உருவப்படங்கள்,டி.வி. வீடியோக்கள் பற்றி இஸ்லாம்.

யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும்வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான் (அதாவது வேதனை செய்து கொண்டே இருப்பான்) - நபிமொழி.
அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்:-புகாரி, திர்மிதி, நஸயி

https://mdfazlulilahi.blogspot.com/1988/09/blog-post.html

உருவப்படங்கள் வரையும் வேலையை இனியும் எவரேனும் செய்தால் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை அவர் மறுக்கிறார். - நபிமொழி.
அறிவிப்பவர்:- அலி (ரலி) நூல்:-அஹ்மத்.


1. உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் இஸ்லாத்தில் தடை உள்ளதால் குழந்தைகளுக்கு உருவ விளையட்டுப் பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது ஹராமா?

2. உருவப்படங்கள் இருக்கும் இடத்தில் மலக்குகள் வர மாட்டார்கள் என்றால் கரன்ஸிகளில் உருவப்படம் உள்ளதே: அதை வைத்துக் கொண்டு தொழலாமா?

3. உருவப்படங்களைக் காட்டும் டி.வி. வீடியோக்களை வீட்டில் வைக்கலாமா? அதில் வரும் காட்சிகளைப் பார்க்கலாமா?

4. சினிமாவை ஹராம் என்று கூற நேரடியான ஹதீஸ் ஆயத்துகள் உண்டா?

5. ஆடியோ, வீடியோக் (சி.டி.கேஸட்) கடை நடத்தலாமா? இவைகளை நடத்த நம் இடங்களை வாடகைக்கு விடலாமா?

6. முயல் படம் வரையப்பட்டுள்ள முயல் ஜோடி கைலி போன்ற ஆடைகளை அணியலாமா?

7. உருவப் படங்கள் இருந்த வீட்டில் விருந்துண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள் என்று அபூதாவூத். இப்னுமாஜாவில் ஹதீஸ் உள்ளது. இன்று எல்லா வீடுகளிலும் உருவப்படங்கள் இருக்கிறதே இதன் நிலை என்ன?

8. ஒலிம்பிக் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பது கூடுமா?

9. உலகில் படைக்கப்பட்டது அனைத்தும் மனிதனின் தேவைக்குத்தானே? அப்படி என்றால் புகைப்படம் எடுப்பது ஏன் கூடாது?
இது போன்ற கேள்விகளுக்கான விரிவான விடை அல் ஜன்னத் பத்திரிக்கையின் 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் வெளியாகி இருந்தது. அதை இந்த நெட் உலகு மூலம் பழையவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு விளக்கமாகவும் வெளியிடுகிறோம்.

பதில்:- உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள் நிழற் படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் எனப் பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை நாம் விரிவாக ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

"எந்த வீட்டில் உருவச் சிலைகளும் நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்" என்பது நபிமொழி. ஆபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. உருவச் சிலைகள் என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் 'திம்ஸால்' 'தமாஸீல்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில் உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் வரமாட்டார்கள் என்று கடுமையான வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவச் சிலைகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று தெளிவாக உணரலாம். இந்தத் தடை எல்லா உருவச் சிலைகளுக்கும் பொதுவானதா? அல்லது இதில் விதிவிலக்கு ஏதும் உள்ளதா? என்று பார்ப்போம்.

நான், நபி (ஸல்) அவர்களுடனிருக்கும்போது பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும்போது அவர்கள் ஓடி ஓளிந்து கொள்வர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன்பின் என்னோடு அவர்கள் விளையாடுவர்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில். பனாத் (பொம்மைகள்) வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று உணரப்படுகின்றது. எனினும் இன்னும் சிலர், உருவச் சிலைகளுக்குப் பொதுவான தடை வந்துள்ளதால் இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத்தான் இருக்கும் என்ற கருத்துக் கூற இடமுண்டு. அந்தக் கருத்து சரி அல்ல என்பதற்கு ஆதாரமாக மற்றொரு ஹதீஸ் உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்று உறுதி செய்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் தபூக்கோ அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஓரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஷஷஆயிஷhவே இது என்ன?" என்றார்கள். "என் பொம்மைகள்" என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள் அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை ஓன்றையும் கண்டு "அதோ நடுவில் உள்ள அந்த பொம்மை என்ன" என்று நபி (ஸல்) கேட்டார்கள். "குதிரை" என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். "குதிரையின் மேலே என்ன?" என்று நபி (ஸல்) கேட்டார்கள். "இறக்கைகள்" என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். "குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?" என்று நபி (ஸல்) கேட்க. "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ" என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும் அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு நபி (ஸல்)சிரித்தார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அபூதாவூதில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

உயிர்ப் பிராணியான குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்னும் நபி (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல: தனது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்: இதன் மூலம் உயிரற்றவைகள் மட்டுமல்ல. உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்: அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது. உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல், மற்ற நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.

உயிரற்ற பொருட்களின் மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை எதுவுமில்லை.

"நான் ஓவியங்கள் வரைகின்றேன், அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள்!" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். "எல்லா ஓவியர்களும் நரகில்தான்: அவன் வரைந்த ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவைகளும் அவனை நரகில் வேதனைப் படுத்தும்: நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம், மற்றும் உயிரற்றவைகளை செய்து கொள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். இது புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

உயிரற்ற பொருட்களை செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாக அறிவித்து விடுகின்றது. ஆனால் இந்த அனுமதியிலும் விதி விலக்கு இருக்கின்றது. உயிரற்றவைகளான ஒரு சில பொருட்களைவைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் 'சிலுவை' பொறித்த எப்பொருளையும் அழிக்காமல் விடமாட்டார்கள்" என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி, அபூதாவூத், நஸயி, அஹ்மத் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவச் சிலைகளை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

முப்பரிமாணம் (THREE DIAMENTION) உள்ள உருவச் சிலைகளைப் பொறுத்தவரை சிறுவர்கள் விளையாடும் சிறிய பொம்மைகள், பிறரால் புனிதமாகக் கருதப்படாத பொருட்கள் ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது என்பதையும், உயிரற்ற ஏனைய பொருட்களின் உருவச் சிலைகளையும் வைத்துக்கொள்ளலாம் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம். இவற்றைத் தவிர எல்லா உருவச் சிலைகளையும் இஸ்லாம் முற்றகாத் தடை செய்கின்றது. குறிப்பாக நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின்போது கஃபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.

நல்லடியார்களுக்கென்று இதில் விதிவிலக்கு எதுவும் இல்லை: ஈமானுக்கு இதில்தான் ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இனி இரு பரிமாணங்களைக் கொண்ட உருவப் படங்களின் நிலையைக் காண்போம்

எந்த வீட்டில் உருவப் படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி: ஆபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது, 'உருவப் படங்கள்' என்று இங்கே நாம் மொழி பெயர்த்த இடத்தில் 'ஸுரத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது முன்னர் நாம் உருவச் சிலைகள் என்று மொழிபெயர்த்த 'திம்ஸால்' என்ற வார்த்தையும் இங்கே இடம் பெற்ற 'ஸூரத்' என்ற வார்த்தையும் உருவச் சிலைகளையும,; உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொல்லாகும். எனினும் பெரும்பாலும் 'திம்ஸால்' என்பது உருவச் சிலைகளுக்கும், 'ஸூரத்' என்பது உருவப்படங்களுக்கும் பயன்படுத்தப்படுவதால் இவ்வாறு மொழி பெயர்த்துள்ளோம்.

ஒரு சிலர் இந்த இடத்திலும் முன்னர் எழுதியுள்ள ஹதீஸிலும் உள்ள 'திம்ஸால்' ஸூரத். இரண்டுமே மூன்று பரிமாணமுள்ள உருவச் சிலைகளையே குறிக்கும் இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது. எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விசித்திரமான விளக்கம் தருகின்றர். ஹதீஸ்களை ஆராயும்போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றம் அடைந்தது. அதைக் கிழித்து எறிந்துவிட்டு "ஆயிஷாவே அல்லாஹ்வின் படைப்பைப்போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்.' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயி நூல்களில் இடம்பெற்றுள்ளது.

திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ள சிலை அல்ல. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள்தான் வரையப்பட்டிருக்கும்: அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். உருவச் சிலைகளும் உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்த நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

உருவப் படங்கள் முற்றுமாக தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது வரையப்பட்ட திரைச்சீலையைக் கண்டதும் அதை அகற்றினார்கள்: நான் அதை இரண்டு; தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இது இடம்பெற்றுள்ளது

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படம் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாயந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதிஸ் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது.

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து "சென்ற இரவு உங்கள் வீட்டிற்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்ன வென்றால் உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச்சிலையும் உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும் நாய் ஒன்றும் இருந்ததுதான் உருவச்சிலையின் தலையை அகற்றுமாறும் உருவப்படங்கள் உள்ள திரைசீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும் நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்!" என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹத{ஸ் அஹ்மத், அபுதாவூத், திர்மிதி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
;
தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்துகொண்டதாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும்போது உருவப் படங்களில் அனுமதிக்கப்பட்டவை எவை? தடுக்கப்பட்டவை எவை? என்பதை எவரும் அறிய முடியும். மதிப்புமிக்கவையாக கருதப்படும் படங்களே தடுக்கபடுகின்றன. ஷமதிப்பில்லாமல் மிதிபடும் தலையணையாக மாற்றுமாறு| ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும். எந்த உருவம் திரைச்சீலையாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ, அதே உருவம் தலையணையாக தரையில் போடப்படக் கூடியதாக ஆகும்போது நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை, மாறாக அதை அவர்களே பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.

அந்தச் சீலையை இரண்டாக கிழித்தபோது உருவமும் பாதி, பாதியாக சிதறுண்டு போயிருக்கலாம் அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக்கூடும். அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் "அதில் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்| என்கிறார்கள்.

'உருவம்' சிதைந்து விட்டதால் அதைப் பயன்படுத்தினார்கள் என்றால் அதைப்போய் உருவம் என்று சொல்லும் அளவுக்கு விபரம் அறியாதவர்களாக, அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா (ரலி) இருக்கவில்லை. சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சிலர் நினைப்பதுதான் காரணம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லி இருப்பார்கள்.

மேலும் சம்பந்தபட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப்படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள்வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால்தான் தலையனையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் "மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில்" என்று கூறியிருக்கத் தேவை இல்லை. இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறுகூட அவர்கள் கூறத் தேவை இல்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டுவிட்டால் அதைத் திரைச்சீலையாகவே மீண்டும் பயன்;படுத்தலாமே!

ஆக மதிப்பற்றவிதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்த தடை எதுவும் இல்லை என்பதே சரியாகும். தொங்கவிடப்படும் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப்படங்கள்: ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கப்படும் உருவப்படங்கள்: பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கப்படும் உருவப்படங்கள்: இவைகளெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பு இருக்கின்ற காரணத்தினால்தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகுபார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இதுபோன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலம் கட்டிக் கொடுக்கப்படும் உருவப்படங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப்படங்கள் (உதாரணம் தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு தினமணி பத்திரிக்கை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

இந்த இடத்தில் ஒரு வித்தியாசத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இவைகளை வைத்திருக்கத்தான் அனுமதியே தவிர, நாமே வரைய அனுமதி இல்லை. மற்றவர்கள் அவசியமான தயாரிப்புகளில் உருவப்படங்கள் வரைந்தே விற்பனை செய்தால் உருவப்படத்துக்கு மதிப்பு எதுவும் தராமல் பயன்படுத்தலாம். பொருளைப் பயன்படுத்தியபின் தூர எறிந்து விடலாம். நாமே அச்சிடுவதும் வரைவதும் கடுமையான குற்றமாகும்.

"யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும்வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான் (அதாவது வேதனை செய்து கொண்டே இருப்பான்) என்பது நபிமொழி. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதி, நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தில் ஏரானமான ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இதில் விதிவிலக்கு அளிக்கவே இல்லை. மரம் போன்றவைகளைத்தான் வரையலாம் என்ற அளவிற்கே அனுமதித்தார்கள். அந்த ஹதீஸை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

நமது தயாரிப்புகளில் உருவப் படங்கள் அச்சிடுவதையும், நமது நூல்களில், இதழ்களில் உருவப்படம் பொறிப்பதையும் தவிர்த்தே ஆகவேண்டும்.

"உருவப்படங்கள் வரையும் வேலையை இனியும் எவரேனும் செய்தால் முஹம்மதின்மீது இறக்கப்பட்ட(வேதத்)தை அவர் மறுக்கிறார்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அலி (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மதில் இடம்nபெற்றுள்ளது. உண்மை முஸ்லிம்களுக்கு இந்த ஒரு எச்சரிக்கை போதுமான தாகும்.

ரூபாய் நோட்டுகளில் உருவப்படங்கள் பொறிக்கப்படுகின்றன. அதற்கு மதிப்பளிக்கப்பட்டு பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்படுகின்றதே! அப்படியானால் ரூபாய் நோட்டுகளையும் பயன்படுத்தக்கூடாதா? என்று சிலருக்குத் தோன்றலாம். இதை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும்.

ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் மதிப்பு ரிஸர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருப்பதால்தான். அதில் உள்ள உருவப்படங்களுக்காக அல்ல. உருவப்படங்கள் இல்லாமல் வெளியிடப்படும் |நூறு ரூபாயை| நாம் தெருவில் எறிந்துவிட மாட்டோம். 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தபிறகு பல்பொடி மடிக்கத்தான் நாம் பயன்படித்தியிருப்போம். ரூபாய்க்கு உள்ள மதிப்பு, அதை கொடுத்து பொருட்களை வாங்கமுடியும் என்பதால்தான். அதில் பொறிக்கப்பட்ட படங்களுக்காக அல்ல. எனவே ரூபாய் நோட்டுகளைத் தாராளமாய் பயனபடுத்தலாம்.

நீங்கள் ரூபாய் நோட்டு அடிப்பதென்றால் (நான் கள்ள நோட்டை இங்கே சொல்லவில்லை: உங்களிடத்தில் ஆட்சி இருந்து நீங்கள் அடிப்பதென்றால்) உருவப்படங்கள் பெறிக்காமல் அடிக்க வேண்டும். இந்த வித்தியாசத்தை நாம் மறந்து விடக்கூடாது.

"மதிப்பற்ற வகையிலும் கூட உருவப்படங்களை பயன்படுத்தக்கூடாது" என்று கூறும் ஒரு சாரார் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டக் கூடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவப்படங்கள் பொறித்த சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும் ஆயிஷா(ரலி) அவர்கள் "நான் செய்த தவறு எதுவாயினும் அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத்தேடுகிறேன்" என்றார்கள். "அது என்ன திரைச் சீலை? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "நீங்கள் அதன்மேல் அமர்வதற்காகவும், சாய்ந்துகொள்வதற்காகவும் வாங்கினேன்"என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். "இந்த உருவத்தை வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். "நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள்!" என்று அவர்களிடம் கூறப்படும்" என நபி (ஸல்) கூறினார்கள். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் "சாய்ந்து கொண்டார்கள்" என்று வருகின்ற ஹதீஸை மாற்றிவிட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷh (ரலி) யின் விளக்கத்துக்குப் பின் வரைந்தவர்னளையே கண்டனம் செய்கிறார்கள் ஆயிஷா(ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் உருவப் படம் உள்ள தலையனையில் சாய்ந்து கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்களின் காலத்திற்க்குப் பின்பே ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அது மாற்றப்பட்டிருந்தால் நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே பயன்படித்தியிருந்ததைத் தூர எறிந்திருப்பார்கள், அதை ஆயிஷா(ரலி) அவர்களும் அறிவித்திருப்பார்கள்.

இது உருவப் படங்களின் நிலை! புகைப் படங்களுக்கும் இதுவேதான் சட்டம். கையால் வரைந்தால்தான் உருவப் படம். கருவியால் எடுத்தால் அது உருவப் படம் அல்ல என்ற விந்தையான வாதம் உப்பு சப்பு இல்லாத வாதமாகும்.

ஓரு காலத்தில் எழுத்தாணியால் எழுதினார்கள். அது வளர்ந்து பேனாக்களால் எழுதப்பட்டு, இன்று அச்சிடப்படுகின்றது. எழுத்துக்கலையின் விஞ்ஞான முன்னேற்றமே அச்சுக் கலை. அச்சிடப்பட்டதையும், கையால் எழுதியதையும் எழுத்துக்கள் என்றே கூறுவோம், அது போல ஓவியக்கலையின் விஞ்ஞான முன்னேற்றமே 'போட்டோ' (புகைப்படக்கலை) இது உருவப் படம் அல்ல என்று எவரும் கூற முடியாது. அதைவிட தத்ரூபமான படங்கள் பேட்டோவில் அமைகின்றன. போட்டோவுக்கு உருவப் படங்களுக்குச் சொன்ன எல்லா விதிகளும் விலக்குகளும் பொருந்தும்.

மார்க்கம் அனுமதிக்கின்ற உருவப் படங்கள் இருந்தால் அந்த வீடுகளுக்கு விருந்துண்ணச் செல்லலாம். இல்லையென்றால் தவிர்க்கத்தான் வேண்டும்.

எல்லாவற்றையும் இறைவன் நமக்காக படைத்துள்ளான் என்பதால் உருவப்படங்கள் கூடும் என்ற கேள்வியே சரியில்லை. பன்றி, நாய்களையும் இதே அடிப்படையில் உண்ண முடியுமா? நமக்காக எல்லாவற்றையும் படைத்த அதே இறைவன்தான், ஒரு சிலவற்றை நமக்குத் தடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழ வழியில்லை. முயல் Nஐhடி, கைலி அணியலாம். ரூபாய்கள் வைத்துக்கொள்ள லாம் என்பதை இந்த விளக்கங்கள் தெளிவாக்கும், T.V. வீடியோ வுக்கு வருவோம்.

T.V.வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியா கும். உருவப் படங்ளுக்கும், T.V. வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள். நமது முகத்தை கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் கண்ணாடியை எவறேனும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவ தில்லை. கண்ணாடியில் தெரிவதை நாம் படம் என்று சொல்லாம லிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவரைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

T.V.யும் இது போன்றதுதான். நாம் எதை ஒழிபரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளிபரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளிபரப்பினால்; நீங்கள் தெரிவீர்கள். எதையுமே ஒளிபரப்பாவிட் டால் எதுவுமே தெரியாது. T.V. -யில் எதுவும் பதியவுமில்லை, நிலைக்கவுமில்லை. எனவே உருவப்படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்கமுடியாது.

அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள், முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். (அன்னியப் பெண்ணை கண்ணாடி வழியாக பார்ப்பது கூடும் என்று லாஜிக் மஸாயில் கூறுபவர்களை விட்டுவிடுவோம். கூடாது என்ற கொள்கை உடைய நாம் எதற்காக கூடாது என்கிறோம்) உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதை யெல்லாம் பார்க்கக்கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.

ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம், கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். T.V.-யின் நிலையும் இதுதான், கல்வி, விவசாயம், மருத்துவம், தெழிற் பயிற்ச்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்ச்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். T.V.-யிலும் பார்க்கலாம், திரைப்படமாகவும் பார்க்கலாம்.

ஆபாசம், பச்சை வசனங்கள், கட்டிப் புரளுதல்(ஆண், பெண்) படுக்கையறைக் காட்சிகள், போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது, டி.வி. வழியாகவும் பார்க்கக் கூடாது. இசைக் கருவிகளை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி. வழியாகவும் கேட்கக் கூடாது இது தான் அதன் அடிப்படை.

மார்க்கம் அனுமதித்த பணிகளுக்கு என்றால் நமது இடத்தை வாடகைக்கு விடலாம். மார்க்கம் அனுமதிக்காத பணிகளுக்கு வாடகைக்கு விடக்கூடாது.

வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக்கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயணும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காக பெரும் பணம் செலவு செய்வது "வீண்விரயம் " என்ற அடிப்படையில் தடுக்கப் பட்டதாக ஆகும்.

கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை "வீடியோ " கேஸட்டுகளாக எடுத்துவைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக்கொள்ள உதவுகிறது என்பதால் அதற்க்கு தடையில்லை. கடைசியாக ஒரு போதனை.

பயனுள்ள பல காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள், தகுதியற்றவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகிறது. ஓரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளை காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.

இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிபட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கிவைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்கவேண்டும்.

மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும்போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பல முறை யோசிக்க வேண்டும். நாம் வேலையின் காரணமாக வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாடுகளுக்கோ சென்றபின் தன் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.

தன்னுடைய பிள்ளைகள் இதிலேயே மூழ்கி உள்ளம் கெட்டுபொகாமல், கல்வி கற்பதில் அக்கறை கொள்வார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் T.V. யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமானபோது உலக நடப்புகளையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும்போது மட்டும் வானொலிப்பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இதுபோன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.