விட்டார்.

முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக நேரடியாக களம் இறங்கி பாடுபட முடியாதவர்களெல்லாம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய மறந்து விட்டாலும் குறைந்த பட்சம் விடுதலையாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். 

ஆனால் தவ்ஹீத் தவ்ஹீத் என்று சொல்லிக் கொள்ளும் பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் அவர் புதிதாக துவங்கி இருக்கும் அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள அலாவுதீன் என்பவரும் போலீஸ் தரப்புக்கு ஆதரவாக திட்டமாக உறுதியான முறையில் சாட்சி கூறி விட்டார்கள். இவர்கள் சாட்சி கூறியதும் போலீஸ் அதிகாரிகளெல்லாம் பி.ஜே.யிடம் கை குலுக்கி நன்றி கூறி போலீஸ் படை புடை சூழ வழி அனுப்பி வைத்தார்கள். இந்த மவுலவிதான் முஸ்லிம் சமுதாய இளைஞர்களை இந்த கதிக்கு ஆளாக்கியவர் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

இப்படிப்பட்ட சூழுலில் சமுதாயம் உள்ளதால், முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ராம்ஜெத்மலானி, கபில்சிபில், கண்ணபிரான் போன்ற பிரபல வழக்கறிஞர்களை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். என்ன செலவாகும் என்பது உங்களுக்கே தெரியும். 

சிறையில் உள்ளவர்களை உங்கள் உடன் பிறந்த சகோதரர்களாக எண்ணி நீங்கள் தரக் கூடிய பொருளாதாரத்தைப் பொறுத்துதான் அடுத்து செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியும். ஆகவே அள்ளி வழங்கிடுவீர் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்.

.. இறைவனின் மீதுள்ள பிரியத்தால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். என்று அல்குர்ஆன் 76:8 வசனத்தில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ், இப்படி அல்லாஹ்வுக்காக வழங்கியவர்கள் சுவர்க்கத்தையும் பட்டையும் பரிசாக பெற்று உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள் என்று அடுத்தடுத்த வசனங்களில் கூறி உள்ளான். இந்த பாக்கியங்களைப் பெற்றுத் தரும் செயல்களில் ஒன்றான சிறைப்பட்டவர்களுக்கு உதவிடும் அமலைச் செய்து அந்த பாக்கியங்களை பெற்றிடுவீர்.

முஹம்மது ஸபயர் என்ற கோட்டை தங்கப்பா,
பொருளாளர்: சிறுபான்மை உதவி அறக்கட்டளை , றஹீம் பிளாஸ்டிக் ஹவுஸ், ஞானியார் நகர், சாரமேடு, கரும்பும்கடை, கோயம்புத்தூர்-8, 
போன்: 0422-3092021

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.