நெல்லை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

செய்தி

நெல்லை உஸ்மான்.




அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கியுள்ள நெல்லை மாநகராட்சியில் சமீபத்தில் வரலாறு காணாத அளவுக்கு சொத்து வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் நலிந்துள்ள நெல்லை மாநகர மக்கள், அதிலும் குறிப்பாக மேலப்பாளையம், பேட்டை வாழ் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது இவ்வரி உயர்வு.

தமிழக முதல்வர் வரி உயர்வு கட்டாயமில்லை என்று அறிவித்துள்ள நிலையிலும் நெல்லை மாநகர நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,

பாதாள சாக்கடை திட்டத்தில் வைப்புத் தொகை வசூலிப்பதை உலக வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொண்ட பின்பு ரத்து செய்து விடலாம் என இன்றைய மேயரும், பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது நெல்லை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான மாண்புமிகு A.L.சுப்பிரமணியம் அவர்கள் மாமன்ற கூட்டத்தில் அன்று பேசியுள்ளார். அதனடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகை வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையீடுகள் செய்யப்பட்டும், நிவாரணம் கிடைக்காததால் 12.04.2008 அன்று கூடிய த.மு.மு.க.நெல்லை மாவட்ட நிர்வாக குழு மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் 22.04.2008 அன்று நடத்துவது என முடிவு செய்திருந்தது.

இப்போராட்டத்திற்கு த.மு.மு.க.மாநில துணைச் செயலாளர் S.மைதீன் சேட் கான் தலைமையேற்க மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் I.உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி, மாவட்ட துணை தலைவர் மைதீன் பாருக், மாவட்ட துணை செயலாளர்கள் மிஸ்பாஹி, அன்சர், மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்களும், பெண்களுமாக காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்ப திரண்டபோது மாநகராட்சி ஆணையாளர் திரு.மோகன் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேயர் மற்றும் மண்டல தலைவர்களை சந்திக்க செய்தார். அப்போது த.மு.மு.க.நிர்வாகிகள் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காலி மனைகளுக்கு அந்த மனைகளின் மதிப்பின் அடிப்படையில் வரி விதிக்காமல் சதுர அடி அடிப்படையில் வரி நிர்ணயம் செய்தல், மேலப்பாளையம் பகுதியில் உள்ள 22,000 வீடுகளில் 6,000ம் வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள 16,000 வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்க வலியுறுத்தல் மற்றும் வி.எஸ்.டி.பள்ளிவாசல் முதல் ஹாமீம்புரம் வரை உள்ள குடியிருப்பு மனைகளுக்கு முறையாக சர்வே செய்து 'ஏ' பிரிவு (குடிசைப் பகுதி) க்கான வரி விதிப்பு மேற்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

இதற்கான முறையான விளக்கங்கள் அளித்த மேயர் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு குறைந்த சதவிகிதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படும். மேலப்பாளையம் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு அண்ணா பல்கலைகழகத்தின் தொழில் நுட்ப பிரிவிடம் இதற்கான ஆய்வு அறிக்கை பெறப்பட்டு அத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். காலி மனைகளுக்கு சதுர அடி அடிப்படையிலேயே வரி நிர்ணயம் செய்யப்படும் போன்ற உத்திரவாதங்கள் அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

செய்தி

நெல்லை உஸ்மான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.