ஜும்ஆ உடைய நாள் என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா? வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா?


புனிதமிக்க ஜும்ஆ உடைய நாளின் சட்ட திட்டங்கள், சிறப்புக்கள், ஒழுங்குகள், நடைமுறைகள், அமல்கள் இப்படித்தான் ஜும்ஆ நாள் பற்றி தலைப்புகள் தருவார்கள். நமது ரய்யானில்  ஜும்ஆ ஓர் ஆய்வு என்ற பொது தலைப்பு தந்ததுடன், வித்தியாசமான முறையில். பல உட் தலைப்புகளையும் தந்துள்ளார்கள். அந்த உட்தலைப்புகளை கேள்விகளாகவும் அமைத்துள்ளார்கள். 


ஜும்ஆ உடைய நாள்  என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா

வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா?       
                 
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்?

யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஜும்ஆ நாள் இருந்ததா

முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்தது

முதல் ஜும்ஆவை யார் ஆரம்பித்து வைத்தது யார்? எப்பொழுது நடந்தது

எங்கு நடந்தது?

வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமாதனியார் இடத்தில் ஜும்ஆ நடத்தலாமாசொந்த கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமாகட்டிடமோ மேற்கூரையோ இல்லாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?  ஊருக்கு வெளியே ஜும்ஆ நடத்தலாமா?  வக்பு செய்யப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?  குபா பள்ளியில் நடந்தது  முதல் ஜும்ஆவா?  குபா பள்ளியில் நடந்தது யாருக்கு  முதல் ஜும்ஆஎன்று தலைப்பை வித்தியாசமாக தந்துள்ளார்கள்.

தொழுகை என்ற வணக்க வழிபாடுகளை தினமும் ஜமாஅத்தாக செய்தாலும் வாரம் ஒரு முறை அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்புத் தொழுகை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய சிறப்பு வணக்கமான இந்த ஜும்ஆ என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. யூதர்களும் கிறிஸ்தவர்களும் இந்த ஜும்ஆவை சிறப்பு வணக்க வழிபாடுகளை வார வாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதுதான்.

இதை கேட்கும்பொழுது நமது மனம் ஏற்றுக் கொள்ள, ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஜும்ஆ என்றால் சேகரிப்பு, அசோசிசன், சங்கமித்தல், ஒன்று திரட்டல் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளை தெரிந்து கொண்டாலும் விளங்கிக் கொள்ளலாம். 

இதைவிடத் தெளிவாக நம் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது பற்றி கூறும் 2:183 ஆவது வசனம் நமக்கு விடை அளிக்கிறது. விளக்கம் அளித்து தெளிவைத் தருகிறது.


 كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ  உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது என்று கட்டளை இட்ட அல்லாஹ் அத்துடன் நின்று விடவில்லை

کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ  உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டு இருந்ததைப் போல் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளான். 

இந்த ஆயத்தை படித்ததும் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஜும்ஆ இருந்ததை மனம் எளிதாக ஏற்றுக் கொள்ளும்.

நாம்தான் கடைசி சமுதாயமாக இருக்கிறோம். நமக்கு முன்னாள் 2 சமதாயத்தவர்கள் இருந்தார்கள். யூதர்களுக்கு சனிக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்பு, வணக்க வழிபாட்டு நாளாகக் கொடுத்தான் அல்லாஹ். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்பு, வணக்க வழிபாட்டு நாளாக அல்லாஹ்.  கொடுத்தான் முஸ்லிம்களாகிய நமக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்புத் தொழுகை நாளாக  வணக்க வழிபாட்டு நாளாக அல்லாஹ் தந்துள்ளான்.


நாம் கடைசி சமுதாயமாக இருக்கிறோம் ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி நபி. இதை இந்த பகுதியில் அடிக்கடி சொல்ல வேண்டும்.  அழுத்தமாகவும் சொல்ல வேண்டும். 

முஹம்மது (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருக்கிறார்கள். அதனால்தான் நாம் கடைசி சமுதாயம்.  நாம் கடைசி சமுதாயமாக இருந்தாலும் சிறப்புத் தொழுகை சிறப்பு வணக்க வழிபாடு செய்வதில் ஜும்ஆ நடத்துவதில் முந்தைய சமுதாயமாக முதன்மை சமுதாயமாக இருக்கிறோம். நபி(ஸல்) கூறினார்கள்

نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى.
'இறுதிச் சமுதாயமான நாம்தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்க புகாரி ,முஸ்லிம் ஆகிய நுால்களில் இடம் பெற்றுள்ளது.


வெள்ளிக்குப் பிறகு சனி, அதன் பிறகு ஞாயிறு அதன் பிறகு இடைவெளி பிறகு வெள்ளி சனி, ஞாயிறு. வார நாளின் துவக்கம் ஞாயிறு என்று சொல்லிக் கொண்டாலும். வார சிறப்பு வணக்க வழிபாடு தொடரில் அவர்கள்தான் கடைசியாக உள்ளார்கள். சமுதாயத்தவர்களால் அவர்கள் முந்தைய சமுதாயமாக இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய இந்த சிறப்பு வணக்க வழிபாட்டில் ஜும்ஆவில் முஸ்லிம்களாகிய நாம்தான் அல்லாஹ்வின் துாதர் சொன்னபடி முந்தைய சமுதாயமாக முதன்மை சமுதாயமாக இருக்கிறோம்.


வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி சிறப்பு வழிபாடு நடத்துவது என்பது இந்த உம்மத்துக்கு மட்டும் உள்ளது அல்ல. நமக்கு முன்னால் வாழ்ந்த உம்மத்தாருக்கும் ஒரு நாளை தேர்வு செய்து அந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான். 


அந்த அடிப்படையில் நமக்கும் வார வழிபாடு தந்துள்ளான் கிழமையை மாற்றி வெள்ளிக்கிழமையை சிறப்பு வழிபாடு நாளாக தந்துள்ளான். இது ஒரு புதுமுறை இல்லை என்பதை முதலில் பதிவு செய்து கொள்கிறோம். இது ஜும்ஆவைப் பற்றி தெரிய வேண்டிய முக்கியமான விஷயம். முதலாவதாக தெரிந்து கொள்ள வேண்டிய விபரமும் கூட.


மற்றவர்களுக்கு ஜும்ஆ உடைய நாளாக மற்ற கிழமைகளை கொடுத்த அல்லாஹ். நமக்கு ஜும்ஆ உடைய நாளாக வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து தந்துள்ளான். 

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்? இதுதான் முதலில் விளக்க வேண்டிய கேள்வி.  


அல்லாஹ் தேர்ந்து எடுத்து தந்துள்ள இந்த வெள்ளிக்கிழமைக்கு என்று பல சிறப்புகள் இருக்கின்றது. மற்ற கிழமைகளுக்கு இல்லாத சிறப்பு வெள்ளிக்கிழமைக்கு மட்டும் இருக்கின்றது.  இதை அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கின்றார்கள்.


அதில் முதலாவதான சிறப்பு, முக்கியமான சிறப்பு மனித சமுதாயம் தோன்றியது வெள்ளிக்கிழமைதான். அதாவது ஆதம்(அலை) அவர்கள் வெள்ளிக்கிழமைதான் படைக்கப்பட்டார்கள்.


ஆதம்(அலை) படைக்கப்பட்டார்கள்  என்றால் என்ன அர்த்தம்? அன்றுதான் மனித இனம் படைக்கப்பட்டது என்று அர்த்தம். மனிதன் என்ற இனத்தை படைப்பதற்கு அல்லாஹ் தேர்வு செய்த நாள் எது? என்றால் அது இந்த வெள்ளிக்கிழமைதான்.


ஆதம்(அலை) அவர்களை சொர்க்கத்தில் குடியேறச் செய்த நாள் எது? அந்த வெள்ளிக்கிழமையில்தான் அதாவது படைத்த அன்றைய தினத்தில்தான். அதே நாளில்தான்

அந்த சொர்க்கத்தில் ஒரு தவறு செய்ததால் ஆதம்(அலை) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அது நடந்த நாள் எது? அதுவும்  வெள்ளிக்கிழமையில்தான் நடந்தது.


சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்(அலை) அவரது மனைவியும்
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

என்று பாவ மன்னிப்பு தேடியதை 7:23 இல் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்.

ரப்பனா ழலம்னா அன்புஸனா படைத்து பரிபாலிப்பவனே எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். வஇன்லம் தஃபிர்லனா வதர்ஹம்னா எங்களை நீ மன்னித்து அருள் புரியவில்லை என்றால் லனகூனன்ன மினல் காசிரீன் நாங்கள் நஷ்டவாலிகளாக ஆகி விடுவோம் என்று துஆச் செய்தார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள்..


அந்த துஆவை ஏற்று அல்லாஹ் அவர்களை மன்னிக்க தேர்வு செய்த நாள் எது? வெள்ளிக்கிழமைதான். மனித குலத்தின் முதல் மனிதரான ஆதம்(அலை) அவர்களை மரணிக்கச் செய்தது  வெள்ளிக்கிழமைதான்.


அவரை படைத்து உயிர் கொடுக்க தேர்வு செய்த நாள் எது? வெள்ளிக்கழமைதான். அவரது உயிரை எடுத்து மரணிக்கச் செய்ய தேர்வு செய்த நாள் எது?  வெள்ளிக்கிழமைதான்.


ஆதம்(அலை) வெள்ளிக்கிழமை பிறந்து வெள்ளிக்கிழமை இறந்தார்கள். அது மாதிரி ஒட்டு மொத்த மனித சமதாயமும் வெள்ளிக்கிழமைதான் இறக்க இருக்கிறது.


வெள்ளிக்கிழமை ஆதம்(அலை) படைக்கப்பட்டார் என்றால் என்ன அர்த்தம்? அன்றுதான் மனித சமுதாயம் படைக்கப்பட்டது என்பதுதானே. மனித சமுதாயத்தை படைக்க  வெள்ளிக்கிழமையை தேர்வு செய்துள்ள அல்லாஹ். அந்த மனித சமுதாயத்தை அழிக்க தேர்வு செய்துள்ள நாள் எது?  வெள்ளிக்கிழமைதான். உலகம் அழியும் நாள் எது? அதுவும் வெள்ளிக்கிழமைதான்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


 عليهوسلم قال خير يوم طلعت في الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة

'சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்தநாளில்தான் அவர்கள் சொர்க்கத்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்''.: அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் “திர்மிதி“ யில் இடம் பெற்றுள்ளது.


மறுமையில் விசாரணை நடத்த அல்லாஹ் தேர்வு செய்துள்ள கியாம நாள் எது?  வெள்ளிக்கிழமைதான். இவைதான் வெள்ளிக்கிழமை பற்றிய முக்கிய சிறப்புகள். 

மற்றவர்களுக்கு வழங்கிய சனி, ஞாயிறைப் போல் இல்லாமல். நமக்கு தந்துள்ள வெள்ளிக்கிழமையில் இவ்வளவு சிறப்புகள் இருக்கின்றது. அதனால்தான் அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக தேர்வு செய்து தந்துள்ளான்.


இத்தனை சிறப்புகள் மிகுந்த இந்த நாளில் முதன் முதலில் முஸ்லிம்களின் ஜும்ஆ எப்பொழுது ஆரம்பித்தது?


இஸ்லாமிய வரலாற்றில் முதல் ஜும்ஆவை நடத்தி வைத்தது யார்? என்று கேட்டால் உடனே  பெரும்பாலானவர்கள் தரும் பதில் நபி (ஸல்) அவர்கள் என்பதாகத்தான் இருக்கும்.


முதல் ஜும்ஆ நடந்த பள்ளி குபா என்றும் சொல்வார்கள். சூரத்துல் ஜும்ஆ என்ற அத்தியாயத்தில் மதனீ என்று போடப்பட்டுள்ளதால். மதீனாவில் வைத்துதான் ஜும்ஆ கடமையாக்கப்பட்டது என்று எண்ணுபவர்களும் உண்டு. 

நபி (ஸல்) அவர்கள் குபா பள்ளியில் அவர்களது முதல் ஜும்ஆவை நடத்தினார்கள் என்பது உண்மை. நபி (ஸல்) அவர்கள் அவர்களது முதல் ஜும்ஆவை எங்கு நடத்தினார்கள் என்பது அல்ல கேள்வி?


முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்ததுயார் ஆரம்பித்து வைத்தது? யார் நடத்தினார்கள்எப்பொழுது நடந்தது? என்பதுதான் கேள்வி. அறிய வேண்டிய விஷயமும் கூட.


முதல் ஜும்ஆவை நடத்தும் பாக்கியத்தை அல்லாஹ் ஒரு ஸஹாபிக்குத்தான் கொடுத்தான். அவர் யார் என்று என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாமிய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.

40 ஆவது வயதில் நபியாக ஆன முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். இந்த 13 ஆண்டுகளும் இருண்ட காலம் என்றால் அது மிகையாக ஆகாது.. ஐந்து வேளை தொழுகையைக் கூட பகிரங்கமாக தொழ முடியாத காலம் அது. எனவே நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஜும்ஆ நடத்தவே இல்லை. நடத்த முடியவில்லை.


13 ஆண்டுகளாக ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் மடைமைகளுக்கும் சிலை வணக்கங்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்வதை  வழக்கமாக கொண்டு இருந்தார்கள். 

சிலர் சிந்திப்பார்கள். பலர் நிராகரிப்பார்கள். நபியின் 50 ஆவது வயதில், அதாவது நபியான பின் 10 ஆவது ஆண்டில் மதீனாவில் இருந்து ஒரு குழு ஹஜ் செய்ய வந்தார்கள். அதில் 6 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அந்த 6 பேரையும் பார்த்து நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் அருளால் 6 பேருக்கும் சிறிய மனமாற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து தடுமாற்றம் ஏற்பட்டது.


மதீனா திரும்பிய அந்த 6 பேரும் சிலருக்கு எத்தி வைத்தார்கள். 6 இரட்டிப்பாகி 12 பேராக ஆனார்கள். இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற முடிவுடன் மக்கா வர முடிவு செய்தார்கள். உடனே நபியை பார்க்க வர முடியாது. வந்தால் மக்கா காபிர்கள் விட மாட்டார்கள். எனவே ஹஜ் நேரத்தில்தான் ஹஜ் செய்வது போல் வந்து நபியை பார்க்க முடியும். ஹஜ் காலத்தில்  வந்தால் சந்தேகப்பட மாட்டார்கள்.


நுபுவ்வத்தின் 11ஆம் ஆண்டில் அந்த 12 பேரும் நபியைப் பார்க்க காத்து இருந்தார்கள். ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த அஸ்அத்பின்ஸுராரா அவர்கள் தலைமையில் மக்காவுக்கு வந்தார்கள்.  வந்து இஸ்லாத்தை ஏற்றார்கள். ஒரு உடன்படிக்கையையும் செய்தார்கள். 


உடன்படிக்கை என்றதும் இப்பொழுது உங்களில் பலருக்கு அகபா உடன்படிக்கை என்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்து இருக்கும். இவர்கள்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைய அடித்தளம் வகுத்தவர்கள்.


பத்ருப் போரில் அபுஜஹ்லை கொன்ற முஆது(ரலி) அவர்கள் உட்பட பல முக்கிய தோழர்கள்தான் இந்த 12 பேரில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த 12 பேரிடமும் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இங்கு ஜும்ஆ நடத்த முடியவில்லை என்று.


குழுவின் தலைவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) அவர்களுக்கு கட்டளை இட்டார்கள். “நீங்கள் போய் உங்கள் ஊரில் ஜும்ஆ நடத்துங்கள்” என்று அவர் போய் நபி(ஸல்) அவர்களின் 52 ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார். 


நபியாகி 12 ஆண்டுகள் ஆனதில் இருந்து மதீனாவில் ஜும்ஆ நடக்க ஆரம்பித்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மக்காவில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம் நடத்த முடியவில்லை. நடத்த முடியாது.


முதன் முதலில் ஜும்ஆ என்ற இந்த தொழுகையை நபியின் கட்டளைப்படி ஆரம்பித்து வைத்தவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழர்தான். 


கியாம நாள் வரை உலகில் எத்தனை ஜும்ஆக்கள் நடந்தாலும் அத்தனை ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு நன்மை அவருக்குப் போய் சேரும். நல்ல காரியத்தை யார் துவக்கி வைத்தாலும் அவருக்கு ஒரு பங்கு கியாம நாள் வரை கிடைக்கும் என்பதுதான் இஸ்லாமிய நியதி. இந்த மஸ்ஜித் ரய்யானின் ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழருக்கு கிடைக்கும். அதனால் நமக்கு உள்ள நன்மையில் எதுவும் குறைந்து விடாது.


தபூக் போரில் கலந்து கொள்ளாததால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டவர் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். அவர்களை அல்லாஹ் மன்னித்து ஆயத்துகளை இறக்கினான். அந்த ஸஹாபி வயதான காலத்தில் கண் தெரியாத நிலையை அடைந்தார். அவரை அவரது மகன்தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இன்று இந்த மாதிரி மகன்களை பார்ப்பது கடினம்.


அந்த மகனார் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் சொல்கிறார். எனது தகப்பனார் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் ஒரு துஆ செய்வார். வெள்ளிக்கிழமை மட்டும் இந்த துஆ செய்வார். அது என்ன துஆ?


வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் அஸ்அத்பின்ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் துஆச் செய்கிறார்கள். மகனாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன வாப்பா யாரும் சொல்லாத கேட்காத ஒரு துஆவை அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் கேட்கிறாரே என்று வாப்பாவிடம் கேட்டு விட்டார்.


தந்தையே வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ பாங்கு சொல்லி முடிந்த உடன் அஸ்அத்பின்ஸுராராவுக்கு துஆச் செய்கிறீர்களே என்ன விஷயம் என்று. அதற்கு கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்தான் இஸ்லாத்தில் முதன் முதலில் ஜும்ஆவை ஆரம்பித்து வைத்தவர். அவரது ஜும்ஆ உரை மூலம்தான் நாங்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டோம் என்று பதில் கூறி உள்ளார்கள்.


முதல் ஜும்ஆ எங்கு நடத்தினார்கள்? மதீனாவிலும் இது புது மார்க்கம்தானே அதனால் அங்கும் ஊருக்குள் நடத்த முடியாது. எனவே ஊருக்கு வெளியில்  பனுாபயாளா என்ற சமுதாயத்திற்கு சொந்தமான "ஹஸ்முன் நபீத்" என்ற இடத்தில். அதாவது தனியாருக்கு சொந்தமான கருங்கற்கள் நிறைந்த ஒரு நிலத்தில். மதீனாவிலிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஊருக்கு வெளியே அந்த ஜும்ஆவை நடத்தினார்கள். (அபூதாவுத் 903)

வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமாதனியார் இடத்தில் ஜும்ஆ நடத்தலாமாசொந்த கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமாகட்டிடமோ மேற்கூரையோ இல்லாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமாஊருக்கு வெளியே ஜும்ஆ நடத்தலாமாவக்பு செய்யப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?

இது போன்று ஏராளமான கேள்விகள் உலவி வருகின்றன. அத்தனைக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமான நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நடந்த இந்த முதல் ஜும்ஆவிலேயே தெளிவான பதிலும் தீர்ப்பும் இருக்கிறது. 

ஆக ஜும்ஆ என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்கள் நடத்துவதற்கு முன்னாடியே ஒரு நபித் தோழர் மூலம் மதீனாவில் நடத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம்.


சரி 2 ஆவது ஜும்ஆ எங்கு நடந்தது?. ஜவாஸா என்ற கிராமத்தில் உள்ள குழுவினர்கள் வந்து நபி(ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள் நீங்கள் உங்கள் ஊருக்குப் போய் ஜும்ஆ நடத்துங்கள் என்று. ஜவாஸா என்ற கிராமம்  பஹ்ரைனில் உள்ளது. ஆக பஹ்ரைனில் உள்ள ஜவாஸா என்ற இடத்தில்தான் 2 ஆவது ஜும்ஆ நடத்தப்பட்டது.


இதன் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்து குபா பள்ளியை கட்டினார்கள். 


لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ


நிச்சயமாக ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது (அல் குர்ஆன் 9:108) என்று அல்லாஹ்வால் புகழப்பட்ட பள்ளி குபா.


அந்த குபா பள்ளியில் நபி(ஸல்) ஜும்ஆ நடத்தினார்கள். நபிகளாரின் முதல் ஜும்ஆ நடந்த இடம்தான் குபா பள்ளி. அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக ஜும்ஆ நடந்த இடம். 


இதற்குப் பிறகுதான் மஸ்ஜிதுன் நபவியிலே ஜும்ஆ நடந்தது. ஜும்ஆ தொழும் நாம் இந்த வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.


இந்த ஜும்ஆ வெறும் வார வழிபாட்டு நாளா? இது நபி(ஸல்) அவர்கள் இடத்தில்  எப்படி்ப்பட்ட நாள் தெரியுமா? நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தை பெருநாள் என்று கூறி உள்ளார்கள். அதனால்தான் தொடராக இல்லாமல் ஜும்ஆ அன்று மட்டும் தனியாக நோன்பு வைக்கக் கூடாது என்று கட்டளை இட்டுள்ளார்கள்.


இது ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும் மட்டும் பெருநாள் அல்ல. உங்களுக்குப் பெருநாள் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா மாதிரி இல்லாவிட்டாலும் ஈதின் ஒரு சிறு பகுதி வெள்ளிக்கிழமை அன்று இருக்கிறது. அதனால் வெள்ளிக்கிழமை அன்று நாம் இருக்கும் ஆடைகளில் நல்ல ஆடைகளை உடுத்தி நன்றாக பொலிவுடன் இருக்க வேண்டும்.


கடமையான குளிப்பை எந்த தினத்திலும் குளித்து விடுவோம். ஜும்ஆ தினத்தில் கடமையான குளிப்பு இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை என்பதால் குளிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். பருவம் அடைந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கடமை என்று கூறி உள்ளார்கள்.

الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்க புகாரியில் 858 ஆவது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.  

வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக குளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக ஆக்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். தினமும் குளிப்பது சிறந்தது ஒரு நாளைக்கு 5 தடவை குளிப்பதற்கெல்லாம் தடை இல்லை. எவ்வளவு குளிர் பிரதேசமாக இருந்தாலும்  வெள்ளியன்று குளிப்பது கட்டாய கடமை். அதோடு நின்றுவிடவில்லை.

: لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ
எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி உள்ளார்கள். இதுவெல்லாம் பெருநாளின் அம்சம். வெள்ளியன்று முஸாபர் மாதிரி, எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி இருக்கக் கூடாது. எவ்வளவு நன்றாக இருக்க முடியுமோ அவ்வளவு நன்றாக இருக்க வேண்டும் என்பதை பல ஹதீஸ்களில் காண்கிறோம்.

வெள்ளியன்று நோன்பு வைக்கக் கூடாது என்பதில் இருந்து வெள்ளியன்று நன்றாக சாப்பிடவும் வேண்டும் என்பதையும் அறிகிறோம்.


இது மட்டும் ஒழுங்காக நடக்கிறது. ஜும்ஆவுக்கு கூட போகாமல் அழுக்கு ஆடையுடன் அடிப்படியில் நிற்பதுதான் வெள்ளியன்று நாம் செய்ய வேண்டிய கடமை என்று வளைகுடாவாசிகள் எண்ணி விட்டார்கள் போலும். 

வளைகுடாவாசிகள் வாழ்வு அப்படித்தான் உள்ளது. குறிப்பாக. வெள்ளி முழுவதும் நமக்கு பெருநாள். எனவே பெருநாளின் அம்சம் அன்று முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும்.

لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ « لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ

ஜும்ஆ அன்று யார் தொழ வராமல் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களை வீட்டோடு வைத்து எரித்து விட வேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார்கள். ஜும்ஆவை புறக்கணிப்பது அவ்வளவு பெரிய குற்றம்.


ஐவேளை தொழுகையை பற்றி கூறும் குர்ஆன் ஐந்தையும் நேரடி பெயரில் குறிப்பிடவில்லை. ஹதீஸ்களில்தான் நேரடி பெயரைக் காண்கிறோம். ஜும்ஆ தொழுகைப் பற்றி நேரடியாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விடுங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது என்கிறான் அல்லாஹ்.


இந்த வசனத்தில் (62:9) ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் கட்டளை இதை யாரும்  விளங்கிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. 

பல ஊர்களில் இன்றும் சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்துவதில்லை. பல ஊர்களில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்கின்றனர்.

தெருவில் சிறு கடை வைத்திருப்பவர்கள், திண்ணை கடை வைத்திருப்பவர்கள். ஜும்ஆ  கடமையாகாத பெண்கள் சிறுவர்களைக் கொண்டு வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்றும் வர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும் குற்றமாகும்.

தொழுகைக்கு விரைந்து செல்ல வேண்டும்; வியாபாரத்தை விட்டு விட வேண்டும் ஆகி இரண்டு கட்டளைகளைந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இட்டுள்ளான். 

தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்ற ஒரு கட்டளை மட்டும் இட்டிருந்தால் மற்றவர்கள் மூலம் வியாபாரத்தைச் செய்து கொள்ளலாம்.  2 கட்டளைகள் இருக்க தான் மட்டும் தொழுகைக்குச் வந்து விட்டு வியாபாரத்தை மற்றவர்கள் மூலம் நடத்தினால். ஒரு கட்டளையை  மீறயவராகவும் பாவியாகவும் ஆகிறார் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அல்லாஹ் நம்மை காப்பானாக.
வஆகிர் தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

மேலே கண்டவை  03.03.2017 மஸ்ஜிதுர் ரய்யான்   ஜும்ஆ உரையிலிருந்து.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/03/blog-post.html 

மஸ்ஜிதுர் ரய்யானுக்கு இடம் வாங்க
உங்கள் நன்கொடைகள்  DD/ செக் மூலம் எனில்
MADRASA RAYYAN EXECUTIVE COMMITTEE
CANARA BANK  MELAPALAYAM BRANCH
Account No : 1109 101 126262
IFSC CODE : CNRB 0001109
MICR CODE : 627015005
என எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி ;
மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி.
மத்ரஸா ரய்யான் நிர்வாகக் கமிட்டி அலுவலகம்.
91. வெள்ளை கலீபா சாகிப் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி 627005.


வெளி நாட்டில் உள்ளவர்கள் நன்கொடைகளை செக்காக மட்டுமே  அனுப்ப வேண்டும். 

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு மேலப்பாளையம் மஸ்ஜித் ரய்யான் செயலாளர் ஏயன்னா இப்றாஹீம் ஆலிம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். உங்கள் மீது அல்லாஹ்வின் பேரருள் பொழியப்பட துஆச் செய்தவானாக தங்களின் மேலான கவனத்திற்கு.

மஸ்ஜிதுர் ரய்யான் என்ற பள்ளிவாசல் கணேசபுரம் என்ற பகுதியில் உள்ள முஸ்லிம்களை கவனத்தில் கொண்டு. அவர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்துள்ள பள்ளி. இதை அறிந்ததும், இந்த கணேசபுரம் இடத்தை வாங்க உதவ வேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தி இருப்பான். அல்லாஹ்வின் அருளால் கொடை உள்ளம் கொண்ட உங்கள் நன்கொடைகளை தருவீர்கள். உங்கள் பங்களிப்பை செய்வீர்கள். இந்த நம்பிக்கை எனக்கு உண்டு. இருந்தாலும் கோரிக்கை வைப்பது கடமை என்பதால் கோரிக்கை வைத்துள்ளேன். 72:18 குர்ஆன் வசனப்படி அல்லாஹ்வுக்கு சொந்தமான பள்ளிக்கு உதவுகிறோம் என்ற நிய்யத்துடன் உதவ உள்ள  உங்களுக்கு அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக ஆமீன்.
                                              அன்புடன்
                           மவுலவி ஏயன்னா இப்றாஹீம் மஹ்ழரி
                               செயலாளர் மஸ்ஜித் ரய்யான்


நிச்சயமாக பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை (அல்குர்ஆன் 72:18)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார் (புகாரி 2442)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.